சங்கீதம் 147
1 யெகோவாவை துதியுங்கள்;  
நம்முடைய தேவனைப் புகழ்ந்து பாடுகிறது நல்லது,  
துதித்தலே இன்பமும் ஏற்றதுமாக இருக்கிறது.   
2 யெகோவா எருசலேமைக் கட்டுகிறார்;  
துரத்தப்பட்ட இஸ்ரவேலர்களைக் கூட்டிச் சேர்க்கிறார்.   
3 இருதயம் நொறுங்குண்டவர்களைக் குணமாக்குகிறார்,  
அவர்களுடைய காயங்களைக் கட்டுகிறார்.   
4 அவர் நட்சத்திரங்களின் தொகையை எண்ணி,  
அவைகளுக்கெல்லாம் பெயரிட்டு அழைக்கிறார்.   
5 நம்முடைய ஆண்டவர் பெரியவரும் மகா பெலமுள்ளவருமாக இருக்கிறார்;  
அவருடைய அறிவு அளவில்லாதது.   
6 யெகோவா சாந்தகுணமுள்ளவர்களை உயர்த்துகிறார்;  
துன்மார்க்கர்களைத் தரைவரை தாழ்த்துகிறார்.   
7 யெகோவாவை துதியுடன் பாடிக்கொண்டாடுங்கள்;  
நம்முடைய தேவனைச் சுரமண்டலத்தால் புகழ்ந்து பாடுங்கள்.   
8 அவர் வானத்தை மேகங்களால் மூடி,  
பூமிக்கு மழையை ஆயத்தப்படுத்தி,  
மலைகளில் புல்லை முளைக்கச்செய்கிறார்.   
9 அவர் மிருகங்களுக்கும் கூப்பிடுகிற காக்கைக் குஞ்சுகளுக்கும் ஆகாரங்கொடுக்கிறார்.   
10 அவர் குதிரையின் பலத்தில் விருப்பமாக இருக்கமாட்டார்;  
வீரனுடைய கால்களில் பிரியப்படமாட்டார்.   
11 தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்கள்மேல்  
யெகோவா பிரியமாக இருக்கிறார்.   
12 எருசலேமே, யெகோவாவுக்கு நன்றி சொல்;  
சீயோனே, உன்னுடைய தேவனைத் துதி.   
13 அவர் உன்னுடைய வாசல்களின் தாழ்ப்பாள்களைப் பலப்படுத்தி,  
உன்னிடத்திலுள்ள உன்னுடைய பிள்ளைகளை ஆசீர்வதிக்கிறார்.   
14 அவர் உன்னுடைய எல்லைகளைச் சமாதானமுள்ளவைகளாக மாற்றி,  
செழிப்பான கோதுமையினால் உன்னைத் திருப்தியாக்குகிறார்.   
15 அவர் தமது வார்த்தையைப் பூமியிலே அனுப்புகிறார்;  
அவருடைய சொல் மகா விரைவாக செல்லுகிறது.   
16 பஞ்சைப்போல் உறைந்த மழையைத் தருகிறார்;  
சாம்பலைப்போல உறைந்த பனியைத் தூவுகிறார்.   
17 அவர் தமது கல்மழையைத் துணிக்கைகளாக அனுப்புகிறார்;  
அவருடைய குளிருக்கு முன்பாக நிற்பவன் யார்?   
18 அவர் தமது வார்த்தையை அனுப்பி, அவைகளை உருகச்செய்கிறார்;  
தமது காற்றை வீசும்படி செய்ய, தண்ணீர்கள் ஓடும்.   
19 யாக்கோபுக்குத் தம்முடைய வசனங்களையும்,  
இஸ்ரவேலுக்குத் தமது பிரமாணங்களையும் தமது நியாயங்களையும் அறிவிக்கிறார்.   
20 அவர் வேறே எந்த தேசத்திற்கும் இப்படிச் செய்ததில்லை;  
அவருடைய கட்டளைகளை அறியாமற் போகிறார்கள்.  
அல்லேலூயா.