அத்தியாயம் 14
விவேகமும் அலட்சியமும் 
 
1 புத்தியுள்ள பெண் தன்னுடைய வீட்டைக் கட்டுகிறாள்;  
புத்தியில்லாத பெண்ணோ தன்னுடைய கைகளினால் அதை இடித்துப்போடுகிறாள்.   
2 நிதானமாக நடக்கிறவன் யெகோவாவுக்குப் பயப்படுகிறான்;  
தன்னுடைய வழிகளில் தாறுமாறானவனோ அவரை அலட்சியம்செய்கிறான்.   
3 மூடன் வாயிலே அவனுடைய அகந்தைக்கு ஏற்ற கோல் உண்டு;  
ஞானவான்களின் உதடுகளோ அவர்களைக் காப்பாற்றும்.   
4 எருதுகள் இல்லாத இடத்தில் களஞ்சியம் வெறுமையாக இருக்கும்;  
காளைகளின் பெலத்தினாலோ மிகுந்த வரத்துண்டு.   
5 மெய்ச்சாட்சிக்காரன் பொய்சொல்லமாட்டான்;  
பொய்ச்சாட்சிக்காரனோ பொய்களை ஊதுகிறான்.   
6 பரியாசக்காரன் ஞானத்தைத் தேடியும் கண்டுபிடிக்கமாட்டான்;  
புத்தியுள்ளவனுக்கோ அறிவு லேசாகவரும்.   
7 மூடனுடைய முகத்தைவிட்டு விலகிப்போ;  
அறிவுள்ள உதடுகளை அங்கே காணமாட்டாய்.   
8 தன்னுடைய வழியைச் சிந்தித்துக்கொள்வது விவேகியின் ஞானம்;  
மூடர்களுடைய வஞ்சனையோ மூடத்தனம்.   
9 மூடர்கள் பாவத்தைக்குறித்துப் பரியாசம்செய்கிறார்கள்;  
நீதிமான்களுக்குள்ளே தயவு உண்டு.   
10 இருதயத்தின் கசப்பு இருதயத்திற்கே தெரியும்;  
அதின் மகிழ்ச்சிக்கு அந்நியன் உடந்தை ஆகமாட்டான்.   
11 துன்மார்க்கனுடைய வீடு அழியும்;  
செம்மையானவனுடைய கூடாரமோ செழிக்கும்.   
12 மனிதனுக்குச் செம்மையாகத் தோன்றுகிற வழி உண்டு;  
அதின் முடிவோ மரணவழிகள்.   
13 சிரிப்பிலும் மனதிற்குத் துக்கமுண்டு;  
அந்த மகிழ்ச்சியின் முடிவு சஞ்சலம்.   
14 பின்வாங்கும் இருதயமுள்ளவன் தன்னுடைய வழிகளிலேயும்,  
நல்ல மனிதனோ தன்னிலே தானும் திருப்தியடைவான்.   
15 பேதையானவன் எந்த வார்த்தையையும் நம்புவான்;  
விவேகியோ தன்னுடைய நடையின்மேல் கவனமாக இருக்கிறான்.   
16 ஞானமுள்ளவன் பயந்து தீமைக்கு விலகுகிறான்;  
மதியீனனோ கடுங்கோபம்கொண்டு துணிகரமாக இருக்கிறான்.   
17 முன்கோபி மதிகேட்டைச் செய்வான்;  
கெட்டச்சிந்தனைக்காரன் வெறுக்கப்படுவான்.   
18 பேதையர்கள் புத்தியீனத்தைச் சுதந்தரிக்கிறார்கள்;  
விவேகிகளோ அறிவினால் முடிசூட்டப்படுகிறார்கள்.   
19 தீயோர்கள் நல்லவர்களுக்கு முன்பாகவும், துன்மார்க்கர்கள் நீதிமான்களுடைய வாசற்படிகளிலும் குனிவதுண்டு.   
20 தரித்திரன் தன்னைச் சேர்ந்தவனாலும் பகைக்கப்படுகிறான்;  
செல்வந்தனுக்கோ அநேக நண்பர்கள் உண்டு.   
21 பிறனை அவமதிக்கிறவன் பாவம்செய்கிறான்;  
தரித்திரனுக்கு இரங்குகிறவனோ பாக்கியமடைவான்.   
22 தீமையை யோசிக்கிறவர்கள் தவறுகிறார்களல்லவோ?  
நன்மையை யோசிக்கிறவர்களுக்கோ கிருபையும் சத்தியமும் உண்டு.   
23 எல்லா உழைப்பினாலும் பயனுண்டு;  
உதடுகளின் பேச்சோ வறுமையை மட்டும் தரும்.   
24 ஞானிகளுக்கு முடி அவர்களுடைய செல்வம்;  
மூடர்களின் மதியீனம் மூடத்தனமே.   
25 மெய்ச்சாட்சி சொல்லுகிறவன் உயிர்களைக் காப்பாற்றுகிறான்;  
வஞ்சனைக்காரனோ பொய்களை ஊதுகிறான்.   
26 யெகோவாவுக்குப் பயப்படுகிறவனுக்குத் திடநம்பிக்கை உண்டு;  
அவனுடைய பிள்ளைகளுக்கும் அடைக்கலம் கிடைக்கும்.   
27 யெகோவாவுக்குப் பயப்படுதல் வாழ்வு தரும் ஊற்று;  
அதினால் மரணக்கண்ணிகளுக்குத் தப்பலாம்.   
28 மக்கள் கூட்டம் ராஜாவின் மகிமை;  
மக்கள்குறைவு தலைவனின் முறிவு.  
29 நீடிய சாந்தமுள்ளவன் மகாபுத்திமான்;  
முன்கோபியோ புத்தியீனத்தை விளங்கச்செய்கிறான்.   
30 சமாதானத்துடன் இருப்பது உடலுக்கு வாழ்வு;  
பொறாமையோ எலும்புருக்கி.   
31 தரித்திரனை ஒடுக்குகிறவன் அவனை உண்டாக்கினவரை நிந்திக்கிறான்;  
தரித்திரனுக்குத் தயவு செய்கிறவனோ அவரை மேன்மைப்படுத்துகிறான்;   
32 துன்மார்க்கன் தன்னுடைய தீமையிலே வாரிக்கொள்ளப்படுவான்;  
நீதிமானோ தன்னுடைய மரணத்திலே நம்பிக்கையுள்ளவன்.   
33 புத்திமானுடைய இருதயத்தில் ஞானம் தங்கும்; மதியீனர்களிடத்தில் உள்ளதோ வெளிப்படும்.   
34 நீதி மக்களை உயர்த்தும்; பாவமோ எந்த மக்களுக்கும் இகழ்ச்சி.   
35 ராஜாவின் தயவு விவேகமுள்ள பணிவிடைக்காரன்மேல் இருக்கும்;  
அவனுடைய கோபமோ அவமானத்தை உண்டாக்குகிறவன்மேல் இருக்கும்.