22
தாவீதின் நன்றிப்பாடல்
யெகோவா அவனை எல்லாப் பகைவரின் கைகளிலிருந்தும் சவுலின் கையிலிருந்தும் விடுவித்தபோது இப்பாடலின் வார்த்தைகளை தாவீது யெகோவாவுக்குப் பாடினான். அவன் சொன்னது:
“யெகோவா என் கன்மலை, என் கோட்டை, என்னை விடுவிக்கிறவர்;
என் இறைவன் நான் தஞ்சம் அடையும் என் கன்மலை,
என் கேடயம், என் மீட்பின் கொம்பு.
என் அரண், என் அடைக்கலம்,
நீர் என்னை வன்முறையாளர்களிடமிருந்து காப்பாற்றுகிற என் இரட்சகர்.
 
“துதிக்கப்படத்தக்கவரான யெகோவாவை நோக்கி நான் கூப்பிடுகிறேன்;
என் பகைவரிடமிருந்து நான் காப்பாற்றப்படுகிறேன்.
மரண அலைகள் என்னைச் சூழ்ந்துகொண்டன,
அழிவின் அலைகள் என்னை அமிழ்த்திவிட்டன.
பிரேதக் குழியின் கயிறுகள் என்னைச் சூழ்ந்துகொண்டன;
மரணத்தின் கண்ணிகள் என்னை எதிர்த்து வந்தன.
 
“என் துயரத்தில் நான் யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டேன்.
என் இறைவனை நோக்கிக் கூப்பிட்டேன்.
அவர் தமது ஆலயத்திலிருந்து என் குரலைக் கேட்டார்.
என் அழுகுரல் அவர் செவிகளில் எட்டியது.
பூமி நடுங்கி அதிர்ந்து,
வானத்தின் அஸ்திபாரங்கள் அசைந்தன;
அவர் கோபமடைந்ததால் அவை நடுங்கின.
அவருடைய நாசியிலிருந்து புகை எழும்பிற்று;
அவருடைய வாயிலிருந்து சுட்டெரிக்கும் நெருப்புப் புறப்பட்டது;
நெருப்புத் தழல் அதிலிருந்து தெறித்தன.
10 அவர் வானங்களைப் பிரித்து, கீழே இறங்கினார்;
கார்மேகங்கள் அவருடைய பாதங்களின்கீழ் இருந்தன.
11 அவர் கேருபீனின்மேல் ஏறிப் பறந்தார்;
அவர் காற்றின் சிறகுகளைக்கொண்டு பறந்தார்.
12 அவர் இருளைத் தன்னைச் சுற்றி ஒரு கூடாரமாக்கினார்.
வானத்தின் இருண்ட மழைமேகங்கள் அவரைச் சுற்றியிருந்தது.
13 அவரின் சமுகத்தின் பிரகாசத்திலிருந்து
மின்னலின் தாக்குதல் வீசுண்டன.
14 யெகோவா வானத்திலிருந்து இடியை முழக்கினார்;
மகா உன்னதமானவரின் குரல் எதிரொலித்தது.
15 அவர் தமது அம்புகளை எய்து பகைவரைச் சிதறடித்தார்;
மின்னல் கீற்றுக்களை அனுப்பி, அவர்களை முறியடித்தார்.
16 யெகோவாவினுடைய நாசியிலிருந்து வந்த மூச்சின் தாக்கத்தாலும்
அவரின் கண்டிப்பினாலும்
கடல்களின் அடிப்பரப்பு வெளிப்பட்டன;
பூமியின் அஸ்திபாரங்கள் வெளியே தெரிந்தன.
 
17 “அவர் என்னை உயரத்திலிருந்து எட்டிப் பிடித்தார்;
ஆழமான தண்ணீரிலிருந்து என்னை வெளியே தூக்கினார்.
18 அவர் சக்திவாய்ந்த என் பகைவனிடமிருந்தும்
என்னிலும் அதிகம் பலமான எதிரிகளிடமிருந்தும் என்னைத் தப்புவித்தார்.
19 அவர்கள் என்னுடைய பேராபத்தின் நாளிலே, எனக்கெதிராய் எழுந்தார்கள்;
ஆனால் யெகோவா என் ஆதரவாயிருந்தார்.
20 அவர் என்னை விசாலமான ஒரு இடத்திற்கு வெளியே கொண்டுவந்தார்;
அவர் என்னில் பிரியமாய் இருந்தபடியால் என்னைத் தப்புவித்தார்.
 
21 “யெகோவா என் நீதிக்கு ஏற்றபடி என்னை நடத்தியிருக்கிறார்;
என் கைகளின் சுத்தத்திற்கு தக்கதாய், அவர் எனக்குப் பலனளித்திருக்கிறார்.
22 ஏனெனில் நான் யெகோவாவினுடைய வழிகளை கைக்கொண்டிருக்கிறேன்;
என் இறைவனைவிட்டு விலகி நான் குற்றம் செய்யவில்லை.
23 அவருடைய நீதிநெறிகள் அனைத்தும் எனக்கு முன்பாக இருக்கின்றன;
அவருடைய விதிமுறைகளிலிருந்து நான் விலகவேயில்லை.
24 நான் அவருக்கு முன்பாக குற்றமற்றவனாக இருந்து,
பாவத்திலிருந்து என்னை விலக்கிக் காத்துக்கொண்டேன்.
25 யெகோவா என் நீதிக்கு ஏற்றவாறு பலனளித்திருக்கிறார்;
அவருடைய பார்வையில் நான் குற்றமற்றவனாயிருந்தேன்.
 
26 “உண்மையுள்ளவர்களுக்கு நீர் உம்மை உண்மையுள்ளவராகவே காண்பிக்கிறீர்;
உத்தமர்களுக்கு நீர் உம்மை உத்தமராகவே காண்பிக்கிறீர்.
27 தூய்மையுள்ளவர்களுக்கு நீர் உம்மைத் தூய்மையுள்ளவராகவேக் காண்பிக்கிறீர்;
ஆனால் கபடமுள்ளவர்களுக்கோ நீர் உம்மை விவேகமுள்ளவராய்க் காண்பிக்கிறீர்.
28 நீர் தாழ்மையுள்ளோரைக் காப்பாற்றுகிறீர்;
ஆனால் உம்முடைய கண்கள் பெருமையுள்ளவர்களைச் சிறுமைப்படுத்தும்.
29 யெகோவாவே, நீர் என் விளக்கு;
யெகோவா என் இருளை வெளிச்சமாக்குகிறார்.
30 உமது உதவியுடன் என்னால் ஒரு படையை எதிர்த்து முன்னேற முடியும்;
என் இறைவனுடன் ஒரு மதிலைத் தாண்டுவேன்.
 
31 “இறைவனுடைய வழி முழு நிறைவானது:
யெகோவாவின் வார்த்தையோ குறைபாடற்றது;
அவரிடத்தில் தஞ்சமடைவோர் அனைவருக்கும் அவர் கேடயமாயிருக்கிறார்.
32 யெகோவாவைத்தவிர இறைவன் யார்?
நமது இறைவனேயல்லாமல் வேறு கன்மலை யார்?
33 இறைவன் எனக்கு பெலமுள்ள கோட்டையாய் இருந்து,
என் வழியை குறைவற்றதாய் ஆக்குகிறார்.
34 அவர் என் கால்களை மானின் கால்களைப் போல துரிதப்படுத்தி,
உயர்ந்த இடங்களில் என்னை நிற்கப்பண்ணுகிறார்.
35 யுத்தம் செய்ய என் கைகளைப் பயிற்றுவிக்கிறார்;
என் கரங்களால் ஒரு வெண்கல வில்லையும் வளைக்க முடியும்.
36 நீர் உமது இரட்சிப்பை எனக்கு கேடயமாகத் தந்தீர்,
உமது உதவி என்னைப் பெரியவனாக்குகிறது.
37 என் கணுக்கால்கள் புரளாதபடி,
நான் நடக்கும் பாதையை நீர் அகலமாக்குகிறீர்.
 
38 “நான் என் பகைவரை துரத்திச்சென்று, அவர்களை அழித்துப்போட்டேன்;
அவர்கள் முற்றிலும் அழியும்வரை, நான் திரும்பி வரவில்லை.
39 அவர்கள் எழுந்திருக்காதபடி நான் அவர்களை முழுவதும் நசுக்கினேன்;
அவர்கள் என் காலடியில் விழுந்தார்கள்.
40 யுத்தம் செய்வதற்கான வல்லமையை நீர் எனக்குத் தரிப்பித்தீர்;
என் எதிரிகளை எனக்கு முன்பாகத் தாழ்த்தினீர்.
41 நீர் என் பகைவரை புறமுதுகிட்டு ஓடச்செய்தீர்;
நான் அவர்களை அழித்தேன்.
42 அவர்கள் உதவிகேட்டு கூப்பிட்டார்கள்,
ஆனால் அவர்களைக் காப்பாற்ற ஒருவருமே இருக்கவில்லை;
யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டார்கள், அவரோ பதில் கொடுக்கவில்லை.
43 நான் அவர்களை அடித்துப் பூமியின் புழுதியைப்போலாக்கினேன்;
நான் அவர்களை மிதித்து வீதியிலுள்ள சேற்றைப்போல் வெளியே வாரியெறிந்தேன்.
 
44 “நீர் மக்களின் தாக்குதல்களிலிருந்து என்னை விடுவித்திருக்கிறீர்;
நாடுகளுக்கு என்னைத் தலைவனாக வைத்திருக்கிறீர்.
நான் அறியாத மக்கள் எனக்கு கீழ்ப்பட்டிருக்கிறார்கள்.
45 வேறுநாட்டைச் சேர்ந்தவரும் எனக்கு முன்பாக அடங்கி ஒடுங்குகிறார்கள்;
அவர்கள் என்னைக் குறித்துக் கேள்விப்பட்டவுடனே எனக்குக் கீழ்ப்படிகிறார்கள்.
46 அவர்கள் அனைவரும் மனந்தளர்ந்து,
தங்கள் அரண்களிலிருந்து நடுக்கத்துடன் வருகிறார்கள்.
 
47 “யெகோவா வாழ்கிறார்! என் கன்மலையானவருக்குத் துதி உண்டாவதாக!
என் கன்மலையும் இரட்சகருமாகிய இறைவன் உயர்த்தப்படுவாராக!
48 எனக்காகப் பழிவாங்கும் இறைவன் அவரே,
நாடுகளை எனக்குக்கீழ் வைக்கிறவர் அவரே.
49 அவர் என்னை என் பகைவரிடமிருந்து விடுவித்தார்.
யெகோவாவே நீர் என்னை என் எதிரிகளுக்கு மேலாக உயர்த்தியிருக்கிறீர்.
என்னை வன்முறையாளர்களிடமிருந்து பாதுகாத்தீர்.
50 ஆகையால் யெகோவாவே, நாடுகளுக்கு மத்தியில் நான் உம்மைத் துதிப்பேன்;
உமது பெயருக்குத் துதிகள் பாடுவேன்.
 
51 “அவர் தாம் ஏற்படுத்திய அரசனுக்கு மாபெரும் வெற்றிகளைக் கொடுக்கிறார்;
அவர் தாம் அபிஷேகம் பண்ணின தாவீதுக்கும் அவனுடைய சந்ததிகளுக்கும்
தமது உடன்படிக்கையின் அன்பை என்றைக்கும் காண்பிக்கிறார்.”