சங்கீதம் 24
தாவீதின் பாடல். 
 
1 பூமியும் அதின் நிறைவும்,  
உலகமும் அதிலுள்ள குடிமக்கள் யாவும் யெகோவாவுடையவை.   
2 ஏனெனில் அவரே அதைக் கடல்களுக்கு மேலாக அஸ்திபாரப்படுத்தி,  
அதை நதிகளுக்கு மேலாக நிறுவினார்.  
3 யார் யெகோவாவுடைய மலையில் ஏறுவான்?  
யார் அவருடைய பரிசுத்த இடத்தில் பிரவேசிப்பான்?   
4 கைகளில் சுத்தமுள்ளவனும் இருதயத்தில் தூய்மை உள்ளவனுமாக இருந்து,  
தன்னுடைய ஆத்துமாவை மாயைக்கு ஒப்புக்கொடுக்காமலும்,  
பொய்யாக ஆணையிடாமலும் இருக்கிறவனே.   
5 அவன் கர்த்தரால் ஆசீர்வாதத்தையும்,  
தன்னுடைய இரட்சிப்பின் தேவனால் நீதியையும் பெறுவான்.   
6 இதுவே அவரைத் தேடி விசாரித்து,  
அவருடைய சமுகத்தை நாடுகிற யாக்கோபு என்னும் சந்ததி. (சேலா)   
7 வாசல்களே, உங்களுடைய தலைகளை உயர்த்துங்கள்;  
நித்திய கதவுகளே, உயருங்கள்; மகிமையின் இராஜா உள்ளே நுழைவார்.   
8 யார் இந்த மகிமையின் இராஜா?  
அவர் வல்லமையும் பராக்கிரமமும் உள்ள யெகோவா;  
அவர் யுத்தத்தில் பராக்கிரமமும் உள்ள கர்த்தராமே.   
9 வாசல்களே, உங்களுடைய தலைகளை உயர்த்துங்கள்;  
நித்திய கதவுகளே, உயருங்கள், மகிமையின் இராஜா உள்ளே நுழைவார்.   
10 யார் இந்த மகிமையின் இராஜா?  
அவர் சேனைகளின் யெகோவா;  
அவரே மகிமையின் இராஜா (சேலா).