சங்கீதம் 30
ஆலயத்தின் அர்ப்பணிப்பின் பாடல். தாவீதின் பாடல். 
 
1 யெகோவாவே,  
என்னுடைய எதிரிகள்  
என்னை மேற்கொண்டு அவர்களை மகிழவிடாமல்,  
நீர் என்னைக் கைதூக்கி எடுத்தபடியினால்,  
நான் உம்மைப் போற்றுவேன்.   
2 என் தேவனாகிய யெகோவாவே,  
உம்மை நோக்கிக் கூப்பிட்டேன்,  
என்னை நீர் குணமாக்கினீர்.   
3 யெகோவாவே, நீர் என் ஆத்துமாவைப் பாதாளத்திலிருந்து ஏறச்செய்து,  
நான் குழியில் இறங்காதபடி என்னை உயிரோடு காத்தீர்.   
4 யெகோவாவுடைய பரிசுத்தவான்களே,  
அவரைப் புகழ்ந்துபாடி,  
அவருடைய பரிசுத்தத்தின் நினைவு கூருதலைக் கொண்டாடுங்கள்.   
5 ஏனெனில் அவருடைய கோபம் ஒர் இமைப்பொழுதே,  
அவருடைய தயவோ வாழ்நாள் முழுவதும்;  
மாலையில் அழுகை வரும்,  
அதிகாலையிலே மகிழ்ச்சி உண்டாகும்.   
6 நான் எப்போதும் அசைக்கப்படுவதில்லையென்று,  
நான் வளமுடன் இருக்கும்போது சொன்னேன்.   
7 யெகோவாவே, உம்முடைய தயவினால்  
நீர் என்னுடைய மலையை வலிமையாக நிற்கச்செய்திருந்தீர்;  
உமது முகத்தை நீர் மறைத்துக்கொண்டபோதோ நான் கலங்கினவனானேன்;   
8 நான் கல்லறையில் இறங்கும்போது என்னுடைய இரத்தத்தால் என்ன லாபமுண்டு?  
புழுதி உம்மைத் துதிக்குமோ?  
அது உமது சத்தியத்தை அறிவிக்குமோ?   
9 யெகோவாவே, நீர் எனக்குச் செவிகொடுத்து  
என்மேல் இரக்கமாக இரும்;  
யெகோவாவே, நீர் எனக்குச் சகாயராக இரும் என்று சொல்லி;   
10 யெகோவாவே, உம்மை நோக்கிக் கூப்பிட்டேன்;  
யெகோவாவை நோக்கிக் கெஞ்சினேன்.   
11 என்னுடைய புலம்பலை ஆனந்த சந்தோஷமாக மாறச்செய்தீர்;  
என்னுடைய மகிமை அமைதியாக இல்லாமல்  
உம்மைப் புகழ்ந்து பாடும்படியாக  
நீர் என்னுடைய சணலாடையை களைந்துபோட்டு,  
மகிழ்ச்சியினால் என்னை உடுத்தினீர்.   
12 என் தேவனாகிய யெகோவாவே,  
உம்மை என்றென்றைக்கும் துதிப்பேன்.