2
போதிக்கப்பட வேண்டியவை
ஆனாலும் நீயோ, ஆரோக்கியமான போதனைகளுக்கு ஏற்றவைகளையே போதிக்கவேண்டும். வயதில் முதிர்ந்த ஆண்கள் தன்னடக்கம் உள்ளவர்களும், மதிப்புக்குரியவர்களும், சுயக்கட்டுப்பாடு உள்ளவர்களுமாய், ஆழ்ந்த விசுவாசத்திலும், அன்பிலும் நிலைத்திருந்து, சகிப்புத்தன்மை உடையவர்களாய் இருக்கவேண்டும் என்று, அவர்களுக்குக் கற்றுக்கொடு.
அவ்வாறே முதியவர்களான பெண்களும், தாங்கள் வாழும் முறையில் பயபக்தியுடையவர்களாய் இருக்கும்படி, அவர்களுக்குக் கற்றுக்கொடு. அவர்கள் அவதூறு பேசுகிறவர்களாகவோ, மதுபானத்திற்கு அடிமைப்பட்டவர்களாகவோ இருக்கக்கூடாது. அவர்கள் நலமானதை போதிக்கிறவர்களாய் இருக்கவேண்டும். அப்பொழுதே அவர்கள் இளம்பெண்களை தங்களுடைய கணவர்களிலும் பிள்ளைகளிலும் அன்பு செலுத்தப் பயிற்றுவிக்கலாம்; அவர்களை சுயக்கட்டுப்பாடுள்ளவர்களாகவும், தூய்மையுள்ளவர்களாகவும், வீட்டுவேலையில் சுறுசுறுப்புள்ளவர்களாகவும், தயவுள்ளவர்களாகவும், தங்கள் கணவன்மார்களுக்குக் கீழ்ப்படிந்து நடக்கிறவர்களாகவும் இருக்க பயிற்றுவிக்கலாம். இப்படி நடந்தால், அவர்கள் இறைவனுடைய வார்த்தைக்கு அவமதிப்பைக் கொண்டுவரமாட்டார்கள்.
அப்படியே இளைஞர்களையும் சுயக்கட்டுப்பாடு உள்ளவர்களாக இருக்க உற்சாகப்படுத்து. நீ அவர்களுக்கு நல்ல செயல்களைச் செய்வதன்மூலம் எல்லாக் காரியங்களிலும் உன்னையே முன்மாதிரியாக ஏற்படுத்திக்கொள். நீ போதிக்கும்போது, கண்ணியத்துடனும், பொறுப்புணர்ச்சியுடனும் போதிக்கவேண்டும். மற்றவர்கள் குற்றம்காண இயலாதபடி, நலமான பேச்சுக்களையே பேசவேண்டும். அப்பொழுது உன்னை எதிர்க்கிறவர்கள் வெட்கமடைவார்கள். ஏனெனில் நம்மைப்பற்றி தீமையாய்ப் பேசுவதற்கு அவர்களுக்கு எதுவும் இருக்காது.
அடிமைகள் தங்கள் எஜமான்களுக்கு எல்லாக் காரியங்களிலும் அடங்கியிருக்கும்படி அவர்களுக்குக் கற்றுக்கொடு. எஜமான்களைத் திருப்திப்படுத்தும் வகையிலேயே இவர்கள் நடந்துகொள்ள வேண்டும். அடிமைகள் எஜமான்களுடன் எதிர்த்துப் பேசவோ, 10 அவர்களிடமிருந்து எதையும் களவாடவோ கூடாது. அவர்களுடைய முழுமையான நம்பிக்கைக்குத் தாங்கள் தகுந்தவர்கள் என்று காட்டத்தக்கதாக அடிமைகள் நடந்துகொள்ள வேண்டும். அப்பொழுது அவர்கள் நம்முடைய இரட்சகராகிய இறைவனைப்பற்றிய போதனை சிறப்பானது என்று எல்லாவிதத்திலும் காண்பிப்பார்கள்.
11 ஏனெனில், இரட்சிப்பைக் கொண்டுவரும் இறைவனுடைய கிருபை எல்லா மனிதருக்கும் வெளிப்பட்டிருக்கிறது. 12 அந்த கிருபை இறைவனை மறுதலிக்கிற வாழ்வையும், உலகத்துக்குரிய ஆசைகளையும் “வேண்டாம்” என்று சொல்லும்படி, நமக்கு போதிக்கிறது. தற்போதுள்ள இந்தக் காலத்தில் நாம் சுயக்கட்டுப்பாடும், நீதியும் உள்ளவர்களாய், இறை பக்தியுள்ள வாழ்வை வாழும்படி, அது நமக்குச் சொல்லிக் கொடுக்கிறது. 13 நம்முடைய மகத்துவமான இறைவனும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்து, மகிமையுடன் வெளிப்படும் ஆசீர்வாதமுள்ள எதிர்பார்ப்புக்கு நாம் காத்திருக்கும்படி வாழ அந்த கிருபை கற்றுத்தருகிறது. 14 எல்லாவித தீமைகளிலிருந்தும் நம்மை மீட்டு, நற்செயல்களைச் செய்ய ஆர்வமுள்ள தம்முடைய மக்களாகும்படி, நம்மைத் தமக்கென்று தூய்மைப்படுத்தி, தமக்குச் சொந்தமானவர்களாய் ஆக்கும்படியுமே, கிறிஸ்து தம்மையே நமக்காகக் கொடுத்தார்.
15 இவையே நீ போதிக்கவேண்டிய காரியங்கள்; எல்லா அதிகாரத்துடனும் கண்டித்து, உற்சாகப்படுத்து. யாரும் உன்னை அவமதிக்க இடங்கொடாதே.