3
ஆகவே இந்தப் பிரிவை எங்களால் தாங்க முடியாதிருந்தபோது, நானும் சீலாவும் தனியே அத்தேனே பட்டணத்தில் இருந்துகொண்டு, தீமோத்தேயுவை உங்களிடம் அனுப்புவது சிறந்தது எனத் தீர்மானித்தோம். அவன் கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிப்பதில், இறைவனுக்காக வேலைசெய்கிற எங்கள் உடன் ஊழியனும் சகோதரனுமாய் இருக்கிறான். உங்களை பெலப்படுத்தி, உங்கள் விசுவாசத்தில் உங்களை ஊக்குவிக்கவே நாங்கள் அவனை அனுப்பினோம். உங்களுக்கு ஏற்பட்டிருக்கிற துன்பங்களால், உங்களில் ஒருவனும் நிலைகுலைந்து போகக்கூடாது என்பதற்காகவே அவனை அனுப்பிவைத்தோம். இப்படியான துன்பங்களுக்காகவே நாங்கள் நியமிக்கப்பட்டிருக்கிறோம் என்பதை நீங்கள் நன்றாய் அறிந்திருக்கிறீர்கள். நாங்கள் உங்களுடன் இருந்தபோது, நாம் துன்புறுத்தப்படுவோம் என்பதை, உங்களுக்குத் திரும்பத் திரும்பச் சொன்னோம். அது அவ்விதமே நிகழ்ந்ததும் உங்களுக்குத் தெரியும். ஆகையால் உங்களைக்குறித்து அறியாமல், என்னால் பொறுத்துக் கொண்டிருக்க முடியாததினாலே உங்கள் விசுவாசத்தைப்பற்றி அறிந்துகொள்ளும்படி, தீமோத்தேயுவை அனுப்பினேன். சோதனைக்காரன் ஏதாவது ஒருவிதத்தில் உங்களைச் சோதனைக்கு உட்படுத்தியிருக்கலாம் என்றும், அதனால் எங்களுடைய பிரயாசம் பயனற்றுப் போய்விட்டதோ என்றும் நான் பயந்தேன்.
தீமோத்தேயுவின் அறிக்கை
ஆனால் தீமோத்தேயு இப்பொழுதுதான் உங்களிடமிருந்து திரும்பி வந்திருக்கிறான். அவன் உங்களுடைய விசுவாசத்தைக்குறித்தும், அன்பைக்குறித்தும் நல்ல செய்தியே கொண்டுவந்திருக்கிறான். எங்களைக்குறித்த ஞாபகங்கள் உங்களுக்கு இனியவைகளாக இருக்கின்றன என்றும், நாங்கள் உங்களைக் காண ஆவலாயிருந்ததுபோல, நீங்களும் எங்களைக் காண ஆவலாய் இருக்கிறீர்கள் என்றும் அவன் எங்களுக்குச் சொன்னான். ஆகையால் பிரியமானவர்களே, எங்களுடைய கஷ்டம், துன்புறுத்துதல் மத்தியிலும், உங்களுடைய விசுவாசத்தைக் கேட்டு, நாங்கள் உற்சாகமடைந்தோம். நீங்கள் கர்த்தரில் உறுதியாய் நிற்பதை அறிந்த பின்புதான், எங்களுக்கு உயிர்மூச்சே வந்தது. உங்கள் நிமித்தம் நமது இறைவனுடைய முன்னிலையில் எங்களுக்கு உண்டாயிருக்கிற எல்லா மகிழ்ச்சிக்காகவும் நாங்கள் இறைவனுக்கு எவ்வளவு நன்றி செலுத்தினாலும் போதாது. 10 நாங்கள் மீண்டும் உங்களைச் சந்தித்து உங்கள் விசுவாசத்திலுள்ள குறைபாடுகளைச் சீர்ப்படுத்துவதற்காக, இரவும் பகலும் வெகு ஊக்கமாய் மன்றாடுகிறோம்.
11 இப்பொழுது நம்முடைய பிதாவாகிய இறைவன் தாமே, கர்த்தராகிய இயேசுவுடன் நாங்கள் உங்களிடத்தில் வருவதற்கான வழியை எங்களுக்கு ஏற்படுத்திக் கொடுப்பாராக. 12 எங்கள் அன்பு உங்களில் வளர்ந்து பெருகுவதுபோலவே, நீங்கள் ஒருவரில் ஒருவர் கொண்டுள்ள அன்பு, மற்றெல்லோரிடத்திலும் நிறைந்து பெருகும்படி கர்த்தர் உங்களுக்கு உதவிசெய்வாராக. 13 நம்முடைய கர்த்தராகிய இயேசு தம்முடைய எல்லாப் பரிசுத்தவான்களோடும் வரும்போது, நம்முடைய பிதாவாகிய இறைவனுக்கு முன்பாக நீங்கள் குற்றமற்றவர்களாகவும், பரிசுத்தர்களாகவும் இருக்கும்படி கர்த்தர் உங்கள் இருதயங்களைப் பெலப்படுத்துவாராக.