18
பில்தாத் பேசுதல்
அப்பொழுது சூகியனான பில்தாத் மறுமொழியாக சொன்னது:
“நீ எப்பொழுது இந்தப் பேச்சுக்களை நிறுத்துவாய்?
நிதானமாயிரு, அப்பொழுது நாங்கள் பேசுவோம்.
உன் பார்வையில் நாங்கள் மிருகங்களைப்போல கருதப்பட்டு
மதியீனர்களாய் எண்ணப்படுவது ஏன்?
உன் கோபத்தில் உன்னையே காயப்படுத்துகிறவனே,
உனக்காக பூமி கைவிடப்படுமோ?
பாறை தன் இடத்தைவிட்டு நகருமோ?
 
“கொடியவனின் விளக்கு அணைக்கப்படுகிறது;
அவனுடைய நெருப்புச் சுவாலையும் எரியாமல் போகிறது.
அவனுடைய கூடார வெளிச்சம் இருளாகிறது;
அவனுடைய விளக்கும் அணைந்து போகிறது.
அவனுடைய நடையின் கம்பீரம் பலவீனமடைகிறது;
அவனுடைய சுயதிட்டங்கள் அவனைக் கீழே வீழ்த்துகின்றன.
அவன் தன் கால்களினால் வலையில் பிடிபட்டு,
அந்த வலையின் சிக்கலிலே நடக்கிறான்.
பொறி அவன் குதிகாலைப் பிடிக்கிறது;
கண்ணி* அவனை இறுக்கிப் பிடிக்கிறது.
10 சுருக்கு அவனுக்காகத் தரையிலும்,
பொறி அவன் பாதையிலும் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது.
11 எப்பக்கத்திலும் பயங்கரங்கள் அவனைத் திடுக்கிடப்பண்ணி,
அவன் கால்களை அலையவைக்கும்.
12 பேரழிவு அவனுக்காக காத்திருக்கிறது;
பெருங்கேடு அவன் விழும்போது ஆயத்தமாக இருக்கிறது.
13 வியாதி அவன் தோலைத் தின்கிறது;
சாவின் முதற்பேறு அவன் அங்கங்களை விழுங்குகிறது.
14 அவன் தன் கூடாரத்தின் பாதுகாப்பிலிருந்து பிடுங்கப்பட்டு,
பயங்கரங்களின் அரசனிடம் கொண்டுபோகப்படுகிறான்.
15 அவனுடைய கூடாரத்தில் நெருப்பு குடியிருக்கும்;
அவனுடைய உறைவிடங்களில் கந்தகம் வாரி இறைக்கப்படும்.
16 கீழே அவனுடைய வேர்கள் காய்ந்து போகின்றன;
மேலே அவனுடைய கிளைகள் வாடிப்போகின்றன.
17 அவனைப் பற்றிய நினைவு பூமியிலிருந்து அற்றுப்போகிறது;
மண்ணில் அவனுக்குப் பெயர் இல்லாதிருக்கிறது.
18 அவன் வெளிச்சத்திலிருந்து இருளுக்குள் தள்ளப்படுகிறான்;
உலகத்திலிருந்தும் துரத்தப்படுகிறான்.
19 அவனுடைய மக்கள் மத்தியில் அவனுக்கு சந்ததிகளே இல்லை,
அவன் வாழ்ந்த இடத்தில் மீதியாயிருப்பவன் ஒருவனும் இல்லை.
20 அவன் முடிவைக்கண்டு மேற்கிலுள்ளோர் நடுங்கினர்;
அவன் காலத்திற்கு பின்பு வாழ்ந்த கிழக்கிலுள்ளோர் திகிலுற்றனர்.
21 தீயவனின் குடியிருப்பு இத்தகையதே;
இறைவனை அறியாதவனின் இருப்பிடமும் இத்தகையதே.”
* 18:9 18:9 கண்ணி அல்லது கொள்ளையர்கள் அவனை மேற்கொள்வார்கள்.