அத்தியாயம் 19
யோபுவின் வார்த்தைகள் 
 
1 யோபு மறுமொழியாக:   
2 “நீங்கள் எதுவரைக்கும் என் ஆத்துமாவை வருத்தப்படுத்தி,  
வார்த்தைகளினால் என்னை நொறுக்குவீர்கள்?   
3 இப்போது பத்துமுறை என்னை நிந்தித்தீர்கள்;  
நீங்கள் எனக்குக் கடினமுகம் காண்பிக்கிறதினால் உங்களுக்கு வெட்கமில்லை.   
4 நான் தவறாக நடந்தது உண்மையானாலும்,  
என் தவறு என்னுடன்தான் இருக்கிறது.   
5 நீங்கள் எனக்கு விரோதமாகப் பெருமைபாராட்டி,  
எனக்கு நிந்தையாக என்னைக் கடிந்துகொள்ளவேண்டும் என்று இருப்பீர்கள் என்றால்,   
6 தேவன் என்னைக் கவிழ்த்து, தம்முடைய வலையை என்மேல் வீசினார் என்று அறியுங்கள்.   
7 இதோ, கொடுமை என்று கூப்பிடுகிறேன்,  
கேட்பார் ஒருவரும் இல்லை;  
கூக்குரலிடுகிறேன், நியாயவிசாரணை இல்லை.   
8 நான் கடந்துபோக முடியாதபடி அவர் என் பாதையை வேலியடைத்து,  
என் வழிகளை இருளாக்கிவிட்டார்.   
9 என்னிலிருந்த என் மகிமையை அவர் உரிந்துகொண்டு,  
என் தலையின் கிரீடத்தை எடுத்துப்போட்டார்.   
10 அவர் என்னை நான்கு புறத்திலும் நாசமாக்கினார்,  
நான் அற்றுப்போகிறேன்;  
என் நம்பிக்கையை ஒரு செடியைப்போலப் பிடுங்கிப்போட்டார்.   
11 அவர் தமது கோபத்தை என்மேல் எரியச் செய்தார்;  
என்னைத் தம்முடைய சத்துருக்களில் ஒருவனாக எண்ணிக்கொள்ளுகிறார்.   
12 அவருடைய தண்டுப்படைகள் ஏகமாக வந்து,  
எனக்கு விரோதமாகத் தங்கள் வழியை உயர்த்தி,  
என் கூடாரத்தைச் சுற்றி முகாமிட்டார்கள்.   
13 என் சகோதரரை என்னைவிட்டுத் தூரப்படுத்தினார்;  
எனக்கு அறிமுகமானவர்கள் எனக்கு அந்நியராய்ப் போனார்கள்.   
14 என் சொந்தமக்கள் விலகிப்போனார்கள்.  
என் நண்பர்கள் என்னை மறந்துவிட்டார்கள்.   
15 என் வீட்டு மக்களும், என் வேலைக்காரிகளும்,  
என்னை அந்நியனாக நினைக்கிறார்கள்;  
அவர்கள் பார்வைக்கு நான் நிலையற்றவன்.   
16 நான் என் வேலைக்காரனைக் கூப்பிடுகிறபோது அவன் எனக்கு பதில் கொடுக்கமாட்டான்;  
என் வாயினால் நான் அவனைக் கெஞ்சவேண்டியதாயிற்று.   
17 என் மூச்சு என் மனைவிக்கு வேறுபட்டிருக்கிறது;  
என் உடன் பிறந்தவர்களுக்காகப் பரிதபிக்கிறேன்.   
18 சிறுபிள்ளைகளும் என்னை அசட்டை செய்கிறார்கள்;  
நான் எழுந்தால், அவர்கள் எனக்கு விரோதமாகப் பேசுகிறார்கள்.   
19 என் உயிர்நண்பர்கள் எல்லோரும் என்னை வெறுக்கிறார்கள்;  
நான் நேசித்தவர்கள் எனக்கு விரோதிகளானார்கள்.   
20 என் எலும்புகள் என் தோலுடனும் என் சதையோடும் ஒட்டிக்கொண்டிருக்கிறது என் பற்களை மூடக் கொஞ்சம் தோல்மாத்திரம் தப்பினது.   
21 என் நண்பர்களே, எனக்கு இரங்குங்கள்,  
எனக்கு இரங்குங்கள்; தேவனுடைய கை என்னைத் தொட்டது.   
22 தேவனைப்போல நீங்களும் என்னை ஏன் துன்பப்படுத்தவேண்டும்?  
என் உடல் எரிக்கப்பட்டாலும் நீங்கள் திருப்தியில்லாமல் இருக்கிறதென்ன?   
23 ஆ, நான் இப்பொழுது சொல்லும் வார்த்தைகள் எழுதப்பட்டால் நலமாயிருக்கும்;  
அவைகள் ஒரு புத்தகத்தில் வரையப்பட்டு,   
24 அல்லது என்றைக்கும் நிலைக்க அவைகள் கருங்கல்லிலே உளிவெட்டாகவும்,  
ஈய எழுத்தாகவும் பதிந்தால் நலமாயிருக்கும்.   
25 என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும்,  
அவர் கடைசி நாளில் பூமியின்மேல் நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன்.   
26 இந்த என்னுடைய தோல்முதலானவை அழுகிப்போனபின்பு,  
நான் என் உடலுடன் இருந்து தேவனைப் பார்ப்பேன்.   
27 அவரை நானே பார்ப்பேன்;  
வேறே கண்கள் அல்ல, என் கண்களே அவரைக் காணும்;  
இந்த ஏக்கத்தினால் என் உள்ளிருக்கும் உறுப்புகள் எனக்குள் சோர்ந்துபோகிறது.   
28 காரியத்தின் காரணம் எனக்குள் கண்டுபிடிக்கப்படும்போது,  
நாம் ஏன் அவனைத் துன்பப்படுத்துகிறோம் என்று நீங்கள் சொல்லவேண்டியதாமே.   
29 பட்டயத்திற்குப் பயப்படுங்கள்;  
நியாயத்தீர்ப்பு உண்டென்கிறதை நீங்கள் அறியவேண்டுமேன்று,  
கோபமானது பட்டயத்தினால் உண்டாகும் தண்டனையை வரவழைக்கும்” என்றான்.