அத்தியாயம் 18
பில்தாதின் வார்த்தைகள் 
 
1 அப்பொழுது சூகியனான பில்தாத் மறுமொழியாக:   
2 “நீங்கள் எதுவரைக்கும் பேச்சுகளை முடிக்காதிருப்பீர்கள்?  
புத்திமான்களாயிருங்கள்; நாங்களும் பேசட்டும்.   
3 நாங்கள் மிருகங்களைப்போல எண்ணப்பட்டு,  
உங்கள் பார்வைக்குக் கீழானவர்களாக ஏன் இருக்கவேண்டும்?   
4 கோபத்தினால் உன்னை நீயே காயப்படுத்துகிற உனக்காக பூமி அழிந்துபோகுமோ?  
கன்மலை தன்னிடத்தைவிட்டுப் பெயருமோ?   
5 துன்மார்க்கனுடைய விளக்கு அணைந்துபோகும்;  
அவனுடைய அடுப்பின் நெருப்பும் அவிந்துபோகும்.   
6 அவனுடைய கூடாரத்தில் வெளிச்சம் இருளாக்கப்படும்;  
அவனுடைய விளக்கு அவனுடனே அணைந்துபோகும்.   
7 அவன் பெலனாய் நடந்த நடைகள் குறைந்துபோகும் அவனுடைய ஆலோசனை அவனை விழவைக்கும்.   
8 அவன் தன் கால்களினால் வலையில் பிடிபட்டு,  
வலையின் சிக்கலிலே நடக்கிறான்.   
9 கண்ணி அவனுடைய குதிகாலைப் பிடிக்கும்;  
பறிகாரர் அவனை மேற்கொள்வார்கள்.   
10 அவனுக்காகச் சுருக்கு தரையிலும்,  
அவனுக்காகக் கண்ணி வழியிலும் வைக்கப்பட்டிருக்கிறது.   
11 சுற்றிலுமிருந்து உண்டாகும் பயங்கரங்கள் அவனை அதிர்ச்சியடையச்செய்து,  
அவனுடைய கால்களைத் திசைதெரியாமல் அலையவைக்கும்.   
12 அவன் பசியினால் பெலனற்றுப்போவான்;  
அவன் பக்கத்தில் ஆபத்து ஆயத்தமாக நிற்கும்.   
13 அது அவனுடைய அங்கத்தின் பலத்தை எரிக்கும்;  
பயங்கரமான மரணமே அவனுடைய உறுப்புகளை எரிக்கும்.   
14 அவனுடைய நம்பிக்கை அவனுடைய கூடாரத்திலிருந்து வேருடன் பிடுங்கப்படும்;  
அது அவனைப் பயங்கரமான ராஜாவினிடத்தில் துரத்தும்.   
15 அவனுக்கு ஒன்றுமில்லாமற் போனதினால்,  
பயங்கரம் அவனுடைய கூடாரத்தில் குடியிருக்கும்;  
கந்தகம் அவனுடைய குடியிருப்பின்மேல் தெளிக்கப்படும்.   
16 கீழே இருக்கிற அவனுடைய வேர்கள் அழிந்துபோகும்;  
மேலே இருக்கிற அவனுடைய கிளைகள் பட்டுப்போகும்.   
17 அவனை நினைக்கும் நினைவு பூமியிலிருந்து அழியும்,  
வீதிகளில் அவன் பெயரில்லாமற்போகும்.   
18 அவன் வெளிச்சத்திலிருந்து இருளில் துரத்திவிடப்பட்டு,  
பூலோகத்திலிருந்து தள்ளுண்டுபோவான்.   
19 அவனுடைய மக்களுக்குள்ளே அவனுக்கு மகனும் இல்லை மகளும் இல்லை;  
அவனுடைய வீட்டில் மீதியாயிருக்க வேண்டியவன் ஒருவனும் இல்லை.   
20 அவனுடைய அழிவின் காலத்தில் மேற்கில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்ததுபோல,  
கிழக்கில் உள்ள மக்களும் அதிர்ச்சியடைவார்கள்.   
21 அக்கிரமக்காரன் குடியிருந்த இடங்கள் இவைகள்தான்;  
தேவனை அறியாமற்போனவனுடைய இடம் இதுவே என்பார்கள்” என்றான்.