அத்தியாயம் 27
1 யோபு பின்னும் தன் பிரசங்கவாக்கியத்தைத் தொடர்ந்து சொன்னது:   
2 “என் சுவாசம் என்னிலும்,  
தேவன் தந்த ஆவி என் மூக்கிலும் இருக்கும்வரை,   
3 என் உதடுகள் அநீதியைச் சொல்வதுமில்லை;  
என் நாக்கு பொய் பேசுவதுமில்லையென்று,   
4 என் நியாயத்தைத் தள்ளிவிடுகிற தேவனும்,  
என் ஆத்துமாவைக் கசப்பாக்குகிற சர்வவல்லமையுள்ள தேவனுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்.   
5 நீங்கள் பேசுகிறது நீதியென்று நான் ஒத்துக்கொள்வது எனக்குத் தூரமாயிருப்பதாக;  
என் ஆவி பிரியும்வரை என் உத்தமத்தை என்னைவிட்டு விலக்கமாட்டேன்.   
6 என் நீதியை உறுதியாகப் பிடித்திருக்கிறேன்;  
அதை நான் விட்டுவிடமாட்டேன்; நான் உயிரோடிருக்கும்வரை என் இருதயம் என்னை நிந்திக்காது.   
7 என் பகைவன் ஆகாதவனைப்போலவும்,  
எனக்கு விரோதமாக எழும்புகிறவன் அக்கிரமக்காரனைப்போலவும் இருப்பானாக.   
8 அக்கிரமக்காரன் பொருளைத் தேடி வைத்திருந்தாலும்,  
தேவன் அவனுடைய ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும்போது,  
அவனுடைய நம்பிக்கையினால் லாபம் என்ன?   
9 ஆபத்து அவன்மேல் வரும்போது,  
தேவன் அவனுடைய கூப்பிடுதலைக் கேட்பாரோ?   
10 அவன் சர்வவல்லமையுள்ள தேவன் மேல் மனமகிழ்ச்சியாயிருப்பானோ?  
அவன் எப்பொழுதும் தேவனைத் தொழுதுகொண்டிருப்பானோ?   
11 தேவனுடைய கரத்தின் கிரியையைக் குறித்து உங்களுக்கு போதிப்பேன்;  
சர்வவல்லவரிடத்தில் இருக்கிறதை நான் மறைக்கமாட்டேன்.   
12 இதோ, நீங்கள் எல்லோரும் அதைக் கண்டிருந்தும், நீங்கள் இத்தனை வீண் எண்ணங்கொண்டிருக்கிறது என்ன?   
13 பொல்லாத மனிதனுக்கு தேவனிடத்திலிருந்து வருகிற பங்கும்,  
கொடூரக்காரர் சர்வவல்லவரால் அடைகிற பங்கும் என்னவெனில்,   
14 அவனுடைய மகன்கள் பெருகினால் பட்டயத்திற்கு இரையாவார்கள்;  
அவனுடைய கர்ப்பப்பிறப்புகள் ஆகாரத்தினால் திருப்தியாவதில்லை.   
15 அவனுக்கு மீதியானவர்கள் செத்துப் புதைக்கப்படுவார்கள்;  
அவர்களுடைய விதவைகளும் புலம்புவதில்லை.   
16 அவன் புழுதியைப்போலப் பணத்தைக் குவித்துக்கொண்டாலும்,  
மண்ணைப்போல ஆடைகளைச் சம்பாதித்தாலும்,   
17 அவன் சம்பாதித்ததை நீதிமான் உடுத்திக்கொண்டு,  
குற்றமில்லாதவன் அவன் பணத்தைப் பகிர்ந்துகொள்ளுவான்.   
18 அவனுடைய வீடு சிலந்திப்பூச்சி கட்டின வீட்டைப்போலவும்,  
காவல்காக்கிறவன் போட்ட குடிசையைப் போலாகும்.   
19 அவன் ஐசுவரியவானாகத் தூங்கிக் கிடந்து,  
ஒன்றும் இழந்துவிடாமல் போனாலும், அவன் தன் கண்களைத் திறக்கும்போது ஒன்றுமில்லாதிருக்கும்.   
20 வெள்ளத்தைப்போல பயங்கள் அவனை வாரிக்கொண்டுபோகும்;  
இரவுநேரத்தில் பெருங்காற்று அவனை அடித்துக்கொண்டுபோகும்.   
21 கிழக்குக்காற்று அவனைத் தூக்கிக்கொண்டுபோக, அவன் போய்விடுவான்;  
அது அவனை அவனுடைய இடத்திலிருந்து தள்ளிக்கொண்டுபோகும்.   
22 அவருடைய கைக்குத் தப்பியோடப் பார்ப்பான்  
ஆனால் அதை அவன்மேல் வரச்செய்து அவனைத் தப்பவிடாதிருப்பார்;.   
23 மக்கள் அவனைப் பார்த்துக் கைகொட்டி நகைத்து,  
அவனை அவனுடைய இடத்தை விட்டு விரட்டிவிடுவார்கள்.