சங்கீதம் 141
தாவீதின் பாடல். 
 
1 யெகோவாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்,  
என்னிடத்திற்கு விரைந்துவாரும்;  
நான் உம்மை நோக்கிக் கூப்பிடும்போது,  
என்னுடைய சத்தத்திற்குச் செவிகொடும்.   
2 என்னுடைய விண்ணப்பம் உமக்கு முன்பாகத் தூபமாகவும்,  
என் கையுயர்த்துதல் மாலைநேரப் பலியாகவும் இருக்கட்டும்.   
3 யெகோவாவே, என்னுடைய வாய்க்குக் காவல்வையும்;  
என்னுடைய உதடுகளின் வாசலைக் காத்துக்கொள்ளும்.   
4 அக்கிரமஞ்செய்கிற மனிதரோடு துன்மார்க்கச் செயல்களை நடப்பிக்கும்படி  
என்னுடைய இருதயத்தைத்  
துன்மார்க்கத்திற்கு இசைந்துப்போகச் செய்யாமல் இரும்;  
அவர்களுடைய ருசியுள்ள உணவுகளில் ஒன்றையும் நான் சாப்பிடாமல் இருப்பேனாக.   
5 நீதிமான் என்னைத் தயவாய்க்குட்டி,  
என்னைக் கடிந்துகொள்ளட்டும்;  
அது என்னுடைய தலைக்கு எண்ணெயைப்போலிருக்கும்;  
என்னுடைய தலை அதை நிராகரிப்பதில்லை;  
அவர்கள் இக்கட்டுகளில் நான் இன்னும் ஜெபம்செய்வேன்.   
6 அவர்களுடைய நியாயாதிபதிகள் கன்மலை மேலிருந்து  
தள்ளப்பட்டுபோகிறபோது,  
என்னுடைய வார்த்தைகள் இன்பமானவைகளென்று கேட்பார்கள்.   
7 பூமியின்மேல் ஒருவன் மரத்தை வெட்டிப் பிளக்கிறதுபோல,  
எங்களுடைய எலும்புகள் பாதாள வாய்க்கு நேராகச் சிதறடிக்கப்பட்டிருக்கிறது.   
8 ஆனாலும் ஆண்டவராகிய யெகோவாவே,  
என்னுடைய கண்கள் உம்மை நோக்கி இருக்கிறது;  
உம்மை நம்பியிருக்கிறேன்;  
என்னுடைய ஆத்துமாவை வெறுமையாக விடாதிரும்.   
9 அவர்கள் எனக்கு வைத்த கண்ணியின் சிக்குகளுக்கும்,  
அக்கிரமக்காரர்களின் சுருக்குகளுக்கும் என்னை விலக்கி பாதுகாத்துக்கொள்ளும்.   
10 துன்மார்க்கர்கள் தங்களுடைய வலைகளில் அகப்படுவார்களாக;  
நானோ அதற்குத் தப்பிக் கடந்துபோவேன்.