அத்தியாயம் 17
1 என் ஆவி உடைகிறது, என் ஆயுசு நாட்கள் முடிகிறது;  
கல்லறை எனக்கு ஆயத்தமாயிருக்கிறது.   
2 கேலி செய்கிறவர்கள் என்னிடத்தில் இல்லையோ?  
அவர்கள் செய்யும் அநியாயங்களை என் கண் பார்த்துக்கொண்டிருக்கிறது.   
3 தேவரீர் என் காரியத்தை உம்மேல் போட்டுக்கொண்டு,  
எனக்காகப் பிணைக்கப்படுவீராக;  
வேறே யார் எனக்குக் கைகொடுக்கத்தக்கவர்?   
4 நீர் அவர்கள் இருதயத்திற்கு ஞானத்தை மறைத்தீர்;  
ஆகையால் அவர்களை உயர்த்தாதிருப்பீர்.   
5 எவன் தன் நண்பனுக்குக் கேடாகத் துரோகம் பேசுகிறானோ,  
அவனுடைய பிள்ளைகளின் கண்களும் பூத்துப்போகும்.   
6 மக்களுக்குள்ளே அவர் என்னைப் பழமொழியாக வைத்தார்;  
அவர்கள் முகத்திற்குமுன் நான் விரும்பத்தகாதவனானேன்.   
7 இதற்காக என் கண்கள் வருத்தத்தினால் இருளடைந்தது;  
என் உறுப்புகளெல்லாம் நிழலைப்போலிருக்கிறது.   
8 சன்மார்க்கர் இதற்காக அதிர்ச்சியடைவார்கள்;  
குற்றமில்லாதவன் மாயக்காரனுக்கு விரோதமாக எழும்புவான்.   
9 நீதிமான் தன் வழியை உறுதியாகப் பிடிப்பான்;  
சுத்தமான கைகள் உள்ளவன் மேன்மேலும் பலத்துப்போவான்.   
10 இப்போதும் நீங்கள் எல்லோரும் போய்வாருங்கள்;  
உங்களில் ஞானமுள்ள ஒருவனையும் காணவில்லை.   
11 என் நாட்கள் முடிந்தது;  
என் இருதயத்தில் எனக்கு உண்டாயிருந்த சிந்தனைகள் இல்லாமல் போனது.   
12 அவைகள் இரவைப் பகலாக்கியது;  
இருளை வெளிச்சம் தொடர்ந்துவரும் என்று நினைக்கத்தோன்றியது.   
13 அப்படி நான் காத்துக்கொண்டிருந்தாலும்,  
பாதாளம் எனக்கு வீடாயிருக்கும்;  
இருளில் என் படுக்கையைப் போடுவேன்.   
14 அழிவைப்பார்த்து, நீ எனக்குத் தகப்பன் என்கிறேன்;  
புழுக்களைப் பார்த்து, நீங்கள் எனக்குத் தாயும் எனக்குச் சகோதரியும் என்கிறேன்.   
15 என் நம்பிக்கை இப்போது எங்கே?  
நான் நம்பியிருந்ததைக் காண்பவன் யார்?   
16 அது பாதாளத்தின் காவலுக்குள் இறங்கும்;  
அப்போது தூளில் எங்கும் இளைப்பாறுவோம்” என்றான்.