சங்கீதம் 6
செமினீத்தால் நரம்புக் கருவிகளை இசைப்பவர்களின் இராகத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல். 
 
1 யெகோவாவே, உம்முடைய கோபத்திலே என்னைக் கடிந்துகொள்ளாமல் இரும்,  
உம்முடைய கடுங்கோபத்திலே என்னைத் தண்டியாமல் இரும்.   
2 என்மேல் இரக்கமாக இரும் யெகோவாவே,  
நான் பெலனில்லாமல் போனேன்;  
என்னைக் குணமாக்கும் யெகோவாவே,  
என்னுடைய எலும்புகள் நடுங்குகின்றன.   
3 என்னுடைய ஆத்துமா மிகவும் வியாகுலப்படுகிறது; யெகோவாவே,  
எதுவரைக்கும் இரங்காமலிருப்பீர்.   
4 திரும்பும் யெகோவாவே, என்னுடைய ஆத்துமாவை விடுவியும்;  
உம்முடைய கிருபையினால் என்னை இரட்சியும்.   
5 மரணத்தில் உம்மை யாரும் நினைவுகூர்வதில்லை,  
பாதாளத்தில் உம்மைத் துதிப்பவன் யார்?   
6 என்னுடைய பெருமூச்சினால் இளைத்துப்போனேன்;  
இரவுமுழுவதும் என்னுடைய கண்ணீரால் என்னுடைய படுக்கையை மிகவும் ஈரமாக்கி,  
என்னுடைய கட்டிலை நனைக்கிறேன்.   
7 துயரத்தினால் என்னுடைய கண் குழி விழுந்துபோனது,  
என்னுடைய எதிரிகள் அனைவர் நிமித்தமும் மங்கிப்போனது.   
8 அக்கிரமக்காரர்களே, நீங்கள் எல்லோரும் என்னைவிட்டு அகன்றுபோங்கள்;  
யெகோவா என்னுடைய அழுகையின் சத்தத்தைக் கேட்டார்.   
9 யெகோவா என்னுடைய விண்ணப்பத்தைக் கேட்டார்;  
யெகோவா என்னுடைய ஜெபத்தை ஏற்றுக்கொள்ளுவார்.   
10 என்னுடைய எதிரிகள் எல்லோரும் வெட்கி மிகவும் கலங்கிப்போவார்கள்;  
அவர்கள் பின்னாகத் திரும்பி உடனே வெட்கப்படுவார்கள்.