சங்கீதம் 143
தாவீதின் பாடல். 
 
1 யெகோவாவே, என்னுடைய ஜெபத்தைக் கேளும்,  
என்னுடைய விண்ணப்பங்களுக்குச் செவிகொடும்;  
உமது உண்மையின்படியும் உமது நீதியின்படியும் எனக்கு உத்திரவு அருளிச்செய்யும்.   
2 உயிருள்ள ஒருவனும் உமக்கு முன்பாக நீதிமானாக இல்லாததினாலே,  
அடியேனை நியாயத்தீர்ப்புச் செய்யாமல் இரும்.   
3 எதிரி என்னுடைய ஆத்துமாவைத் தொடர்ந்து,  
என்னுடைய உயிரைத் தரையோடு நசுக்கி,  
வெகுகாலத்திற்கு முன்பு இறந்தவர்கள்போல் என்னை இருளில் இருக்கச்செய்கிறான்.   
4 என்னுடைய ஆவி என்னில் தியங்குகிறது;  
என்னுடைய இருதயம் எனக்குள் சோர்ந்துபோகிறது.   
5 ஆரம்பநாட்களை நினைக்கிறேன், உமது செய்கைகளையெல்லாம் தியானிக்கிறேன்;  
உமது கரத்தின் செயல்களை யோசிக்கிறேன்.   
6 என்னுடைய கைகளை உமக்கு நேராக விரிக்கிறேன்;  
வறண்ட நிலத்தைப்போல் என்னுடைய ஆத்துமா உம்மேல் தாகமாக இருக்கிறது. (சேலா)   
7 யெகோவாவே, சீக்கிரமாக எனக்குச் செவிகொடும்,  
என்னுடைய ஆவி சோர்ந்து போகிறது;  
நான் குழியில் இறங்குகிறவர்களுக்கு ஒப்பாகாதபடிக்கு,  
உமது முகத்தை எனக்கு மறைக்காமல் இரும்.   
8 அதிகாலையில் உமது கிருபையைக் கேட்கச்செய்யும்,  
உம்மை நம்பியிருக்கிறேன்,  
நான் நடக்கவேண்டிய வழியை எனக்குக் காண்பியும்;  
உம்மிடத்தில் என்னுடைய ஆத்துமாவை உயர்த்துகிறேன்.   
9 யெகோவாவே, என்னுடைய எதிரிகளுக்கு என்னைத் தப்புவியும்;  
உம்மைப் புகலிடமாகக் கொள்ளுகிறேன்.   
10 உமக்குப் பிரியமானதைச் செய்ய எனக்குப் போதித்தருளும்,  
நீரே என் தேவன்;  
உம்முடைய நல்ல ஆவி என்னைச் செம்மையான வழியிலே நடத்தட்டும்.   
11 யெகோவாவே, உம்முடைய பெயரினிமித்தம் என்னை உயிர்ப்பியும்;  
உம்முடைய நீதியின்படி என்னுடைய ஆத்துமாவை  
பிரச்சனைகளுக்கு நீங்கலாக்கிவிடும்.   
12 உம்முடைய கிருபையின்படி என்னுடைய எதிரிகளை அழித்து,  
என்னுடைய ஆத்துமாவை ஒடுக்குகிற யாவரையும் அழியும்;  
நான் உமது அடியேன்.