சங்கீதம் 120
ஆரோகண பாடல். 
 
1 என்னுடைய நெருக்கத்திலே யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டேன்;  
அவர் எனக்குச் செவிகொடுத்தார்.   
2 யெகோவாவே, பொய் உதடுகளுக்கும் வஞ்சகமாக பேசும் நாவுக்கும் என்னுடைய ஆத்துமாவைத் தப்புவியும்.   
3 வஞ்சக நாவே, உனக்கு என்ன கிடைக்கும்?  
உனக்கு என்ன செய்யப்படும்?   
4 பலவானுடைய கூர்மையான அம்புகளும்,  
சூரைச்செடிகளை எரிக்கும் தழலுமே கிடைக்கும்.   
5 ஐயோ, நான் மேசேக்கிலே வாழ்ந்தது போதும்,  
கேதாரின் கூடாரங்கள் அருகில் குடியிருந்ததும் போதும்!   
6 சமாதானத்தைப் பகைக்கிறவர்களிடம் என்னுடைய ஆத்துமா குடியிருந்ததும் போதும்!   
7 நான் சமாதானத்தை நாடுகிறேன்;  
அவர்களோ, நான் பேசும்போது போர்செய்ய முயற்சி செய்கிறார்கள்.