சங்கீதம் 29
தாவீதின் பாடல். 
 
1 தேவ பிள்ளைகளே, யெகோவாவுக்கு மகிமையையும் வல்லமையையும் செலுத்துங்கள்;  
கர்த்தருக்கே அதைச் செலுத்துங்கள்.   
2 யெகோவாவுடைய பெயருக்கேற்ற மகிமையை அவருக்குச் செலுத்துங்கள்;  
பரிசுத்த அலங்காரத்துடனே யெகோவாவை தொழுதுகொள்ளுங்கள்.   
3 யெகோவாவுடைய சத்தம் சமுத்திரங்கள் மேல் தொனிக்கிறது;  
மகிமையுள்ள தேவன் முழங்குகிறார்;  
யெகோவா திரளான தண்ணீர்களின்மேல் இருக்கிறார்.   
4 யெகோவாவுடைய சத்தம் வல்லமையுள்ளது;  
யெகோவாவுடைய சத்தம் மகத்துவமுள்ளது.   
5 யெகோவாவுடைய சத்தம் கேதுருமரங்களை முறிக்கிறது;  
யெகோவா லீபனோனின் கேதுருமரங்களை முறிக்கிறார்.   
6 அவைகளைக் கன்றுக்குட்டிகளைப்போலவும், லீபனோனையும்,  
சீரியோனையும் காண்டாமிருகக் குட்டிகளைப்போலவும் துள்ளச்செய்கிறார்.   
7 யெகோவாவுடைய சத்தம் தீப்பிழம்புகளைப் பிளக்கும்.   
8 யெகோவாவுடைய சத்தம் வனாந்தரத்தை அதிரச்செய்யும்;  
யெகோவா காதேஸ் வனாந்தரத்தை அதிரச்செய்கிறார்.   
9 யெகோவாவுடைய சத்தம் பெண்மான்களை ஈனும்படி செய்து,  
காடுகளை வெளியாக்கும்;  
அவருடைய ஆலயத்திலுள்ள அனைவரும்  
யெகோவாவுக்கு மகிமை என்று ஆர்ப்பரிக்கிறார்கள்.   
10 யெகோவா பெருவெள்ளத்தின்மேல் அமர்ந்திருந்தார்;  
யெகோவா என்றென்றைக்கும் ராஜாவாக அமர்ந்திருக்கிறார்.   
11 யெகோவா தமது மக்களுக்குப் பெலன் கொடுப்பார்;  
யெகோவா தமது மக்களுக்குச் சமாதானம் அருளி,  
அவர்களை ஆசீர்வதிப்பார்.