அத்தியாயம் 4
மணவாளன்  
1 நீ அழகு மிகுந்தவள், என் பிரியமே! நீ அழகு மிகுந்தவள்;  
உன் முக்காட்டின் நடுவே உன் கண்கள் புறாக்கண்களைப்போல் இருக்கிறது;  
உன் கூந்தல் கீலேயாத் மலையில் இலைகளை மேயும் வெள்ளாட்டு மந்தையைப்போல் இருக்கிறது.   
2 உன்னுடைய பற்கள்,  
ரோமம் கத்தரிக்கப்பட்டபின் குளிப்பாட்டப்பட்டுக் கரையேறுகிறவைகளும்,  
ஒன்றாகிலும் மலடாக இல்லாமல் அனைத்தும் இரட்டைக்குட்டி ஈன்றவைகளுமான  
ஆட்டுமந்தையைப்போல் இருக்கிறது.   
3 உன் உதடுகள் சிவப்பு நூலுக்குச் சமானமும்,  
உன் வாய் இன்பமுமாக இருக்கிறது;  
உன் முக்காட்டின் நடுவே உன் கன்னங்கள் வெடித்த மாதுளம்பழம்போல் இருக்கிறது.   
4 உன்னுடைய கழுத்து,  
பராக்கிரமசாலிகளின் ஆயிரம் கேடகங்கள் தூக்கியிருக்கிற ஆயுதசாலையாக்கப்பட்ட  
தாவீதின் கோபுரம்போல் இருக்கிறது.   
5 உன் இரண்டு மார்பகங்களும்  
லீலிமலர்களுக்கு இடையில் மேயும்  
வெளிமானின் இரட்டைக்குட்டிகளுக்குச் சமானம்.   
6 பகல் குளிர்ச்சியாகி நிழல் சாய்ந்துபோகும்வரைக்கும்,  
நான் வெள்ளைப்போளமலைக்கும் சாம்பிராணிமலைக்கும் போயிருப்பேன்.   
7 என் பிரியமே! நீ பூரண அழகுமிகுந்தவள்;  
உன்னில் குறையொன்றும் இல்லை.   
8 லீபனோனிலிருந்து என்னோடே வா,  
என் மணவாளியே! லீபனோனிலிருந்து என்னோடே வா.  
அமனாவின் உச்சியிலிருந்தும்,  
சேனீர் எர்மோனின் உச்சியிலிருந்தும்,  
சிங்கங்களின் குகைகளிலிருந்தும்,  
சிறுத்தைகளின் மலைகளிலிருந்தும் கீழே இறங்கி வா.   
9 என் இருதயத்தைக் கவர்ந்து கொண்டாய்;  
என் சகோதரியே! என் மணவாளியே!  
உன் கண்களில் ஒன்றிலும்  
உன் கழுத்திலுள்ள ஒரு நகையிலும்  
என் இருதயத்தைக் கவர்ந்துகொண்டாய்.   
10 உன் நேசம் எவ்வளவு இன்பமாக இருக்கிறது;  
என் சகோதரியே! என் மணவாளியே!  
திராட்சைரசத்தைவிட  
உன் நேசம் எவ்வளவு இனிமையாக இருக்கிறது!  
சகல கந்தவர்க்கங்களைவிட  
உன் நறுமண தைலங்கள் எவ்வளவு வாசனையாயிருக்கிறது!   
11 என் மணவாளியே! உன் உதடுகளிலிருந்து தேன் ஒழுகுகிறது,  
உன் நாவின்கீழ் தேனும் பாலும் இருக்கிறது,  
உன் உடைகளின் வாசனை லீபனோனின் வாசனைக்கு ஒப்பாக இருக்கிறது.   
12 என் சகோதரியே! என் மணவாளியே!  
நீ அடைக்கப்பட்ட தோட்டமும்,  
மறைவு கட்டப்பட்ட நீரூற்றும்,  
பாதுகாக்கப்பட்ட கிணறுமாக இருக்கிறாய்.   
13 உன் தோட்டம் மாதுளம்செடிகளும்,  
அருமையான பழமரங்களும்,  
மருதாணிச் செடிகளும், நளதச்செடிகளும்,   
14 நளதமும், குங்குமமும், வசம்பும், லவங்கமும்,  
சகலவித தூபவர்க்க மரங்களும், வெள்ளைப்போளச்செடிகளும்,  
சந்தன மரங்களும், சகலவித கந்தவர்க்கச் செடிகளுமுள்ள சிங்கார வனமாக இருக்கிறது.   
15 தோட்டங்களுக்கு நீரூற்றும், ஜீவதண்ணீரின் கிணறும்,  
லீபனோனிலிருந்து ஓடிவரும் வாய்க்கால்களும் உண்டாயிருக்கிறது.  
மணவாளி   
16 வாடைக்காற்றே! எழும்பு;  
தென்றலே! வா; கந்தப்பிசின்கள் வடிய என் தோட்டத்தில் வீசு;  
என் நேசர் தம்முடைய தோட்டத்திற்கு வந்து,  
தமது அருமையான பழங்களைச் சாப்பிடுவாராக.