அத்தியாயம் 13
ஞானியின் நடவடிக்கை 
 
1 ஞானமுள்ள மகன் தகப்பனுடைய போதகத்தைக் கேட்கிறான்;  
பரியாசக்காரனோ கடிந்துகொள்ளுதலை கேட்கமாட்டான்.   
2 மனிதன் தன்னுடைய வாயின் பலனால் நன்மையைச் சாப்பிடுவான்;  
துரோகிகளின் ஆத்துமாவோ கொடுமையை சாப்பிடும்.   
3 தன்னுடைய வாயைக் காக்கிறவன் தன்னுடைய உயிரைக் காக்கிறான்;  
தன்னுடைய உதடுகளை விரிவாகத் திறக்கிறவனோ கலக்கமடைவான்.   
4 சோம்பேறியுடைய ஆத்துமா விரும்பியும் ஒன்றும் பெற்றுக்கொள்ளாது;  
ஜாக்கிரதையுள்ளவர்களுடைய ஆத்துமாவோ செழிக்கும்;   
5 நீதிமான் பொய்ப்பேச்சை வெறுக்கிறான்;  
துன்மார்க்கனோ வெட்கமும் அவமானமும் உண்டாக்குகிறான்.   
6 நீதி உத்தமவழியில் உள்ளவனைத் தற்காக்கும்;  
துன்மார்க்கமோ பாவியைக் கவிழ்த்துப்போடும்.   
7 ஒன்றுமில்லாமல் இருக்கத் தன்னைச் செல்வந்தனாக நினைக்கிறவனும் உண்டு;  
மிகுந்த செல்வம் இருக்கத் தன்னைத் தரித்திரனாக நினைக்கிறவனும் உண்டு.   
8 மனிதனுடைய செல்வம் அவனுடைய உயிரை மீட்கும்;  
தரித்திரனோ மிரட்டுதலைக் கேட்காமல் இருக்கிறான்.   
9 நீதிமான்களின் வெளிச்சம் சந்தோஷப்படுத்தும்;  
துன்மார்க்கர்களின் தீபமோ அணைந்துபோகும்.   
10 அகந்தையினால் மட்டும் விவாதம் பிறக்கும்;  
ஆலோசனையைக் கேட்கிறவர்களிடத்திலோ ஞானம் உண்டு.   
11 வஞ்சனையால் தேடின பொருள் குறைந்துபோகும்;  
கஷ்டப்பட்டு சேர்க்கிறவனோ விருத்தியடைவான்.   
12 நெடுங்காலமாகக் காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கச்செய்யும்;  
விரும்பினது வரும்போதோ ஜீவமரம்போல இருக்கும்.   
13 திருவசனத்தை அவமதிக்கிறவன் நாசமடைவான்;  
கற்பனைக்குப் பயப்படுகிறவனோ பலனடைவான்.   
14 ஞானவான்களுடைய போதகம் வாழ்வுதரும் ஊற்று;  
அதினால் மரணக்கண்ணிகளுக்குத் தப்பலாம்.   
15 நற்புத்தி தயவை உண்டாக்கும்;  
துரோகிகளுடைய வழியோ கரடுமுரடானது.   
16 விவேகியானவன் அறிவோடு நடந்துகொள்ளுகிறான்;  
மூடனோ தன்னுடைய மூடத்தனத்தை வெளிப்படுத்துகிறான்.   
17 துரோகமுள்ள தூதன் தீமையிலே விழுவான்;  
உண்மையுள்ள தூதுவர்களோ நல்மருந்து.   
18 புத்திமதிகளைத் தள்ளுகிறவன் தரித்திரத்தையும் அவமானத்தையும் அடைவான்;  
கடிந்து கொள்ளுதலைக் கவனித்து நடக்கிறவனோ மேன்மையடைவான்.   
19 வாஞ்சை நிறைவேறுவது ஆத்துமாவுக்கு இனிது;  
தீமையைவிட்டு விலகுவது மூடர்களுக்கு அருவருப்பு.   
20 ஞானிகளோடு வாழ்கிறவன் ஞானமடைவான்;  
மூடர்களுக்குத் தோழனோ நாசமடைவான்.   
21 பாவிகளைத் தீவினை தொடரும்;  
நீதிமான்களுக்கோ நன்மை பலனாக வரும்.   
22 நல்லவன் தன்னுடைய பிள்ளைகளின் பிள்ளைகளுக்கு சொத்தை வைத்துப்போகிறான்;  
பாவியின் செல்வமோ நீதிமானுக்காகச் சேர்த்துவைக்கப்படும்.   
23 ஏழைகளின் வயல் மிகுதியான உணவை விளைவிக்கும்;  
நியாயம் கிடைக்காமல் கெட்டுப்போகிறவர்களும் உண்டு.   
24 பிரம்பைப் பயன்படுத்தாதவன் தன்னுடைய மகனைப் பகைக்கிறான்;  
அவன்மேல் அன்பாக இருக்கிறவனோ அவனை ஏற்கனவே தண்டிக்கிறான்.   
25 நீதிமான் தனக்குத் திருப்தியாகச் சாப்பிடுகிறான்;  
துன்மார்க்கர்களுடைய வயிறோ பசியாக இருக்கும்.