அத்தியாயம் 26
யோபுவின் வார்த்தைகள் 
 
1 யோபு மறுமொழியாக:   
2 “பெலனில்லாதவனுக்கு நீ எப்படி உதவிசெய்தாய்?  
பெலனற்ற கையை நீ எப்படி ஆதரித்தாய்?   
3 நீ ஞானமில்லாதவனுக்கு எப்படி உறுதுணையாயிருந்து,  
மெய்ப்பொருளைக் குறித்து அறிவித்தாய்?   
4 யாருக்கு அறிவைப் போதித்தாய்?  
உன்னிடத்திலிருந்து புறப்பட்ட ஆவி யாருடையது?   
5 தண்ணீரின் கீழ் இறந்தவர்களுக்கும்,  
அவர்களுடன் தங்குகிறவர்களுக்கும் தத்தளிப்பு உண்டு.   
6 அவருக்கு முன்பாகப் பாதாளம் தெரியும்விதத்தில் திறந்திருக்கிறது;  
நரகம் மூடப்படாதிருக்கிறது.   
7 அவர் வடக்குமண்டலத்தை வெட்டவெளியிலே விரித்து,  
பூமியை அந்தரத்திலே தொங்கவைக்கிறார்.   
8 அவர் தண்ணீர்களைத் தம்முடைய கார்மேகங்களில் கட்டிவைக்கிறார்;  
அதின் பாரத்தினால் மேகம் கிழிகிறதில்லை.   
9 அவர் தமது சிங்காசனம் நிற்கும் ஆகாயத்தை பலப்படுத்தி,  
அதின்மேல் தமது மேகத்தை விரிக்கிறார்.   
10 அவர் தண்ணீர்கள்மேல் சுழற்சி வட்டம் அமைத்தார்;  
வெளிச்சமும் இருளும் முடியும்வரை அப்படியே இருக்கும்.   
11 அவருடைய கண்டிப்பினால் வானத்தின் தூண்கள் அதிர்ந்து தத்தளிக்கும்.   
12 அவர் தமது வல்லமையினால் சமுத்திரக் கொந்தளிப்பை அமரச்செய்து,  
தமது ஞானத்தினால் அதின் மூர்க்கத்தை அடக்குகிறார்.   
13 தமது ஆவியினால் வானத்தை அலங்கரித்தார்;  
அவருடைய கை நெளிவான சர்ப்ப நட்சத்திரத்தை உண்டாக்கியது.   
14 இதோ, இவைகள் அவருடைய படைப்பில் கடைசியானவைகள்,  
அவரைக்குறித்து நாங்கள் கேட்டது எவ்வளவு கொஞ்சம்;  
அவருடைய வல்லமையின் இடிமுழக்கத்தை அறிந்தவன் யார்” என்றான்.