அத்தியாயம் 18
ஞானம் வாழ்வின் வழிகாட்டி 
 
1 பிரிந்து போகிறவன் தன்னுடைய ஆசையின்படி செய்யப்பார்க்கிறான்,  
எல்லா ஞானத்திலும் தலையிட்டுக் கொள்ளுகிறான்.   
2 மூடன் ஞானத்தில் பிரியம்கொள்ளாமல்,  
தன்னுடைய மனதிலுள்ளவைகளை வெளிப்படுத்தப் பிரியப்படுகிறான்.   
3 துன்மார்க்கன் வர அவமானம் வரும்; அவமானத்தோடு இகழ்ச்சியும் வரும்.   
4 மனிதனுடைய வாய்மொழிகள் ஆழமான தண்ணீர்போல இருக்கும்;  
ஞானத்தின் ஊற்று பாய்கிற ஆற்றைப்போல இருக்கும்.   
5 வழக்கிலே நீதிமானைத் தோற்கடிக்கிறதற்கு,  
துன்மார்க்கனுக்கு பாரபட்சம் செய்வது நல்லதல்ல.   
6 மூடனுடைய உதடுகள் விவாதத்தில் நுழையும்,  
அவனுடைய வாய் அடிகளை வரவழைக்கும்.   
7 மூடனுடைய வாய் அவனுக்குக் கேடு,  
அவனுடைய உதடுகள் அவனுடைய ஆத்துமாவுக்குக் கண்ணி.   
8 கோள்சொல்கிறவனுடைய வார்த்தைகள் விளையாட்டுப்போல இருக்கும்,  
ஆனாலும் அவைகள் உள்ளத்திற்குள் குத்தும்.   
9 தன்னுடைய வேலையில் அசதியாக இருப்பவன் அனைத்தையும் அழிப்பவனுக்குச் சகோதரன்.   
10 யெகோவாவின் நாமம் மிகவும் பலத்த கோட்டை;  
நீதிமான் அதற்குள் ஓடி சுகமாக இருப்பான்.   
11 செல்வந்தனுடைய பொருள் அவனுக்கு பாதுகாப்பான பட்டணம்;  
அது அவனுடைய எண்ணத்தில் உயர்ந்த மதில்போல இருக்கும்.   
12 அழிவு வருமுன்பு மனிதனுடைய இருதயம் இறுமாப்பாக இருக்கும்;  
மேன்மைக்கு முன்னானது தாழ்மை.   
13 காரியத்தைக் கேட்பதற்குமுன் பதில் சொல்லுகிறவனுக்கு,  
அது புத்தியீனமும் வெட்கமுமாக இருக்கும்.   
14 மனிதனுடைய ஆவி அவனுடைய பலவீனத்தைத் தாங்கும்;  
முறிந்த ஆவி யாரால் தாங்கக்கூடும்?   
15 புத்திமானுடைய மனம் அறிவைச் சம்பாதிக்கும்;  
ஞானியின் செவி அறிவை நாடும்.   
16 ஒருவன் கொடுக்கும் வெகுமதி அவனுக்கு வழி உண்டாக்கி,  
பெரியோர்களுக்கு முன்பாக அவனைக் கொண்டுபோய்விடும்.   
17 தன்னுடைய வழக்கிலே முதலில் பேசுகிறவன் நீதிமான்போல் காணப்படுவான்;  
அவனுடைய அயலானோ வந்து அவனை பரிசோதிக்கிறான்.   
18 சீட்டுப்போடுதல் விரோதங்களை ஒழித்து,  
பலவான்கள் நடுவே நியாயம்தீர்க்கும்.   
19 பாதுகாப்பான பட்டணத்தை வசப்படுத்துவதைவிட  
கோபம்கொண்ட சகோதரனை வசப்படுத்துவது கடினம்;  
அவர்களுடைய விரோதங்கள் கோட்டைத் தாழ்ப்பாள்கள்போல இருக்கும்.   
20 அவனவன் வாயின் பலனால் அவனவன் வயிறு நிரம்பும்;  
அவனவன் உதடுகளின் விளைவினால் அவனவன் திருப்தியாவான்.   
21 மரணமும், ஜீவனும் நாவின் அதிகாரத்தில் இருக்கும்;  
அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைச் சாப்பிடுவார்கள்.   
22 மனைவியைக் கண்டடைகிறவன் நன்மையானதைக் கண்டடைகிறான்;  
யெகோவாவால் தயவையும் பெற்றுக்கொள்ளுகிறான்.   
23 தரித்திரன் கெஞ்சிக்கேட்கிறான்;  
செல்வந்தன் கடினமாக உத்திரவுகொடுக்கிறான்.   
24 நண்பர்கள் உள்ளவன் நேசிக்கவேண்டும்;  
சகோதரனைவிட அதிக சொந்தமாக நேசிக்கப்படுபவனும் உண்டு.