அத்தியாயம் 19
ஞானம் நன்மைகளின் ஊற்று 
 
1 மாறுபாடான உதடுகளுள்ள மூடனைவிட,  
உத்தமனாக நடக்கிற தரித்திரனே சிறப்பானவன்.   
2 ஆத்துமா அறிவில்லாமல் இருப்பது நல்லதல்ல;  
கால் துரிதமானவன் தப்பி நடக்கிறான்.   
3 மனிதனுடைய மதியீனம் அவனுடைய வழியைத் தாறுமாறாக்கும்;  
என்றாலும் அவனுடைய மனம் யெகோவாவுக்கு விரோதமாக எரிச்சலடையும்.   
4 செல்வம் அநேக நண்பர்களைச் சேர்க்கும்;  
தரித்திரனோ தன்னுடைய நண்பனாலும் பிரிந்துபோவான்.   
5 பொய்ச்சாட்சிக்காரன் தண்டனைக்குத் தப்பான்;  
பொய்களைப் பேசுகிறவனும் தப்புவதில்லை.   
6 பிரபுவின் தயவை அநேகர் வருந்திக் கேட்பார்கள்;  
கொடைகொடுக்கிறவனுக்கு எவனும் நண்பன்.   
7 தரித்திரனை அவனுடைய சகோதரர்கள் எல்லோரும் பகைக்கிறார்களே,  
எத்தனை அதிகமாக அவனுடைய நண்பர்கள் அவனுக்குத் தூரமாவார்கள்;  
அவர்களுடைய வார்த்தைகளை அவன் நாடுகிறான்,  
அவைகளோ வெறும் வார்த்தைகளே.   
8 ஞானத்தைப் பெற்றுக்கொள்ளுகிறவன் தன்னுடைய ஆத்துமாவை நேசிக்கிறான்;  
புத்தியைக் காக்கிறவன் நன்மையடைவான்.   
9 பொய்சாட்சிக்காரன் தண்டனைக்குத் தப்பமாட்டான்;  
பொய்களைப் பேசுகிறவன் நாசமடைவான்.   
10 மூடனுக்குச் செல்வம் தகாது;  
பிரபுக்களை ஆண்டுகொள்வது அடிமையானவனுக்கு எவ்வளவும் தகாது.   
11 மனிதனுடைய விவேகம் அவனுடைய கோபத்தை அடக்கும்;  
குற்றத்தை மன்னிப்பது அவனுக்கு மகிமை.   
12 ராஜாவின் கோபம் சிங்கத்தின் கெர்ச்சிப்புக்குச் சமானம்;  
அவனுடைய தயவு புல்லின்மேல் பெய்யும் பனிபோல இருக்கும்.   
13 மூடனாகிய மகன் தன்னுடைய தகப்பனுக்கு மிகுந்த துக்கம்;  
மனைவியின் சண்டைகள் ஓயாமல் ஒழுகும் நீர்.   
14 வீடும் செல்வமும் பெற்றோர்கள் வைக்கும் சொத்து;  
புத்தியுள்ள மனைவியோ யெகோவா அருளும் ஈவு.   
15 சோம்பல் தூங்கிவிழச்செய்யும்;  
அசதியானவன் பட்டினியாக இருப்பான்.   
16 கட்டளையைக் காத்துக்கொள்ளுகிறவன் தன்னுடைய ஆத்துமாவைக் காக்கிறான்;  
தன்னுடைய வழிகளை அவமதிக்கிறவன் சாவான்.   
17 ஏழைக்கு இரங்குகிறவன் யெகோவாவுக்குக் கடன்கொடுக்கிறான்;  
அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார்.   
18 நம்பிக்கையிருக்கும்வரை உன்னுடைய மகனைத் தண்டி;  
ஆனாலும் அவனைக் கொல்ல உன்னுடைய ஆத்துமாவில் தீர்மானிக்காதே.   
19 கடுங்கோபி தண்டனைக்குள்ளாவான்;  
நீ அவனைத் தப்புவித்தால் திரும்பவும் தப்புவிக்கவேண்டியதாக வரும்.   
20 உன்னுடைய முடிவுகாலத்தில் நீ ஞானமுள்ளவனாக இருக்கும்படி,  
ஆலோசனையைக்கேட்டு, புத்திமதியை ஏற்றுக்கொள்.   
21 மனிதனுடைய இருதயத்தின் எண்ணங்கள் அநேகம்;  
ஆனாலும் யெகோவாவுடைய யோசனையே நிலைநிற்கும்.   
22 நன்மைசெய்ய மனிதன் கொண்டிருக்கும் ஆசையே தயவு;  
பொய்யனைவிட தரித்திரன் சிறப்பானவன்.   
23 யெகோவாவுக்குப் பயப்படுதல் வாழ்க்கைக்கு ஏதுவானது;  
அதை அடைந்தவன் திருப்தியடைந்து நிலைத்திருப்பான்;  
தீமை அவனை அணுகாது.   
24 சோம்பேறி தன்னுடைய கையை பாத்திரத்திலே வைத்து,  
அதைத் திரும்பத் தன்னுடைய வாய்க்குகூட கொண்டுபோகாமல் இருக்கிறான்.   
25 பரியாசக்காரனை அடி, அப்பொழுது பேதை எச்சரிக்கப்படுவான்;  
புத்திமானைக் கடிந்துகொள், அவன் அறிவுள்ளவனாவான்.   
26 தன்னுடைய தகப்பனைக் கொள்ளையடித்து, தன்னுடைய தாயைத் துரத்திவிடுகிறவன்,  
வெட்கத்தையும், அவமானத்தையும் உண்டாக்குகிற மகன்.   
27 என் மகனே, அறிவைத் தரும் வார்த்தைகளைவிட்டு விலகச்செய்யும்  
போதகங்களை நீ கேட்காதே.   
28 அநியாய சாட்சிக்காரன் நியாயத்தை சபிக்கிறான்;  
துன்மார்க்கர்களுடைய வாய் அக்கிரமத்தை விழுங்கும்.   
29 பரியாசக்காரர்களுக்குத் தண்டனைகளும்,  
மூடர்களுடைய முதுகுக்கு அடிகளும் ஆயத்தமாக இருக்கிறது.