சங்கீதம் 38
நினைவுகூருதலுக்கான தாவீதின் பாடல். 
 
1 யெகோவாவே, உம்முடைய கோபத்தில் என்னைக் கடிந்துகொள்ள வேண்டாம்;  
உம்முடைய கடுங்கோபத்தில் என்னைத் தண்டிக்க வேண்டாம்.   
2 உம்முடைய அம்புகள் எனக்குள்ளே துளைத்திருக்கிறது;  
உமது கை என்னைத் தாங்குகிறது.   
3 உமது கோபத்தினால் என் உடலில் ஆரோக்கியமில்லை;  
என் பாவத்தினால் என் எலும்புகளில் சுகமில்லை.   
4 என் அக்கிரமங்கள் என் தலைக்கு மேலாகப் பெருகினது,  
அவைகள் பாரச்சுமையைப்போல என்னால் தாங்கமுடியாத பாரமானது.   
5 என் மதியீனத்தினால் என் புண்கள் அழுகி நாற்றமெடுத்தது.   
6 நான் வேதனைப்பட்டு ஒடுங்கினேன்; நாள் முழுவதும் துக்கப்பட்டுத் திரிகிறேன்.   
7 என் குடல்கள் எரிபந்தமாக எரிகிறது;  
என் உடலில் ஆரோக்கியம் இல்லை.   
8 நான் பெலன் இழந்து, மிகவும் நொறுக்கப்பட்டேன்;  
என் இருதயத்தின் கொந்தளிப்பினால் கதறுகிறேன்.   
9 ஆண்டவரே, என் ஏக்கமெல்லாம் உமக்கு முன்பாக இருக்கிறது;  
என் தவிப்பு உமக்கு மறைவாக இருக்கவில்லை.   
10 என் உள்ளம் குழம்பி அலைகிறது;  
என் பெலன் என்னைவிட்டு விலகி, என் கண்களின் ஒளி கூட இல்லாமல்போனது.   
11 என் நண்பர்களும் என் தோழர்களும் என் வாதையைக் கண்டு விலகுகிறார்கள்;  
என் இனத்தாரும் தூரத்திலே நிற்கிறார்கள்.   
12 என் உயிரை வாங்கத்தேடுகிறவர்கள் எனக்குக் கண்ணிகளை வைக்கிறார்கள்;  
எனக்குத் தீங்கை தேடுகிறவர்கள் கேடானவைகளைப் பேசி,  
நாள்முழுவதும் வஞ்சனைகளை யோசிக்கிறார்கள்.   
13 நானோ செவிடனைப்போலக் கேட்காதவனாகவும்,  
ஊமையனைப்போல வாய் திறக்காதவனாகவும் இருக்கிறேன்.   
14 காதுகேட்காதவனும், தன்னுடைய வாயில் பதில் இல்லாதவனுமாக இருக்கிற மனிதனைப் போலானேன்.   
15 யெகோவாவே, உமக்குக் காத்திருக்கிறேன்;  
என் தேவனாகிய ஆண்டவரே, நீர் பதில் கொடுப்பீர்.   
16 அவர்கள் எனக்காக சந்தோஷப்படாதபடிக்கு இப்படிச் சொன்னேன்;  
என்னுடைய கால் தவறும்போது என்மேல் பெருமை பாராட்டுவார்களே.   
17 நான் தடுமாறி விழ ஏதுவாக இருக்கிறேன்;  
என்னுடைய துக்கம் எப்பொழுதும் எனக்கு முன்பாக இருக்கிறது.   
18 என் அக்கிரமத்தை நான் அறிக்கையிட்டு,  
என் பாவத்திற்காக கவலைப்படுகிறேன்.   
19 என் எதிரிகள் வாழ்ந்து பலத்திருக்கிறார்கள்;  
காரணமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் பெருகியிருக்கிறார்கள்.   
20 நான் நன்மையைப் பின்பற்றுகிறபடியால்,  
நன்மைக்குத் தீமை செய்கிறவர்கள் என்னை விரோதிக்கிறார்கள்.   
21 யெகோவாவே, என்னைக் கைவிடாமலிரும்;  
என் தேவனே, எனக்குத் தூரமாக இருக்கவேண்டாம்.   
22 என்னுடைய இரட்சிப்பாகிய ஆண்டவரே,  
எனக்குச் உதவிசெய்ய விரைவாகவாரும்.