2
ஆலயம் கட்டுவதற்கான ஆயத்தங்கள்
சாலொமோன் யெகோவாவின் பெயருக்கு ஒரு ஆலயத்தையும் தனக்கு ஒரு அரச அரண்மனையையும் கட்டுவதற்கு உத்தரவிட்டான். சாலொமோன் சுமை சுமப்பதற்கு 70,000 பேரையும், குன்றுகளில் கற்களை வெட்டுவதற்கு 80,000 பேரையும் அவர்களை மேற்பார்வை செய்வதற்கு 3,600 பேரையும் கட்டாய வேலைக்கு அமர்த்தினான்.
சாலொமோன் தீருவின் அரசன் ஈராமுக்கு ஒரு செய்தியை அனுப்பினான். அதில்,
“நீர் எனது தகப்பன் தாவீது கேட்டபோது, அவர் குடியிருக்க அரண்மனை கட்டுவதற்கு கேதுரு மரங்களை அனுப்பினீர், அதுபோல் எனக்கும் கேதுரு மரங்களை அனுப்பும். நான் யெகோவாவாகிய என் இறைவனின் பெயருக்கு ஒரு ஆலயத்தைக் கட்டி, அதை அவருக்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன். அவருக்கு நறுமண தூபங்காட்டுவதற்கும், பரிசுத்த அப்பங்களை வைப்பதற்கும் ஒவ்வொரு காலையிலும், மாலையிலும், ஓய்வுநாட்களிலும், அமாவாசை நாட்களிலும், எங்கள் இறைவனாகிய யெகோவா நியமித்த பண்டிகை நாட்களிலும் தகன காணிக்கைகளைச் செலுத்துகிறதற்கும் அந்த ஆலயத்தைக் கட்டப்போகிறேன். இக்காணிக்கைகள் இஸ்ரயேலுக்கு ஒரு நிரந்தர நியமமாயிருக்கிறது.
“நான் கட்டப்போகிற ஆலயம் மேன்மையுடையதாய் இருக்கும். ஏனெனில் எங்கள் இறைவன் மற்ற எல்லா தெய்வங்களையும்விட மேலானவர். வானங்களும் வானாதி வானங்களும் அவரை உள்ளடக்க முடியாதிருக்க அவருக்கு ஆலயத்தைக் கட்டக்கூடியவன் யார்? அப்படியிருக்க அவருக்கு முன்பாகத் தகனபலியிட ஒரு இடத்தை கட்டுவதைத்தவிர அவருக்கு ஆலயத்தைக் கட்டுவதற்கு நான் யார்?
“எனவே தங்கம், வெள்ளி, வெண்கலம், இரும்பு ஆகியவற்றால் வேலைசெய்யக்கூடிய திறமையுள்ளவனும், ஊதா, கருஞ்சிவப்பு, நீலம் ஆகிய நூலினால் வேலைசெய்யக்கூடிய திறமையுள்ளவனும், செதுக்கு வேலைசெய்வதில் அனுபவமுள்ளவனுமான ஒருவனை அனுப்பும். அவன் யூதாவிலும் எருசலேமிலும் எனது தந்தை தாவீது நியமித்திருக்கிற திறமையுள்ள தொழிலாளிகளுடன் சேர்ந்து வேலைசெய்யட்டும்.
“அத்துடன் நீர் எனக்கு லெபனோனிலிருந்து கேதுரு, தேவதாரு, அல்மக் வாசனை மரங்களையும்* அனுப்பிவையும். ஏனெனில் அங்கே உள்ள உமது மனிதர் மரம் வெட்டுவதில் திறமையுள்ளவர்கள் என்பது எனக்குத் தெரியும். எனது மனிதர்களும் அவர்களுடன் வேலை செய்வார்கள். அவர்கள் எனக்கு ஏராளமான வெட்டிய மரத்துண்டுகளைக் கொடுப்பார்கள். ஏனெனில் நான் கட்டப்போகும் ஆலயம் மிகப்பெரியதாயும், கெம்பீரமானதாயும் இருக்கவேண்டும். 10 நான் மரங்களை வெட்டும் உமது வேலையாட்களுக்கு 3,000 டன் அளவுள்ள கோதுமை, 3,000 டன் வாற்கோதுமை, 20,000 குடம் திராட்சை இரசம், 20,000 குடம் ஒலிவ எண்ணெய் ஆகியவற்றைக் கொடுப்பேன்” என்றிருந்தது.
11 சாலொமோனின் கடிதத்திற்கு தீருவின் அரசன் ஈராம்,
“யெகோவா தமது மக்களை நேசிப்பதனால் உம்மை அவர்களுக்கு அரசனாக்கியிருக்கிறார்” எனப் பதிலனுப்பினான்.
12 பின்னும் ஈராம்,
“வானத்தையும், பூமியையும் படைத்த இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவுக்குத் துதி உண்டாவதாக! அவர், அரசன் தாவீதுக்கு நுண்ணறிவும், பகுத்தறிவும் நிரம்பிய ஞானமுள்ள ஒரு மகனைக் கொடுத்திருக்கிறார். அவன் யெகோவாவுக்கு ஒரு ஆலயத்தையும் தனக்கு ஒரு அரண்மனையையும் கட்டுவான்.
13 “நான் ஈராம் அபி என்னும் திறமையுள்ள ஒருவனை உம்மிடத்திற்கு அனுப்புகிறேன். 14 அவனுடைய தாய் தாண் நாட்டையும், தகப்பன் தீரு தேசத்தையும் சேர்ந்தவர்கள். அவன் தங்கம், வெள்ளி, வெண்கலம், இரும்பு, கல், மரப்பலகை ஆகியவற்றிலும், ஊதா, நீலம், கருஞ்சிவப்புநூல், மென்பட்டு நூல் ஆகியவற்றிலும் வேலைசெய்யப் பயிற்றுவிக்கப்பட்டவன். அவன் எல்லாவித செதுக்கு வேலைகளையும், எல்லாவித பொறிக்கும் வேலைகளையும், எந்த வகை மாதிரி வடிவத்தையும் செய்யக் கூடியவனுமாயிருக்கிறான். அவன் உம்முடைய திறமையான கைவினைஞர்களோடும் உமது தகப்பனும், எனது தலைவனுமான தாவீதின் திறமையான கைவினைஞர்களோடும் சேர்ந்து வேலைசெய்வான்.
15 “எனவே என் தலைவனே, நீர் சொன்னபடி கோதுமை, வாற்கோதுமை, ஒலிவ எண்ணெய், திராட்சை இரசம் ஆகியவற்றை உமது வேலைக்காரருக்குக் கொடுத்து அனுப்பும். 16 நாங்கள் உமக்குத் தேவையான மரங்களை லெபனோனில் வெட்டி, அவற்றைக் கட்டு மரங்களைப்போல் கட்டி, கடல் வழியாக யோப்பாவரை அனுப்புவோம். அப்பொழுது நீர் அதை எருசலேமுக்குக் கொண்டுபோகலாம்” எனவும் எழுதியிருந்தான்.
17 தன் தந்தை தாவீது இஸ்ரயேலில் இருக்கும் அந்நியரை கணக்கெடுத்ததுபோல, சாலொமோனும் கணக்கிட்டபோது அங்கே 1,53,600 பேர் இருந்தனர். 18 அவன் இவர்களில் 70,000 பேரை சுமை சுமப்பவர்களாகவும், 80,000 பேரை குன்றுகளில் கல் வெட்டுபவர்களாகவும், 3,600 பேரை வேலை செய்பவர்களுக்கு மேற்பார்வையாளர்களாகவும் நியமித்தான்.
* 2:8 2:8 வாசனை மரங்களையும் அல்லது சந்தன மரங்கள் 2:10 2:10 அதாவது, சுமார் 3,000 டன் என்பது எபிரெயத்தில், 20,000 கோர் என்றுள்ளது