அத்தியாயம் 5
மணவாளன்  
1 என் சகோதரியே! என் மணவாளியே!  
நான் என் தோட்டத்திற்கு வந்தேன்,  
என் வெள்ளைப்போளத்தையும் என் கந்தவர்க்கங்களையும் சேர்த்தேன்;  
என் தேன்கூட்டை என் தேனோடு சாப்பிட்டேன்;  
என் திராட்சைரசத்தை என் பாலோடும் குடித்தேன்.  
சிநேகிதர்களே! சாப்பிடுங்கள்; பிரியமானவர்களே!  
குடியுங்கள், திருப்தியாகக் குடியுங்கள்.  
சூலமித்தியாளின் இரவு 
 
மணவாளி   
2 நான் உறங்கினேன், என் இதயமோ விழித்திருந்தது;  
கதவைத் தட்டுகிற என் நேசரின் சத்தத்தைக் கேட்டேன்:  
என் சகோதரியே! என் பிரியமே!  
என் புறாவே! என் உத்தமியே!  
கதவைத் திற;  
என் தலை பனியினாலும், என் தலைமுடி இரவில் பெய்யும் தூறலினாலும் நனைந்திருக்கிறது என்றார்.   
3 என் உடையைக் கழற்றிப்போட்டேன்;  
நான் எப்படி அதைத் திரும்பவும் அணிவேன்,  
என் பாதங்களைக் கழுவினேன்,  
நான் எப்படி அவைகளைத் திரும்பவும் அழுக்காக்குவேன் என்றேன்.   
4 என் நேசர் தமது கையைக் கதவுத் துவாரத்தின் வழியாக நீட்டினார்,  
அப்பொழுது என் உள்ளம் அவர்நிமித்தம் பொங்கினது.   
5 என் நேசருக்குக் கதவைத் திறக்க நான் எழுந்தேன்;  
பூட்டின கைப்பிடிகள்மேல் என் கைகளிலிருந்து வெள்ளைப்போளமும்,  
என் விரல்களிலிருந்து வாசனையுள்ள வெள்ளைப்போளமும் வடிந்தது.   
6 என் நேசருக்குக் கதவைத் திறந்தேன்;  
என் நேசரோ இல்லை, போய்விட்டார்;  
அவர் சொன்ன வார்த்தையால் என் ஆத்துமா சோர்ந்துபோயிற்று.  
அவரைத் தேடினேன், அவரைக் காணவில்லை;  
அவரைக் கூப்பிட்டேன், அவர் எனக்கு பதில் கொடுக்கவில்லை.   
7 நகரத்தில் உலாவுகிற காவலாளர்கள் என்னைக் கண்டு,  
என்னை அடித்து, என்னைக் காயப்படுத்தினார்கள்;  
மதிலின் காவற்காரர்கள் என்மேலிருந்த என் போர்வையை எடுத்துக்கொண்டார்கள்.   
8 எருசலேமின் இளம்பெண்களே! என் நேசரைக் கண்டீர்களானால்,  
நான் நேசத்தால் சோகமடைந்திருக்கிறேன் என்று அவருக்குச் சொல்லும்படி உங்களுக்கு ஆணையிடுகிறேன்.  
மணவாளியின் தோழிகள்   
9 பெண்களுக்குள் அழகுமிகுந்தவளே!  
மற்ற நேசரைவிட உன் நேசர் எதினால் விசேஷித்தவர்?  
நீ இப்படி எங்களை ஆணையிட,  
மற்ற நேசரைவிட உன் நேசர் எதினால் விசேஷித்தவர்?  
மணவாளி   
10 என் நேசர் வெண்மையும் சிவப்புமானவர்;  
பிரகாசமானவர், வல்லமையுள்ளவர்,  
யாரும் அவருக்கு ஒப்பானவர் இல்லை.   
11 அவருடைய தலை தங்கமயமாக இருக்கிறது;  
அவருடைய தலைமுடி சுருள் சுருளாகவும்,  
காகத்தைப்போல் கருமையாகவும் இருக்கிறது.   
12 அவருடைய கண்கள் தண்ணீர் நிறைந்த நதிகளின் ஓரமாகத் தங்கும் புறாக்கண்களுக்கு ஒப்பானவைகளும்,  
பாலில் கழுவப்பட்டவைகளும், நேர்த்தியாகப் பதிக்கப்பட்டவைகளுமாக இருக்கிறது.   
13 அவருடைய கன்னங்கள் கந்தவர்க்கப் பாத்திகளைப்போலவும்,  
வாசனையுள்ள மலர்களைப்போலவும் இருக்கிறது;  
அவருடைய உதடுகள் லீலிமலர்களைப் போன்றது,  
வாசனையுள்ள வெள்ளைப்போளம் அதிலிருந்து வடிகிறது.   
14 அவருடைய கைகள் படிகப்பச்சை பதித்த பொன்வளையல்களைப்போல் இருக்கிறது;  
அவர் அங்கம் இந்திரநீல இரத்தினங்களால் மூடப்பட்ட பிரகாசமான யானைத் தந்தத்தைப்போலிருக்கிறது.   
15 அவருடைய கால்கள் பசும்பொன் ஆதாரங்களின்மேல் நிற்கிற வெள்ளைக்கல் தூண்களைப்போலிருக்கிறது;  
அவருடைய தோற்றம் லீபனோனைப்போலவும்  
கேதுருக்களைப்போலவும் சிறப்பாக இருக்கிறது.   
16 அவருடைய வாய் மிகவும் இனிப்பாக இருக்கிறது;  
அவர் முற்றிலும் அழகுள்ளவர்.  
இவரே என் நேசர்; எருசலேமின் இளம்பெண்களே! இவரே என் சிநேகிதர்.