சங்கீதம் 121
ஆரோகண பாடல். 
 
1 எனக்கு உதவி வரும் மலைகளுக்கு நேராக  
என்னுடைய கண்களை உயர்த்துகிறேன்.   
2 வானத்தையும் பூமியையும் உண்டாக்கின  
யெகோவாவிடத்திலிருந்து எனக்கு உதவி வரும்.   
3 உன்னுடைய காலைத் தள்ளாடவிடமாட்டார்;  
உன்னைக் காக்கிறவர் உறங்கமாட்டார்.   
4 இதோ, இஸ்ரவேலைக் காக்கிறவர் உறங்குகிறதுமில்லை தூங்குகிறதுமில்லை.   
5 யெகோவா உன்னைக் காக்கிறவர்;  
யெகோவா உன்னுடைய வலது பக்கத்திலே உனக்கு நிழலாக இருக்கிறார்.   
6 பகலிலே வெயிலோ, இரவிலே நிலவோ  
உன்னைச் சேதப்படுத்துவதில்லை.   
7 யெகோவா உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்;  
அவர் உன்னுடைய ஆத்துமாவைக் காப்பார்.   
8 யெகோவா உன்னுடைய போக்கையும் உன்னுடைய வரத்தையும்  
இதுமுதற்கொண்டு என்றென்றும் காப்பார்.