14
அப்சலோம் எருசலேமுக்குத் திரும்புதல்
தாவீது அரசனின் இருதயம் அப்சலோமுக்காக ஏங்கிக்கொண்டிருக்கிறது என்பதை செருயாவின் மகன் யோவாப் அறிந்துகொண்டான். எனவே யோவாப் தெக்கோவாவுக்கு ஆளனுப்பி அங்கேயுள்ள ஞானமுள்ள ஒரு பெண்ணை அழைத்தான். அவள் வந்தபோது யோவாப் அவளிடம், “நீ துக்கங்கொண்டாடும் பெண்ணைப்போல் பாசாங்கு செய்து துக்கவுடை உடுத்திக்கொள். தலைக்கு எண்ணெய் ஒன்றும் பூசாதே. இறந்துபோனவர்களுக்காக நெடுநாட்களாக துக்கங்கொண்டாடுகிறவளைப் போல நடிக்கவேண்டும். பின் அரசனிடம் போய் இவ்விதமாய் நீ பேசவேண்டும்” என்றான். அவ்வாறே யோவாப் அவள் பேசவேண்டியதை அவளுக்குச் சொல்லிக் கொடுத்தான்.
அதன்படி தெக்கோவா ஊராளான அப்பெண் அரசனிடம் சென்று, தரையில் முகங்குப்புற விழுந்து வணங்கி, “அரசே, எனக்கு உதவும்” என்றாள்.
அப்பொழுது அரசன் அவளிடம், “உனக்கு என்ன துன்பம் நேரிட்டது?” என்று கேட்டான்.
அதற்கு அவள், “எனது கணவர் இறந்துவிட்டார். நான் ஒரு விதவை. உம்முடைய அடியாளாகிய எனக்கு இரண்டு மகன்கள் இருந்தார்கள். அவர்கள் இருவரும் வயல்வெளியில் சண்டையிட்டார்கள். அவர்களை விலக்கிவிட ஒருவரும் இல்லாதபடியால், ஒருவன் மற்றவனை அடித்துக் கொன்றுவிட்டான். இப்பொழுது எங்கள் வம்சம் எல்லாம் உமது அடியாளுக்கு எதிராக எழும்பி, ‘தன் சகோதரனைக் கொன்றவனை எங்களிடம் கொண்டுவா. அவன் கொலைசெய்த அவனுடைய சகோதரனின் உயிருக்காக அவனைக் கொலைசெய்யவேண்டும். சொத்துக்கு உரிமையாளனையும் அழிப்போம்’ என்கிறார்கள். இவ்வாறாக எனக்கு மிஞ்சியிருக்கும் அந்த ஒரே விளக்கை அணைத்து, என் கணவருக்கு பூமியின்மேல் பெயரும் சந்ததியும் இல்லாதபடி செய்வார்கள்” என்றாள்.
அப்பொழுது அரசன் அவளிடம், “நீ வீட்டிற்கு போ; நான் உன் சார்பில் ஒரு கட்டளை அனுப்புவேன்” என்றான்.
ஆனாலும் அந்த தெக்கோவா பெண் அரசனிடம், “என் தலைவனாகிய அரசே, இந்த குற்றம் என்மேலும் என் தகப்பன் குடும்பத்தின்மேலும் சுமருவதாக; அரசனும், அவரது சிங்காசனமும் குற்றமின்றி இருக்கட்டும்” என்றாள்.
10 அதற்கு அரசன், “உனக்கு யாராவது ஏதாவது சொன்னால் என்னிடம் கொண்டுவா; அவன் உன்னை மறுபடியும் தொந்தரவு செய்யமாட்டான்” என்றான்.
11 தொடர்ந்து அவள், “இரத்தப்பழிவாங்குகிறவன் அழிவுடன் அழிவைக் கூட்டாமல் தடுக்கும்படி, அரசர் தம் இறைவனாகிய யெகோவாவை வேண்டிக்கொள்வாராக. அப்பொழுது என் மகன் சாகமாட்டான்” என்றாள்.
அதற்கு தாவீது அரசன் அவளிடம், “யெகோவா இருப்பது நிச்சயமெனில் உன் மகனின் தலைமயிரில் ஒன்றாவது தரையில் விழாது என்பதும் நிச்சயம்” என்றான்.
12 பின்பும் அவள், “என் தலைவனாகிய அரசரிடம் உமது அடியவள் இன்னும் ஒன்றைக் கேட்கலாமா?” என்றாள்.
அதற்கு அரசன், “சரி கேள்” என்றான்.
13 எனவே அந்த பெண், “அப்படியானால் ஏன் இறைவனின் மக்களுக்கு விரோதமாக இப்படியொரு செயலைத் திட்டமிடுகிறீர். அரசன் இப்படிச் சொல்லும்போது நாடுகடத்தப்பட்ட தன் மகனைத் திருப்பிக் கொண்டுவராததினால் தன்னைத்தானே குற்றவாளியாக்குகிறார் அல்லவா? 14 நிலத்தில் சிந்திய தண்ணீரைத் திருப்பி எடுக்க முடியாததுபோல, நாங்கள் எல்லோரும் சாகவேண்டும். ஆனால் இறைவன் உயிர்களை அப்படி எடுக்கிறவர் அல்ல. அதற்குப் பதிலாகத் தன்னை விட்டுத் தூரமாய் போனவர்களைத் திரும்பவும் தன்னிடம் கொண்டுவர அவர் வழிகளை வகுக்கிறார்.
15 “மனிதர் என்னைப் பயமுறுத்தியதினால் தான், என் தலைவனாகிய அரசனிடம் இதைச் சொல்வதற்கு வந்தேன். ‘நான் அரசனிடம் பேசினால் ஒருவேளை அவர் நான் கேட்டதைக் கொடுப்பார் என்று நான் நினைத்தேன். 16 இறைவன் எங்களுக்குக் கொடுத்த உரிமைச்சொத்திலிருந்து என்னையும், என் மகனையும் அகற்றிவிட முயலும் மனிதனின் கையிலிருந்து ஒருவேளை அரசன் விடுவிக்க உடன்படுவார் என்றும் நினைத்தேன்.’
17 “ ‘நன்மையையும் தீமையையும் பிரித்தறிவதில் இப்பொழுதும் என் தலைவனாகிய அரசன் இறைவனின் தூதனைப்போல் இருக்கிறீர்; அதனால் என் தலைவனாகிய அரசன் சொன்னவை உமது அடியாளாகிய எனக்கு மன ஆறுதலைக் கொடுக்கட்டும். உமது இறைவனாகிய யெகோவா உம்மோடுகூட இருப்பாராக’ ” என்றாள்.
18 அப்பொழுது அரசன் அப்பெண்ணிடம், “நான் உன்னிடம் கேட்கப்போவதற்கு நீ எனக்கு ஒன்றும் மறைக்காமல் பதில் சொல்லவேண்டும்” என்றான்.
அதற்கு அப்பெண், “என் தலைவனாகிய அரசே கேளும்” என்றாள்.
19 அப்பொழுது அரசன் அவளிடம், “இதையெல்லாம் செய்வித்தது யோவாப் அல்லவா?” என்று கேட்டான்.
அதற்கு அப்பெண், “என் தலைவனாகிய அரசன் வாழ்வது நிச்சயம்போல, என் தலைவனாகிய அரசன் சொன்னவற்றிலிருந்து வலதுபுறமோ, இடதுபுறமோ திரும்ப முடியாதென்பதும் நிச்சயம். உமது பணியாள் யோவாபே இப்படிச் செய்யும்படி எனக்கு அறிவுறுத்தினான். நான் சொன்னவற்றையெல்லாம் அவனே உமது அடியாளுக்குச் சொல்லிக் கொடுத்தான். 20 உமது நிலைமையை மாற்றுவதற்காகவே உமது பணியாள் யோவாப் இவ்வாறு செய்தான். என் தலைவர் இறைவனின் தூதனைப்போல் ஞானமுடையவர். ஆகையால் நாட்டில் நடப்பவற்றையெல்லாம் அறிந்திருக்கிறீர்” என்றாள்.
21 அப்பொழுது அரசன் யோவாபை அழைத்து, “நான் அதைச் செய்வேன். நீ போய் வாலிபனான அப்சலோமை அழைத்து வா” என்றான்.
22 உடனே யோவாப் அரசனுக்கு முன் முகங்குப்புற விழுந்து, அவனைக் கனப்படுத்தும்படி அவனை வணங்கி வாழ்த்தினான். “என் தலைவனாகிய அரசே, உம்முடைய கண்களில் எனக்குத் தயவு கிடைத்திருக்கிறது என இன்று உமது அடியவன் அறிந்தேன். ஏனெனில் தன் அடியவனுடைய வேண்டுகோளை அரசன் நிறைவேற்றினார்” என்றான்.
23 பின்பு யோவாப் கேசூருக்குப்போய் அப்சலோமை எருசலேமுக்கு அழைத்து வந்தான். 24 ஆனாலும் அரசன், “அப்சலோம் தன் சொந்த வீட்டிற்குப் போகட்டும்; அவன் என் முகத்தைப் பார்க்கக்கூடாது” என்றான். எனவே அப்சலோம் அரசனின் முகத்தைப் பார்க்காமலே தன் சொந்த வீட்டிற்குப் போனான்.
25 இஸ்ரயேல் முழுவதிலும் அப்சலோமைப்போல் அழகான தோற்றமுடையவனென புகழப்படத்தக்க ஒருவனும் இருக்கவில்லை. அவனுடைய உச்சி முதல் உள்ளங்கால் வரை ஒரு குறையும் இருக்கவில்லை. 26 அவனுடைய தலைமயிர் அவனுடைய தலைக்குப் பாரமாக இருப்பதால், வருடத்திற்கு ஒருமுறை அதை வெட்டுவது வழக்கம். அதை வெட்டும்போதெல்லாம் தலைமயிரை அவன் நிறுப்பான். அது அரச நிறையின்படி இருநூறு சேக்கல்* எடையுள்ளதாயிருக்கும்.
27 அப்சலோமுக்கு மூன்று மகன்களும், ஒரு மகளும் இருந்தார்கள். மகளின் பெயர் தாமார், அவள் அழகிய பெண்ணாயிருந்தாள்.
28 அப்சலோம் தாவீது அரசனின் முகத்தைப் பார்க்காமல் இரண்டு வருடங்கள் எருசலேமில் இருந்தான். 29 பின்பு அப்சலோம் அரசனுக்கு செய்தி அனுப்புவதற்காக யோவாபை அழைத்துவர ஆளனுப்பினான். ஆனால் யோவாப் வர மறுத்துவிட்டான்; இரண்டாம்முறை ஆளனுப்பிய போதும் அவன் வர மறுத்தான். 30 அதனால் அவன் தன் பணியாட்களிடம், “யோவாபின் வயல் என் வயலுக்குப் பக்கத்தில் இருக்கிறது; அதில் வாற்கோதுமை விளைந்திருக்கிறது. நீங்கள் போய் அதற்கு நெருப்பு வையுங்கள்” என்றான். அவ்வாறே அப்சலோமின் பணியாட்கள் வயலுக்கு நெருப்பு வைத்தார்கள்.
31 அப்பொழுது அப்சலோமின் வீட்டிற்கு யோவாப் போய் அவனிடம், “உன் பணியாட்கள் என் வயலுக்கு ஏன் நெருப்பு வைத்தார்கள்?” என்று கேட்டான்.
32 அதற்கு அப்சலோம் யோவாபிடம், “இதோ பார், ‘நான் ஏன் கேசூரிலிருந்து அழைத்துவரப்பட்டேன்? இன்னும் நான் அங்கே இருந்திருந்தால் நலமாயிருந்திருக்கும்’ என உன் மூலம் அரசனுக்குச் சொல்லியனுப்பும்படி உன்னை இங்கே வரும்படி ஆளனுப்பினேன். இப்பொழுது நான் அரசனின் முகத்தைப் பார்க்கவேண்டும். என்மேல் ஏதாவது குற்றமிருந்தால் அவர் என்னைக் கொலைசெய்யட்டும்” என்றான்.
33 எனவே யோவாப் அப்சலோம் சொன்ன யாவற்றையும் அரசனிடம் போய் சொன்னான். அதைக்கேட்ட அரசன் அப்சலோமை அழைத்துவரச் செய்தான். அப்சலோம் அரசனின் முன்பாக முகங்குப்புற விழுந்து வணங்கினான். அரசன் அப்சலோமை முத்தமிட்டான்.
* 14:26 14:26 அதாவது, சுமார் 2.3 கிலோகிராம்