சங்கீதம் 98
பாடல். 
 
1 யெகோவாவுக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்;  
அவர் அதிசயங்களைச் செய்திருக்கிறார்;  
அவருடைய வலது கரமும்,  
அவருடைய பரிசுத்த கரமும், வெற்றியை உண்டாக்கினது.   
2 யெகோவா தமது இரட்சிப்பை வெளிப்படுத்தி,  
தமது நீதியை தேசங்களுடைய கண்களுக்கு முன்பாக விளங்கச்செய்தார்.   
3 அவர் இஸ்ரவேல் குடும்பத்துக்காகத் தமது கிருபையையும் உண்மையையும் நினைவுகூர்ந்தார்;  
பூமியின் எல்லைகளெல்லாம் நமது தேவனுடைய வெற்றியைக் கண்டது.   
4 பூமியில் உள்ளவர்களே, நீங்களெல்லோரும்  
யெகோவாவை நோக்கி ஆனந்தமாக ஆர்ப்பரியுங்கள்; முழக்கமிட்டுக் கெம்பீரமாகப் பாடுங்கள்.   
5 சுரமண்டலத்தால் யெகோவாவைப் புகழ்ந்துபாடுங்கள்,  
சுரமண்டலத்தாலும் பாடலின் சத்தத்தாலும் அவரைப் புகழ்ந்துபாடுங்கள்.   
6 யெகோவாவாகிய ராஜாவின் சமுகத்தில் பூரிகைகளாலும்  
எக்காள சத்தத்தாலும் ஆனந்தமாக ஆர்ப்பரியுங்கள்.   
7 கடலும் அதின் நிறைவும், பூமியும் அதில் உள்ளவர்களும் முழங்குவதாக.   
8 யெகோவாவுக்கு முன்பாக ஆறுகள் கைதட்டி,  
மலைகள் ஒன்றாக கெம்பீரித்துப் பாடட்டும்.   
9 அவர் பூமியை நியாயந்தீர்க்க வருகிறார்;  
உலகத்தை நீதியோடும்  
மக்களை நிதானத்தோடும் நியாயந்தீர்ப்பார்.