4
இறைவனைப் பிரியப்படுத்தும் வாழ்வு
கடைசியாக பிரியமானவர்களே, இறைவனைப் பிரியப்படுத்தும் விதத்தில் நீங்கள் எப்படி வாழவேண்டும் என்று நாங்கள் உங்களுக்கு அறிவுரைகள் கொடுத்திருந்தோம். உண்மையாய் நீங்கள் அப்படித்தான் நடக்கிறீர்கள். இப்பொழுது நாங்கள் உங்களிடம் கர்த்தராகிய இயேசுவில் கேட்கிறதும் வேண்டிக்கொள்கிறதும் என்னவென்றால், இன்னும் அதிகதிகமாய் தேறும்படிக்கு அவ்வாறே நடவுங்கள். கர்த்தராகிய இயேசுவின் அதிகாரத்தின்படியே, நாங்கள் உங்களுக்குக் கொடுத்த அறிவுரைகள் உங்களுக்குத் தெரியும்.
நீங்கள் பரிசுத்தமாய் இருக்கவேண்டும் என்பதே இறைவனின் சித்தம். நீங்கள் முறைகேடான பாலுறவுகளைத் தவிர்த்துக்கொண்டு, ஒவ்வொருவரும் தங்கள் உடலை பரிசுத்தமாயும் மதிப்புக்குரியதாயும் கட்டுப்பாட்டுடன் வைத்திருக்கவேண்டும். இறைவனை அறியாத, யூதரல்லாதவர்களைப்போல் காமவேட்கைகொள்ளாமல் இருக்கவேண்டும்; இந்தக் காரியத்தில், ஒருவன் தன் சகோதரனுக்கு பிழைசெய்யவோ, அவனை ஏமாற்றி பயன்பெறவோ கூடாது. நாங்கள் ஏற்கெனவே உங்களுக்கு சொல்லி எச்சரித்ததுபோல, இப்படிப்பட்ட பாவங்களைச் செய்யும் மனிதர்களைக் கர்த்தர் தண்டிப்பார். ஏனெனில், இறைவன் நம்மை அசுத்தமாய் நடப்பதற்கு அழைக்கவில்லை. பரிசுத்தமான வாழ்க்கை வாழ்வதற்கே அழைத்திருக்கிறார். ஆகையால் இந்த அறிவுரைகளைப் புறக்கணிக்கிறவன் மனிதனை அல்ல, உங்களுக்கு தம்முடைய பரிசுத்த ஆவியானவரைக் கொடுக்கிற இறைவனையே புறக்கணிக்கிறான்.
சகோதர அன்பைக்குறித்து, நாங்கள் உங்களுக்கு எழுதவேண்டியதில்லை. ஏனெனில், நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கும்படி, இறைவனே உங்களுக்குக் கற்றுக்கொடுத்திருக்கிறாரே. 10 உண்மையிலேயே மக்கெதோனியா எங்கும் இருக்கிற எல்லா சகோதரர்மேலும், நீங்கள் அன்பு செலுத்துகிறீர்கள். ஆனால் பிரியமானவர்களே, நீங்கள் இன்னும் அதிகமாய் அப்படிச் செய்யவேண்டும் என்றே உங்களை வேண்டிக்கொள்கிறோம். 11 நாங்கள் உங்களுக்கு சொல்லியது போலவே, ஒரு அமைதியான வாழ்க்கையை வாழ்வதும், உங்கள் சொந்த அலுவல்களையே பார்த்துக்கொள்வதும், உங்கள் கைகளினால் வேலைசெய்வதே உங்கள் முக்கியக் குறிக்கோளாய் இருக்கட்டும். 12 அப்பொழுது உங்களுடைய அன்றாட வாழ்க்கையில் புறம்பே இருக்கிறவர்களின் நன்மதிப்பைப் பெற்றுக்கொள்வீர்கள். அத்துடன் நீங்கள் மற்றவர்களை சார்ந்து வாழவேண்டியதில்லை.
கர்த்தரின் வருகை
13 பிரியமானவர்களே, மரண நித்திரை அடைகிறவர்களைக்குறித்து, நீங்கள் அறியாமல் இருப்பதை, நாங்கள் விரும்பவில்லை. எதிர்பார்ப்பு எதுவும் இல்லாத மற்றவர்களைப்போல், நீங்கள் துக்கமடைவதையும் நாங்கள் விரும்பவில்லை. 14 இயேசு இறந்து உயிருடன் எழுந்தார் என்று நாம் விசுவாசிக்கிறோமே. அப்படியே, இறைவனும் கிறிஸ்துவில் மரண நித்திரையடைந்தோரை இயேசுவுடனேகூட உயிருடன் கொண்டுவருவார் என்றும் விசுவாசிக்கிறோம். 15 கர்த்தருடைய சொந்த வார்த்தையின்படியே நாங்கள் உங்களுக்குச் சொல்கிறதாவது, கர்த்தருடைய வருகைவரைக்கும் இன்னும் உயிருடனிருக்கும் நாமும், நிச்சயமாகவே மரண நித்திரை அடைந்தவர்களுக்கு முந்தி எடுத்துக்கொள்ளப்படமாட்டோம். 16 ஏனெனில் கர்த்தர்தாமே பரலோகத்திலிருந்து இறங்கி வருவார். அவர் பிரதான தூதனுடைய குரல் ஒலிக்க, சத்தமான கட்டளை முழங்க, இறைவனுடைய எக்காள அழைப்புடன் வருவார். அப்பொழுது கிறிஸ்துவில் இறந்தவர்கள் முதலாவதாக எழுந்திருப்பார்கள். 17 அதற்குப் பின்பு, இன்னும் உயிருடனிருக்கும் நாமும், ஆகாயத்திலே கர்த்தரைச் சந்திக்கும்படி, அவர்களுடனேகூட மேகங்களுக்குள் எடுத்துக்கொள்ளப்படுவோம். இவ்விதமாக, நாம் என்றென்றைக்கும் கர்த்தருடனேயே இருப்போம். 18 ஆகையால், இந்த வார்த்தைகளினாலே ஒருவரையொருவர் உற்சாகப்படுத்துங்கள்.