24
யோவாஸ் ஆலயத்தைத் திருத்தியமைத்தல்
யோவாஸ் அரசனானபோது அவன் ஏழு வயதுடையவனாயிருந்தான், அவன் எருசலேமில் நாற்பதுவருடம் ஆட்சிசெய்தான். அவன் தாயின் பெயர் சிபியாள். அவள் பெயெர்செபாவைச் சேர்ந்தவள். ஆசாரியன் யோய்தாவின் நாளெல்லாம் யோவாஸ் யெகோவாவின் பார்வையில் சரியானதையே செய்து வந்தான். யோய்தா அவனுக்கு இரண்டு மனைவிகளைத் தெரிந்தெடுத்துக் கொடுத்தான். அவனுக்கு மகன்களும் மகள்களும் இருந்தார்கள்.
சிறிது காலத்தின்பின் யோவாஸ் யெகோவாவின் ஆலயத்தைப் புதுப்பிக்கத் தீர்மானித்தான். அவன் ஆசாரியர்களையும் லேவியர்களையும் ஒன்றாக அழைத்து அவர்களிடம், “யூதாவின் பட்டணங்களுக்குப் போய் உங்கள் இறைவனின் ஆலயத்தைத் திருத்துவதற்கு இஸ்ரயேலரிடமிருந்து வருடாவருடம் கொடுக்கப்படவேண்டிய பணத்தைச் சேகரியுங்கள். அதை இப்பொழுதே செய்யுங்கள்” என்றான். ஆனால் லேவியர்களோ உடனே செயல்படவில்லை.
ஆகவே அரசன் பிரதான ஆசாரியன் யோய்தாவை அழைப்பித்து அவனிடம், “யெகோவாவின் அடியவன் மோசேயினாலும், இஸ்ரயேல் சபையாலும் சாட்சிக் கூடாரத்திற்கென நியமிக்கப்பட்ட வரியை யூதாவிடத்திலும் எருசலேமிடத்திலும் இருந்து வாங்கிவரும்படி, நீர் ஏன் லேவியர்களை விசாரிக்கவில்லை?” என்று கேட்டான்.
அந்த கொடியவளான அத்தாலியாளின் மகன்கள் இறைவனின் ஆலயத்தை உடைத்து, யெகோவாவினுடைய ஆலயத்திற்குள் இருந்த பரிசுத்த பொருட்களைக்கூட பாகாலுக்குப் கொடுத்திருந்தார்கள்.
எனவே அரசனின் கட்டளைப்படி பெரிய பெட்டியொன்றைச் செய்து யெகோவாவின் ஆலய வாசலில் வெளியே வைத்தார்கள். பாலைவனத்தில் இறைவனின் அடியவனாகிய மோசே இஸ்ரயேலரிடம் கேட்டுக்கொண்டபடி யெகோவாவுக்கென வரி கொண்டுவரப்பட வேண்டுமென்ற ஒரு அறிவித்தல் யூதாவிலும், எருசலேமிலும் பிரசித்தப்படுத்தப்பட்டது. 10 எல்லா அதிகாரிகளும், எல்லா மக்களும் தங்கள் கொடைகளை மகிழ்ச்சியுடன் கொண்டுவந்து அந்தப் பெட்டி நிரம்பும்வரை அதற்குள் போட்டார்கள். 11 அந்தப் பெட்டி லேவியர்களால் அரசனின் அதிகாரிகளிடம் உள்ளே கொண்டுவரப்படும் போதெல்லாம், அதிலே அதிக அளவான பணம் இருப்பதை அவர்கள் கண்டார்கள். அரச செயலாளரும் பிரதான ஆசாரியனின் அதிகாரியும் வந்து பெட்டியிலுள்ளவற்றை எடுத்துவிட்டு, அதைத் திரும்பவும் அதற்குரிய இடத்தில் கொண்டுபோய் வைப்பார்கள். இவ்வாறு அவர்கள் தொடர்ந்து செய்து பெருந்தொகைப் பணத்தைச் சேகரித்தார்கள். 12 அரசனும், யோய்தாவும் அப்பணத்தை யெகோவாவின் ஆலயத்திற்கு வேண்டிய வேலைசெய்யும் மனிதர்களிடம் கொடுத்தார்கள். அவர்கள் யெகோவாவின் ஆலயத்தை புதுப்பித்துக் கட்டுவதற்கென சிற்பிகளையும், தச்சர்களையும் கூலிக்கு அமர்த்தினார்கள். அத்துடன் ஆலயத்தைத் திருத்துவதற்கான இரும்பு வேலை, வெண்கல வேலை பார்ப்போரையும்கூட கூலிக்கு அமர்த்தினார்கள்.
13 வேலைக்குப் பொறுப்பாய் இருந்த மனிதர் கடும் உழைப்பாளிகளாய் இருந்தார்கள். அவர்களின் மேற்பார்வையில் திருத்த வேலைகள் தொடர்ந்து நடைபெற்றன. அவர்கள் இறைவனின் ஆலயத்தை அதன் முந்திய வரைபடத்தின்படி திரும்பவும் கட்டி வலுவுள்ளதாய் அமைத்தார்கள். 14 ஆலய வேலைகளை முடித்தபோது, உடனே அவர்கள் மிகுதியாயிருந்த பணத்தை அரசனிடமும் யோய்தாவிடமும் கொண்டுவந்தார்கள். அதைக்கொண்டு யெகோவாவின் ஆலயத்திற்கென பொருட்கள் செய்யப்பட்டன. யெகோவாவினுடைய ஆராதனைக்கும், தகன காணிக்கைக்கும் உரிய பொருட்களும், அத்துடன் கிண்ணங்களும், மற்றும், தங்கம், வெள்ளி ஆகியவற்றாலான பொருட்களும் செய்யப்பட்டன. யோய்தா வாழ்ந்த நாட்களெல்லாம் யெகோவாவினுடைய ஆலயத்தில் தொடர்ச்சியாக தகன காணிக்கைகள் செலுத்தப்பட்டன.
15 இப்பொழுது யோய்தா வயதுசென்று முதியவனாகி, நூற்று முப்பதாவது வயதில் இறந்தான். 16 அவன் தாவீதின் நகரத்தில் அரசர்களுடன் அடக்கம் செய்யப்பட்டான். ஏனெனில் அவன் இஸ்ரயேலில் இறைவனுக்கும் அவரது ஆலயத்திற்கும் நன்மையானதைச் செய்திருந்தான்.
யோவாஸின் கொடுமை
17 யோய்தா இறந்தபின் யூதாவின் அதிகாரிகள் வந்து அரசனுக்கு மரியாதை செலுத்தினர். அரசன் அவர்களுக்குச் செவிகொடுத்தான். 18 அவர்கள் தங்கள் முற்பிதாக்களின் இறைவனாகிய யெகோவாவின் ஆலயத்தைக் கைவிட்டு, அசேரா விக்கிரக தூண்களையும், விக்கிரகங்களையும் வணங்கினார்கள். அவர்கள் செய்த குற்றத்தினால் இறைவனின் கோபம் யூதாவின்மேலும், எருசலேமின்மேலும் வந்தது. 19 யெகோவா மக்களைத் திரும்பவும் தன் பக்கம் கொண்டுவருவதற்கு இறைவாக்கினரை அவர்களிடம் அனுப்பினார். அவர்களும் மக்களுக்கு எதிராக எச்சரித்துக் கூறியும், மக்கள் அதைக் கேட்கவில்லை.
20 அப்பொழுது ஆசாரியனான யோய்தாவின் மகன் சகரியாவின்மேல் இறைவனின் ஆவியானவர் வந்தார். அவன் மக்களுக்கு முன்பாக நின்று, “இறைவன் சொல்வது இதுவே: யெகோவாவின் கட்டளைகளுக்கு நீங்கள் ஏன் கீழ்ப்படியாமலிருக்கிறீர்கள்? நீங்கள் செழிப்படையமாட்டீர்கள். நீங்கள் யெகோவாவைக் கைவிட்டீர்கள். அதனால் அவரும் உங்களைக் கைவிட்டுவிட்டார்” என்று சொன்னான்.
21 ஆனால் அவர்கள் அவனுக்கெதிராக சதிசெய்து அரசனின் கட்டளைப்படி யெகோவாவின் ஆலய முற்றத்தில் அவனைக் கல்லெறிந்து கொன்றார்கள். 22 அரசன் யோவாஸ் சகரியாவின் தகப்பன் யோய்தா தன்னில் காட்டிய தயவை நினைவில்கொள்ளாமல் அவனுடைய மகனைக் கொன்றான். சகரியா விழுந்து சாகும்போது, “யெகோவா இதைப் பார்த்து, உன்னிடத்தில் கணக்குக் கேட்பாராக” என்றான்.
23 மறுவருடத்தில் ஆராமின் இராணுவம் யோவாஸை எதிர்த்து அணிவகுத்து வந்தது. அவர்கள் யூதாவின்மேலும், எருசலேமின்மேலும் படையெடுத்து, மக்களின் தலைவர்கள் எல்லோரையும் கொன்றுபோட்டார்கள். அவர்கள் கொள்ளைப்பொருட்கள் எல்லாவற்றையும் தமஸ்குவில் இருந்த தங்கள் அரசனுக்கு அனுப்பினார்கள். 24 சீரியாவின் இராணுவமோ ஒருசில மனிதருடனேயே வந்திருந்தது. ஆயினும் யெகோவா யூதாவின் பெரிய இராணுவப் படையை சீரியரின் கையில் கொடுத்தார். யூதா தங்கள் முற்பிதாக்களின் இறைவனாகிய யெகோவாவைக் கைவிட்டிருந்ததால் யோவாஸிற்கு நியாயத்தீர்ப்பு வந்தது. 25 சீரியர் திரும்பிப் போகும்போது யோவாஸை கடுமையாகக் காயப்பட்டவனாய் விட்டுவிட்டுப் போனார்கள். யோவாஸ் ஆசாரியனான யோய்தாவின் மகனைக் கொலைசெய்தபடியால், யோவாஸின் அதிகாரிகள் அவனுக்கெதிராக சூழ்ச்சிசெய்து, அவனை அவனுடைய படுக்கையிலேயே கொன்றுபோட்டார்கள். எனவே அவன் இறந்து தாவீதின் பட்டணத்தில் அடக்கம் செய்யப்பட்டான். ஆனாலும், அரசர்களுடன் அரசர்களின் கல்லறையில் அடக்கம் செய்யப்படவில்லை.
26 யோவாஸுக்கு எதிராக சதி செய்தவர்கள் யாரெனில், அம்மோனிய பெண்ணான சிமியாத்தின் மகன் சாபாத், மோவாபிய பெண்ணான சிம்ரீத்தின் மகன் யோசபாத் என்பவர்களே. 27 யோவாஸின் மகன்களின் விபரமும், அவனைப் பற்றிய பல இறைவாக்குகளும், இறைவனின் ஆலயம் புதுப்பிக்கப்பட்ட குறிப்புகளுமான எல்லா நிகழ்வுகளும் அரசர்களின் வரலாற்றுப் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன. அவன் மகன் அமத்சியா அவனுடைய இடத்தில் அரசனானான்.