சங்கீதம் 25
தாவீதின் பாடல். 
 
1 யெகோவாவே, உம்மிடத்தில் என்னுடைய ஆத்துமாவை உயர்த்துகிறேன்.   
2 என் தேவனே, உம்மை நம்பி இருக்கிறேன்,  
நான் வெட்கப்பட்டுப்போகாதபடி செய்யும்;  
என்னுடைய எதிரிகள் என்னை மேற்கொண்டு மகிழவிடாமலிரும்.   
3 உம்மை நோக்கிக் காத்திருக்கிற ஒருவரும் வெட்கப்பட்டுப் போகாதபடி செய்யும்;  
காரணமில்லாமல் துரோகம்செய்கிறவர்களே வெட்கப்பட்டுப் போவார்களாக.   
4 யெகோவாவே, உம்முடைய வழிகளை எனக்குத் தெரிவியும்;  
உம்முடைய பாதைகளை எனக்குப் போதித்தருளும்.   
5 உம்முடைய சத்தியத்திலே என்னை நடத்தி, என்னைப் போதித்தருளும்;  
நீரே என்னுடைய இரட்சிப்பின் தேவன்,  
உம்மை நோக்கி நாள்முழுதும் காத்திருக்கிறேன்.   
6 யெகோவாவே, உம்முடைய இரக்கங்களையும் உம்முடைய கருணையையும் நினைத்தருளும்,  
அவை தொடக்கமில்லா காலம் முதல் இருக்கின்றது.   
7 என்னுடைய இளவயதின் பாவங்களையும் என்னுடைய மீறுதல்களையும் நினைக்காமலிரும்;  
யெகோவாவே, உம்முடைய தயவிற்காக என்னை உமது கிருபையின்படியே நினைத்தருளும்.   
8 யெகோவா நல்லவரும் உத்தமருமாக இருக்கிறார்;  
ஆகையால் பாவிகளுக்கு வழியைத் தெரிவிக்கிறார்.   
9 சாந்த குணமுள்ளவர்களை நியாயத்திலே நடத்தி,  
சாந்த குணமுள்ளவர்களுக்குத் தமது வழியைப் போதிக்கிறார்.   
10 யெகோவாவுடைய உடன்படிக்கையையும் அவருடைய சாட்சிகளையும் கைக்கொள்ளுகிறவர்களுக்கு,  
அவருடைய பாதைகளெல்லாம் கிருபையும் சத்தியமுமானவை.   
11 யெகோவாவே, என்னுடைய அக்கிரமம் பெரிது;  
உம்முடைய பெயரினால் அதை மன்னித்தருளும்.   
12 யெகோவாவுக்குப் பயப்படுகிற மனிதன் எவனோ  
அவனுக்குத் தாம் தெரிந்துகொள்ளும் வழியைப் போதிப்பார்.   
13 அவனுடைய ஆத்துமா நன்மையில் தங்கும்;  
அவன் சந்ததி பூமியைச் சொந்தமாக்கிக்கொள்ளும்.   
14 யெகோவாவுடைய இரகசியம் அவருக்குப் பயந்தவர்களிடத்தில் இருக்கிறது;  
அவர்களுக்குத் தம்முடைய உடன்படிக்கையைத் தெரியப்படுத்துவார்.   
15 என்னுடைய கண்கள் எப்போதும் யெகோவாவை நோக்கிக்கொண்டிருக்கின்றன;  
அவரே என்னுடைய கால்களை வலைக்கு நீங்கலாக்கிவிடுவார்.   
16 என்மேல் நோக்கமாகி, எனக்கு இரங்கும்;  
நான் தனித்தவனும், பாதிக்கப்பட்டவனுமாக இருக்கிறேன்.   
17 என்னுடைய இருதயத்தின் வியாகுலங்கள் பெருகியிருக்கின்றன;  
என்னுடைய பிரச்சனைகளிலிருந்து என்னை நீங்கலாக்கிவிடும்.   
18 என்னுடைய பாதிப்பையையும் என்னுடைய துன்பத்தையும் பார்த்து,  
என்னுடைய பாவங்களையெல்லாம் மன்னித்தருளும்.   
19 என்னுடைய எதிரிகளைப் பாரும்;  
அவர்கள் பெருகியிருந்து, கொடூர வெறுப்பாய் என்னை வெறுக்கிறார்கள்.   
20 என் ஆத்துமாவைக் காப்பாற்றி என்னை விடுவியும்;  
நான் வெட்கப்பட்டுப்போகாதபடி செய்யும்; உம்மிடம் அடைக்கலம் வந்துள்ளேன்.   
21 உத்தமமும், நேர்மையும் என்னைக் காக்கட்டும்;  
நான் உமக்குக் காத்திருக்கிறேன்.   
22 தேவனே, இஸ்ரவேலை அவனுடைய எல்லாப் பிரச்சனைகளுக்கும் விடுவித்து மீட்டுவிடும்.