19
யோபு பேசுதல்
அதற்கு யோபு மறுமொழியாக சொன்னது:
“எவ்வளவு காலத்திற்கு என்னை வேதனைப்படுத்தி,
வார்த்தைகளினால் என்னை நொறுக்குவீர்கள்?
இப்பொழுது பத்துமுறை நீங்கள் என்னை நிந்தித்திருக்கிறீர்கள்;
வெட்கமின்றி என்னைத் தாக்கிப் பேசுகிறீர்கள்.
நான் வழி தவறியது உண்மையானால்,
என் தவறு என்னை மட்டுமே சாரும்.
நீங்கள் உண்மையிலேயே உங்களை எனக்கு மேலாக உயர்த்தி,
நான் சிறுமையாக்கப்பட்டதை எனக்கு விரோதமாக உபயோகித்தாலும்,
இறைவனே எனக்குத் தவறிழைத்து,
என்னைச் சுற்றி வலை வீசியிருக்கிறார் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.
 
“இதோ, ‘கொடுமை!’ என நான் அழுதபோதிலும் எனக்குப் பதில் கிடைக்கவில்லை;
நான் கூக்குரலிட்டாலும் நீதி கிடைக்கவில்லை.
நான் கடந்துசெல்லாதபடி அவர் என் வழியைத் தடைசெய்து,
என் பாதைகளை இருளாக்கினார்.
அவர் என் மேன்மையை என்னைவிட்டு அகற்றி,
மகுடத்தை என் தலையிலிருந்து எடுத்துப்போட்டார்.
10 அவர் என்னை எல்லாப் பக்கத்திலும் உடைத்து, அற்றுப்போகச் செய்கிறார்;
அவர் என் நம்பிக்கையை ஒரு மரத்தைப்போல பிடுங்குகிறார்.
11 அவருடைய கோபம் எனக்கெதிராக எரிகிறது;
என்னைத் தம் பகைவரில் ஒருவனாக எண்ணுகிறார்.
12 அவருடைய படைகள் எனக்கெதிராக அணிவகுத்து,
அவர்கள் எனக்கு விரோதமாய் வழியை உண்டாக்கி,
என் கூடாரத்தைச் சுற்றி முற்றுகையிடுகிறார்கள்.
 
13 “அவர் என் சகோதரரை என்னிடமிருந்து தூரமாக்கினார்;
எனக்கு அறிமுகமானவர்களும் முழுவதுமாக என்னைவிட்டுப் பிரிந்துவிட்டார்கள்.
14 என் உறவினர்கள் என்னைவிட்டுப் போய்விட்டார்கள்;
என் சிநேகிதர்கள் என்னை மறந்துவிட்டார்கள்.
15 என் விருந்தினரும், பணிப்பெண்களும் என்னை அந்நியராக எண்ணுகிறார்கள்;
அவர்கள் என்னை அயலாராகப் பார்க்கிறார்கள்.
16 நான் என் வேலைக்காரனைக் கூப்பிட்டு, என் வாயினால் கெஞ்சினாலும்,
அவன் எனக்குப் பதிலளிப்பதில்லை.
17 என் மூச்சு என் மனைவிக்கே அருவருப்பாயிருக்கிறது;
நான் என் சொந்தக் குடும்பத்தினருக்கும்*, வெறுப்பானேன்.
18 சிறுவர்களும் என்னை இகழ்கிறார்கள்;
நான் பேச எழும்போது அவர்கள் ஏளனம் செய்கிறார்கள்.
19 என் நெருங்கிய சிநேகிதர்கள் எல்லாரும் என்னை வெறுக்கிறார்கள்;
நான் நேசித்தவர்களும் எனக்கெதிரானார்கள்.
20 நான் வெறும் எலும்பும் தோலுமாயிருக்கிறேன்;
நான் பற்களின் ஈறோடு தப்பியிருக்கிறேன்.
 
21 “என் சிநேகிதர்களே, இரங்குங்கள், என்மீது இரக்கம் கொள்ளுங்கள்;
இறைவனின் கரமே என்னை அடித்திருக்கிறது.
22 இறைவனைப் போலவே நீங்களும் ஏன் என்னைத் தொடர்ந்து துன்புறுத்துகிறீர்கள்?
என்னை வேதனைப்படுத்தியது போதாதோ?
 
23 “ஆ, எனது வார்த்தைகள் எழுதப்பட்டு,
ஒரு புத்தகச்சுருளிலே பதிவுசெய்யப்பட்டால்,
24 அவை இரும்பு ஆணியினால் ஈயத்தகட்டில் எழுதப்பட்டால்,
அல்லது என்றும் நிலைக்கும்படி, கற்பாறையில் செதுக்கப்பட்டால் நலமாயிருக்கும்.
25 என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும்,
கடைசி நாளில் அவர் பூமியின்மேல் நிற்பார் என்றும் அறிவேன்.
26 என் தோல் அழிந்துபோன பின்னும்,
நான் என் உடலில் இறைவனைக் காண்பேன்.
27 நானே அவரை என் சொந்தக் கண்களால் காண்பேன்;
வேறொருவன் அல்ல, நானே காண்பேன்.
என் உள்ளம் அதற்காக எனக்குள்ளே எவ்வளவாய் ஏங்குகிறது!
 
28 “ ‘இவன் கஷ்டத்திற்கான காரணம் இவனிலே இருக்கிறபடியால்,
நாம் இவனை எப்படி குற்றப்படுத்தலாம்?’ என்று நீங்கள் சொல்வீர்களானால்,
29 நீங்களே வாளுக்குப் பயப்படவேண்டும்;
ஏனெனில், கடுங்கோபம் தண்டனையை வாளினாலேயே கொண்டுவரும்.
அப்பொழுது, நியாயத்தீர்ப்பு உண்டு என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.”
* 19:17 19:17 குடும்பத்தினருக்கும் அல்லது என் பிள்ளைகளுக்கும்.