2
தெசலோனிக்கேயாவில் பவுலின் ஊழியம்
பிரியமானவர்களே, நாங்கள் உங்களிடம் வந்த நோக்கம் வீணாயிருக்கவில்லை என்பது உங்களுக்குத் தெரியும். நாங்கள் உங்களிடம் வரும் முன்பதாக, பிலிப்பி பட்டணத்திலே துன்புறுத்தப்பட்டோம். அவமானப்படுத்தப்பட்டோம் என்பதும் உங்களுக்கும் தெரியும். பலத்த எதிர்ப்பு இருந்தபோதுங்கூட, நமது இறைவனுடைய உதவியினாலே அவருடைய நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்க நாங்கள் துணிவு பெற்றோம். ஏனெனில், எங்களுடைய போதனை பிழைகளிலிருந்தோ, கெட்ட நோக்கங்களிலிருந்தோ உருவாகவில்லை அல்லது உங்களை ஏமாற்றுவதற்காகவோ செய்யப்படவில்லை. மாறாக, நற்செய்தி ஒப்படைக்கப்படுவதற்கு, இறைவனால் அங்கீகரிக்கப்பட்ட மனிதர்களாக நாங்கள் பேசுகிறோம். நாங்கள் மனிதரை அல்ல, எங்கள் உள்ளங்களை சோதித்து அறிகிற இறைவனைப் பிரியப்படுத்தவே முயலுகிறோம். நாங்கள் ஒருபோதும் உங்களைப் போலியாக புகழ்ந்து பேசவோ, மறைக்கப்பட்ட முகமூடி போட்டு பேராசையுடன் நடந்துகொள்ளவோ இல்லை. இதற்கு இறைவனே எங்களுக்கு சாட்சி. உங்களிடமிருந்தோ, வேறு எவரிடமிருந்தோ, நாங்கள் மனிதனால் வரும் புகழ்ச்சியைத் தேடவுமில்லை.
நாங்கள் கிறிஸ்துவின் அப்போஸ்தலர் என்ற முறையில், உங்களுக்கு ஒரு சுமையாய் இருந்திருக்கலாம். ஆனால், நாங்கள் ஒரு தாய் தன்னுடைய குழந்தையைப் பராமரிப்பதுபோல, உங்களுடனே கனிவாய் நடந்து கொண்டோம். நாங்கள் உங்களில் அதிக அன்பாய் இருந்ததினால், உங்களுடன் இறைவனுடைய நற்செய்தியைப் பகிர்ந்துகொள்வதில் மட்டுமல்ல, எங்களுடைய வாழ்க்கையையும் உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி கொண்டோம்; ஏனெனில், நீங்கள் எங்களின் அன்புக்குரியவர்களானீர்கள். பிரியமானவர்களே, நாங்கள் பட்ட பிரயாசமும் கஷ்டமும் உங்களுக்கு நிச்சயமாக நினைவிருக்குமே; இறைவனுடைய நற்செய்தியை நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்தபோது யாருக்கும் நாங்கள் சுமையாய் இராதபடிக்கு, இரவும் பகலும் நாங்கள் வேலைசெய்தோம். 10 நற்செய்தியை விசுவாசித்தவர்களாகிய உங்களிடையே, நாங்கள் எவ்வளவு பரிசுத்தமாயும், நீதியாயும், குற்றம் காணப்படாமலும் நடந்தோம் என்பதற்கு நீங்களும் சாட்சி, இறைவனும் சாட்சியாய் இருக்கிறார். 11 ஒரு தந்தை தனது பிள்ளைகளை நடத்துவதுபோலவே, நாங்கள் உங்கள் ஒவ்வொருவரையும் நடத்தினோம் என்பது உங்களுக்குத் தெரியும். 12 நாங்கள் உங்களை உற்சாகப்படுத்தி, ஆறுதல்படுத்தினோம். தம்முடைய அரசுக்குள்ளும் மகிமைக்குள்ளும் உங்களை அழைக்கிற இறைவனுக்கேற்ற வாழ்க்கையை வாழுங்கள் என்று உங்களை ஊக்குவித்தோம்.
13 நாங்கள் தொடர்ந்து இறைவனுக்கு நன்றி செலுத்துகிறோம். ஏனெனில், நீங்கள் எங்களிடமிருந்து கேட்ட இறைவனின் வார்த்தையை ஏற்றுக்கொண்டபோது, அதை மனிதருடைய வார்த்தையாய் ஏற்றுக்கொள்ளாமல், உண்மையாய் உள்ளபடியே அதை இறைவனுடைய வார்த்தையாக ஏற்றுக்கொண்டீர்கள். விசுவாசிக்கிறவர்களாகிய உங்களுக்குள்ளே அந்த வார்த்தை செயலாற்றுகிறது. 14 பிரியமானவர்களே, கிறிஸ்து இயேசுவுக்குள் இருக்கிற யூதேயாவிலுள்ள இறைவனுடைய திருச்சபைகளை நீங்கள் பின்பற்றினீர்கள்: அந்தத் திருச்சபைகள் யூதர்களால் துன்பப்பட்டதுபோலவே, நீங்களும் உங்கள் நாட்டு மக்களால் துன்பப்பட்டீர்கள். 15 இந்த யூதரே கர்த்தராகிய இயேசுவையும் இறைவாக்கினரையும் கொன்றார்கள். எங்களையும் வெளியே துரத்தினார்கள். அவர்கள் இறைவனின் விருப்பத்திற்கு விரோதமாய் நடந்து, அநேகருக்கு பகைவர்களாய் இருக்கிறார்கள். 16 ஏனெனில், யூதரல்லாதவர்கள் இரட்சிக்கப்படும்படி, நாங்கள் அவர்களுக்கு நற்செய்தி அறிவிப்பதைத் தடைபண்ணுகிறார்கள். இவ்விதமாக, அவர்கள் எப்பொழுதும் தங்கள் பாவத்தின் அளவை நிரப்பிக் கொண்டிருக்கிறார்கள். இறுதியாக, இறைவனுடைய கோபம் அவர்கள்மேல் வரப்போகிறது.
தெசலோனிக்கேயரைக் காண பவுலின் வாஞ்சை
17 ஆனாலும் பிரியமானவர்களே, நாங்கள் சிறிதுகாலம் உங்களைவிட்டுப் பிரிக்கப்பட்டிருந்தோம். எங்கள் உடல்தான் உங்களைவிட்டுப் பிரிந்திருந்ததே தவிர, எங்கள் உள்ளம் உங்களைவிட்டுப் பிரிந்திருக்கவில்லை. பிரிந்திருந்தக் காலத்தில் உங்களை நேரில் காண மிகுந்த ஆவலுடையவர்களாய் இருந்தபடியால், நாங்கள் உங்களைப் பார்ப்பதற்கு எல்லாவித முயற்சிகளையும் எடுத்தோம். 18 உண்மையிலேயே உங்களிடம் வருவதற்கு நாங்கள் விரும்பினோம். அதிலும் பவுலாகிய நான் உங்களிடம் வருவதற்கு மீண்டும், மீண்டும் முயற்சிசெய்தேன். ஆனாலும், சாத்தான் எங்களைத் தடை செய்தான். 19 நம்முடைய கர்த்தராகிய இயேசு வரும்போது, எங்களுடைய எதிர்பார்ப்பாயும் மகிழ்ச்சியாயும், எங்களுக்கு மேன்மையைக் கொடுக்கும் கிரீடமாயும் அவருக்கு முன்னிலையில் இருக்கப்போவது யார்? அது நீங்கள் அல்லவா? 20 உண்மையாக நீங்களே எங்கள் மகிமையும் மகிழ்ச்சியுமாய் இருக்கிறீர்கள்.