சங்கீதம் 142
குகையிலிருந்த போது தாவீதின் பாடல், ஜெபம். 
 
1 யெகோவாவை நோக்கிச் சத்தமிட்டுக் கூப்பிடுகிறேன்;  
யெகோவாவை நோக்கிச் சத்தமிட்டுக் கெஞ்சுகிறேன்.   
2 அவருக்கு முன்பாக என்னுடைய சஞ்சலத்தை ஊற்றுகிறேன்;  
அவருக்கு முன்பாக என்னுடைய நெருக்கத்தை அறிக்கையிடுகிறேன்.   
3 என்னுடைய ஆவி என்னில் தியங்கும்போது,  
நீர் என்னுடைய பாதையை அறிந்திருக்கிறீர்;  
நான் நடக்கிற வழியில் மறைவாக எனக்குக் கண்ணிவைத்தார்கள்.   
4 வலதுபக்கமாகக் கண்ணோக்கிப் பாரும்,  
என்னை அறிவார் ஒருவரும் இல்லை;  
எனக்கு அடைக்கலமில்லாமற் போனது;  
என்னுடைய ஆத்துமாவை விசாரிப்பார் ஒருவரும் இல்லை.   
5 யெகோவாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்;  
நீரே என் அடைக்கலமும்,  
உயிருள்ளோர் தேசத்திலே என்னுடைய பங்குமாக இருக்கிறீர் என்றேன்.   
6 என்னுடைய கூக்குரலுக்குச் செவிகொடும்,  
நான் மிகவும் தாழ்த்தப்பட்டேன்;  
என்னைப் பின்தொடருகிறவர்களுக்கு என்னைத் தப்புவியும்,  
அவர்கள் என்னிலும் பலவான்களாக இருக்கிறார்கள்.   
7 உமது பெயரை நான் துதிக்கும்படி,  
என்னுடைய ஆத்துமாவைக் காவலுக்கு நீங்கலாக்கிவிடும்;  
எனக்கு நீர் தயவு செய்யும்போது  
நீதிமான்கள் என்னைச் சூழ்ந்துகொள்ளுவார்கள்.