சங்கீதம் 37
தாவீதின் பாடல். 
 
1 பொல்லாதவர்களைக்குறித்து எரிச்சலடையாதே;  
நியாயக்கேடு செய்கிறவர்கள்மேல் பொறாமை கொள்ளாதே.   
2 அவர்கள் புல்லைப்போல் சீக்கிரமாய் அறுக்கப்பட்டு,  
பச்சைத்தாவரத்தைப்போல் வாடிப்போவார்கள்.   
3 யெகோவாவை நம்பி நன்மைசெய்;  
தேசத்தில் குடியிருந்து சத்தியத்தை மேய்ந்துகொள்.   
4 யெகோவாவிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு;  
அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார்.   
5 உன் வழியைக் யெகோவாவுக்கு ஒப்புவித்து,  
அவர்மேல் நம்பிக்கையாயிரு;  
அவரே காரியத்தை வாய்க்கச்செய்வார்.   
6 உன் நீதியை வெளிச்சத்தைப் போலவும்,  
உன் நியாயத்தைப் பட்டப்பகலைப்போலவும் விளங்கச்செய்வார்.   
7 யெகோவாவை நோக்கி அமர்ந்து, அவருக்குக் காத்திரு;  
காரியசித்தியுள்ளவன் மேலும்  
தீவினைகளைச் செய்கிற மனிதன் மேலும் எரிச்சலாகாதே.   
8 கோபத்தை தள்ளி, கடுங்கோபத்தை விட்டுவிடு;  
பொல்லாப்புச் செய்ய ஏதுவான எரிச்சல் உனக்கு வேண்டாம்.   
9 பொல்லாதவர்கள் அறுக்கப்பட்டுபோவார்கள்;  
யெகோவாவுக்குக் காத்திருக்கிறவர்களோ  
பூமியைச் சுதந்தரித்துக் கொள்வார்கள்.   
10 இன்னும் கொஞ்சநேரந்தான், அப்போது துன்மார்க்கன் இருக்கமாட்டான்;  
அவன் நிலையை உற்று விசாரித்தாயானால் அவன் இல்லை.   
11 சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து,  
மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்.   
12 துன்மார்க்கன் நீதிமானுக்கு விரோதமாகத் தீங்கு நினைத்து,  
அவன்மேல் பல்லைக் கடிக்கிறான்.   
13 ஆண்டவர் அவனைப் பார்த்து நகைக்கிறார்;  
அவனுடைய நாள் வருகிறதென்று காண்கிறார்.   
14 சிறுமையும் எளிமையுமானவனை வீழ்த்தவும்,  
செம்மை மார்க்கத்தாரை விழசெய்யவும்,  
துன்மார்க்கர்கள் வாளை உருவி, தங்கள் வில்லை நாணேற்றுகிறார்கள்.   
15 ஆனாலும் அவர்கள் வாள் அவர்களுடைய இருதயத்திற்குள் உருவிப்போகும்;  
அவர்கள் வில்லுகள் முறியும்.   
16 அநேக துன்மார்க்கர்களுக்கு இருக்கிற திரளான செல்வத்தைவிட,  
நீதிமானுக்குள்ள கொஞ்சமே நல்லது.   
17 துன்மார்க்கருடைய கரங்கள் முறியும்;  
நீதிமான்களையோ யெகோவா தாங்குகிறார்.   
18 உத்தமர்களின் நாட்களைக் யெகோவா அறிந்திருக்கிறார்;  
அவர்கள் சுதந்தரம் என்றென்றைக்கும் இருக்கும்.   
19 அவர்கள் ஆபத்துக்காலத்திலே வெட்கப்பட்டுப்போகாதிருந்து,  
பஞ்சகாலத்திலே திருப்தியடைவார்கள்.   
20 துன்மார்க்கர்களோ அழிந்துபோவார்கள்,  
யெகோவாவுடைய எதிரிகள் ஆட்டுக்குட்டிகளின் கொழுப்பைப்போல  
புகைந்து போவார்கள், அவர்கள் புகையாய்ப் புகைந்து போவார்கள்.   
21 துன்மார்க்கன் கடன் வாங்கிச் செலுத்தாமற் போகிறான்;  
நீதிமானோ இரங்கிக்கொடுக்கிறான்.   
22 அவரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்;  
அவரால் சபிக்கப்பட்டவர்களோ அறுக்கப்பட்டுபோவார்கள்.   
23 நல்ல மனிதனுடைய நடைகள் யெகோவாவால் உறுதிப்படும்,  
அவனுடைய வழியின்மேல் அவர் பிரியமாயிருக்கிறார்.   
24 அவன் விழுந்தாலும் தள்ளப்பட்டு போவதில்லை;  
யெகோவா தமது கையினால் அவனைத் தாங்குகிறார்.   
25 நான் இளைஞனாயிருந்தேன்,  
முதிர்வயதுள்ளவனுமானேன்;  
ஆனாலும் நீதிமான் கைவிடப்பட்டதையும்,  
அவன் சந்ததி அப்பத்திற்கு பிச்சை எடுக்கிறதையும் நான் காணவில்லை.   
26 அவன் எப்பொழுதும் இரங்கிக் கடன் கொடுக்கிறான்,  
அவன் சந்ததி ஆசீர்வதிக்கப்படும்.   
27 தீமையை விட்டு விலகி, நன்மை செய்;  
என்றென்றைக்கும் நிலைத்திருப்பாய்.   
28 யெகோவா நியாயத்தை விரும்புகிறவர்;  
அவர் தமது பரிசுத்தவான்களைக் கைவிடுவதில்லை;  
அவர்கள் என்றைக்கும் காக்கப்படுவார்கள்;  
துன்மார்க்கர்களுடைய சந்ததியோ அறுக்கப்பட்டுபோகும்.   
29 நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு,  
என்றைக்கும் அதிலே குடியிருப்பார்கள்.   
30 நீதிமானுடைய வாய் ஞானத்தை சொல்லி,  
அவனுடைய நாவு நியாயத்தைப் பேசும்.   
31 அவனுடைய தேவன் அருளிய வேதம் அவன் இருதயத்தில் இருக்கிறது;  
அவன் நடைகளில் ஒன்றும் பிசகுவதில்லை.   
32 துன்மார்க்கன் நீதிமான்மேல் கண்வைத்து,  
அவனைக் கொல்ல வகைதேடுகிறான்.   
33 யெகோவாவோ அவனை இவன் கையில் விடுவதில்லை;  
அவன் நியாயம் விசாரிக்கப்படும்போது, அவனை தண்டனைக்குள்ளாகத் தீர்ப்பதுமில்லை.   
34 நீ யெகோவாவுக்குக் காத்திருந்து,  
அவருடைய வழியைக் கைக்கொள்;  
அப்பொழுது நீ பூமியைச் சுதந்தரித்துக்கொள்வதற்கு அவர் உன்னை உயர்த்துவார்;  
துன்மார்க்கர்கள் அறுக்கப்பட்டுபோவதை நீ காண்பாய்.   
35 கொடிய பலவந்தனான ஒரு துன்மார்க்கனைக் கண்டேன்  
அவன் தனக்கேற்ற நிலத்தில் முளைத்திருக்கிற பச்சைமரத்தைப்போல் தழைத்தவனாயிருந்தான்.   
36 ஆனாலும் அவன் ஒழிந்துபோனான்; பாருங்கள்,  
அவன் இல்லை; நான் மறுபடியும் போனேன்,  
அவன் காணப்படவில்லை.   
37 நீ உத்தமனை நோக்கி,  
செம்மையானவனைப் பார்த்திரு;  
அந்த மனிதனுடைய முடிவு சமாதானம்.   
38 அக்கிரமக்காரர் ஒன்றாக அழிக்கப்படுவார்கள்;  
அறுக்கப்பட்டுபோவதே துன்மார்க்கர்களின் முடிவு.   
39 நீதிமான்களுடைய இரட்சிப்பு யெகோவாவால் வரும்;  
இக்கட்டுக்காலத்தில் அவரே அவர்கள் அடைக்கலம்.   
40 யெகோவா அவர்களுக்கு உதவிசெய்து,  
அவர்களை விடுவிப்பார்;  
அவர்கள் அவரை நம்பியிருக்கிறபடியால்,  
அவர்களைத் துன்மார்க்கர்களுடைய கைக்குத் தப்புவித்து காப்பாற்றுவார்.