சங்கீதம் 97
1 யெகோவா ராஜரிகம்செய்கிறார்; பூமி பூரிப்பாகி,  
திரளான தீவுகள் மகிழட்டும்.   
2 மேகமும் மந்தாரமும் அவரைச் சூழ்ந்திருக்கிறது;  
நீதியும் நியாயமும் அவருடைய சிங்காசனத்தின் ஆதாரம்.   
3 நெருப்பு அவருக்கு முன்சென்று,  
சுற்றிலும் இருக்கிற அவருடைய எதிரிகளைச் சுட்டெரிக்கிறது.   
4 அவருடைய மின்னல்கள் பூமியைப் பிரகாசிப்பித்தது;  
பூமி அதைக்கண்டு அதிர்ந்தது.   
5 யெகோவாவின் பிரசன்னத்தினால் மலைகள் மெழுகுபோல உருகினது,  
சர்வ பூமியினுடைய ஆண்டவரின் பிரசன்னத்தினாலேயே உருகிப்போனது.   
6 வானங்கள் அவருடைய நீதியை வெளிப்படுத்துகிறது;  
எல்லா மக்களும் அவருடைய மகிமையைக் காண்கிறார்கள்.   
7 சிலைகளை வணங்கி,  
விக்கிரகங்களைப்பற்றிப் பெருமைபாராட்டுகிற அனைவரும் வெட்கப்பட்டுப் போவார்களாக;  
தெய்வங்களே, நீங்களெல்லோரும் அவரைத் தொழுதுகொள்ளுங்கள்.   
8 சீயோன் கேட்டு மகிழ்ந்தது; யெகோவாவே,  
உம்முடைய நியாயத்தீர்ப்புகளினால் யூதாவின் மகள்கள் சந்தோஷப்பட்டார்கள்.   
9 யெகோவாவே, பூமி அனைத்திற்கும்  
நீர் உன்னதமான தேவன்; எல்லா தெய்வங்களிலும் நீரே மிகவும் உயர்ந்தவர்.   
10 யெகோவாவில் அன்புகூருகிறவர்களே, தீமையை வெறுத்துவிடுங்கள்;  
அவர் தம்முடைய பரிசுத்தவான்களின் ஆத்துமாக்களைக் காப்பாற்றி,  
துன்மார்க்கர்களின் கைக்கு அவர்களைத் தப்புவிக்கிறார்.   
11 நீதிமானுக்காக வெளிச்சமும்,  
செம்மையான இருதயமுள்ளவர்களுக்காக மகிழ்ச்சியும் விதைக்கப்பட்டிருக்கிறது.   
12 நீதிமான்களே, யெகோவாவுக்குள் மகிழ்ந்து,  
அவருடைய பரிசுத்தத்தின் நினைவுகூருதலைக் கொண்டாடுங்கள்.