15
மற்ற காணிக்கைகள்
யெகோவா மோசேயிடம், “நீ இஸ்ரயேலரிடம் பேசிச் சொல்லவேண்டியதாவது: ‘நீங்கள் குடியிருக்கும்படி நான் உங்களுக்குக் கொடுக்கிற நாட்டிற்குள் நீங்கள் போய்ச் சேர்ந்தபின் தகன காணிக்கைகளைக் கொண்டுவருவீர்கள், அது உங்கள் ஆட்டு மந்தையிலிருந்தோ, மாட்டு மந்தையிலிருந்தோ யெகோவாவுக்கு மகிழ்ச்சியூட்டும் நறுமணமாக, நெருப்பினால் செலுத்தப்படும் காணிக்கையாயிருக்கும். அவை யெகோவாவுக்குத் தகன காணிக்கையாகவோ, பலிகளாகவோ, விசேஷ நேர்த்திக்கடனாகவோ அல்லது சுயவிருப்புக் காணிக்கையாகவோ அல்லது பண்டிகைக் காணிக்கையாகவோ இருக்கும். அப்பொழுது, மற்ற காணிக்கைகளைக் கொண்டுவருகிறவன் பத்தில் ஒரு பங்கு அளவு சிறந்த மாவுடன் நான்கில் ஒரு பங்கு ஹின் அளவு எண்ணெய்விட்டுப் பிசைந்து அதையும் யெகோவாவுக்குத் தானிய காணிக்கையாகக் கொண்டுவர வேண்டும். தகன காணிக்கையாக அல்லது பலியாகச் செலுத்தப்படும் ஒவ்வொரு செம்மறியாட்டுக் குட்டியுடனும், நாலில் ஒரு பங்கு ஹின் அளவு திராட்சை இரசத்தைப் பானகாணிக்கையாக ஆயத்தப்படுத்தவேண்டும்.
“ ‘ஒரு செம்மறியாட்டுக் கடாவுடன் பத்தில் இரண்டு பங்கு எப்பா அளவான சிறந்த மாவுடன், மூன்றில் ஒரு பங்கு ஹின் அளவு எண்ணெய்விட்டுப் பிசைந்து, அதையும் தானிய காணிக்கையாக ஆயத்தப்படுத்தவேண்டும். அத்துடன் மூன்றில் ஒரு பங்கு ஹின் அளவு திராட்சை இரசத்தைப் பானகாணிக்கையாக ஆயத்தப்படுத்தவேண்டும். அதை யெகோவாவுக்கு மகிழ்ச்சியூட்டும் நறுமணமாகச் செலுத்துங்கள்.
“ ‘யெகோவாவுக்கு விசேஷ நேர்த்திக்கடனுக்காகவோ அல்லது சமாதான காணிக்கைக்காகவோ நீ ஒரு இளங்காளையைத் தகன காணிக்கையாக அல்லது பலியாக ஆயத்தப்படுத்தும்போது, பத்தில் மூன்று பங்கு எப்பா அளவான சிறந்த மாவை இரண்டில் ஒரு பங்கு ஹின் அளவு எண்ணெயில் பிசைந்து, அதை அக்காளையுடன் தானிய காணிக்கையாகக் கொண்டுவர வேண்டும். 10 அத்துடன் இரண்டில் ஒரு பங்கு ஹின் அளவு திராட்சை இரசத்தைப் பானகாணிக்கையாகவும் கொண்டுவர வேண்டும். அது யெகோவாவுக்கு மகிழ்ச்சியூட்டும் நறுமணமாக, நெருப்பினால் செலுத்தப்படும் ஒரு காணிக்கையாக இருக்கும். 11 ஒவ்வொரு காளையும் அல்லது செம்மறியாட்டுக் கடாவும், ஒவ்வொரு செம்மறியாட்டுக் குட்டியும் அல்லது வெள்ளாட்டுக்குட்டியும் இவ்விதமாகவே ஆயத்தப்படுத்தப்பட வேண்டும். 12 நீ ஆயத்தப்படுத்தும் காணிக்கை ஒவ்வொன்றுக்கும், இவ்வாறே செய்யவேண்டும்.
13 “ ‘சொந்ததேசத்தில் பிறந்த ஒவ்வொருவனும் யெகோவாவுக்கு மகிழ்ச்சியூட்டும் நறுமணமாக, நெருப்பினால் செலுத்தப்படும் காணிக்கையைக் கொண்டுவரும்போது, இவை எல்லாவற்றையும் இவ்விதமாகவே செய்யவேண்டும். 14 தலைமுறைதோறும் ஒரு அந்நியனாவது அல்லது உங்கள் மத்தியில் வாழும் வேறு யாராவது, யெகோவாவுக்கு மகிழ்ச்சியூட்டும் நறுமணமாக நெருப்பினால் செலுத்தப்படுகிற காணிக்கையைக் கொண்டுவரும்போது, அவனும் நீங்கள் செய்வதுபோலவே சரியாகச் செய்யவேண்டும். 15 மக்கள் சமுதாயத்தில் உங்களுக்கும், உங்கள் மத்தியில் வாழும் அந்நியருக்கும் ஒரே விதிமுறைகளையே நியமிக்கவேண்டும்; இது தலைமுறைதோறும் இருக்கவேண்டிய ஒரு நிரந்தர நியமமாகும். நீங்களும் அந்நியர்களும் யெகோவா முன்னிலையில் பாகுபாடின்றி ஒரேவிதமாகவே இருக்கவேண்டும். 16 உங்களுக்கும் உங்களோடிருக்கும் அந்நியருக்கும் அதே சட்டங்களும், விதிமுறைகளுமே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்’ ” என்றார்.
17 பின்பு யெகோவா மோசேயிடம், 18 “நீ இஸ்ரயேலருடன் பேசி, அவர்களுக்கு சொல்லவேண்டியதாவது: ‘நான் உங்களைக் கூட்டிக்கொண்டுபோகும் நாட்டுக்கு நீங்கள் போய் 19 அந்நாட்டின் உணவை நீங்கள் சாப்பிடும்போது, அதன் ஒரு பங்கை யெகோவாவுக்குக் காணிக்கையாகச் செலுத்துங்கள். 20 நீங்கள் முதல் அரைக்கும் மாவினால் செய்யப்படும் ஒரு அடை அப்பத்தை, சூடடிக்கும் களத்திலிருந்து வரும் காணிக்கையாகச் செலுத்துங்கள். 21 வரவிருக்கும் தலைமுறைகளிலெல்லாம், நீங்கள் முதல் அரைக்கும் மாவிலிருந்து இக்காணிக்கையை யெகோவாவுக்குக் கொடுக்கவேண்டும்.
தற்செயலான பாவத்திற்கு காணிக்கை
22 “ ‘யெகோவா மோசேக்குக் கொடுத்த கட்டளைகளில் எதையாவது நீங்கள் தற்செயலாகக் கைக்கொள்ளத் தவறக்கூடும். 23 அது மோசே மூலம் யெகோவா கொடுத்த கட்டளையாகவும், அது யெகோவா கொடுத்த நாளிலிருந்து வரப்போகும் தலைமுறைதோறும் கடைப்பிடிக்க வேண்டிய கட்டளையாகவும் இருக்கலாம். 24 தவறி மக்கள் சமுதாயத்திற்குத் தெரியாமல் தற்செயலாகச் செய்யப்பட்டிருக்கலாம். அப்பொழுது மக்களின் முழு சமுதாயமும் யெகோவாவுக்கு மகிழ்ச்சியூட்டும் நறுமணமான தகன காணிக்கையாக ஒரு இளம்காளையைச் செலுத்தவேண்டும். அத்துடன் அதற்குரிய தானிய காணிக்கையையும், பானகாணிக்கையையும், பாவநிவாரண பலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தவேண்டும். 25 ஆசாரியன் முழு இஸ்ரயேல் சமுதாயத்தினருக்காகவும், பாவநிவிர்த்தி செய்யவேண்டும். அப்பொழுது அவர்கள் மன்னிக்கப்படுவார்கள். ஏனெனில் அது தற்செயலாகச் செய்யப்பட்ட பாவமாகையாலும், அவர்கள் யெகோவாவுக்கு தங்களுடைய குற்றத்திற்காக நெருப்பினால் செலுத்தப்பட்ட ஒரு காணிக்கையையும் ஒரு பாவநிவாரண காணிக்கையையும் கொண்டுவந்திருந்தபடியாலும் அவர்கள் பாவம் அவர்களுக்கு மன்னிக்கப்படும். 26 முழு இஸ்ரயேல் சமுதாயமும், அவர்களில் வாழும் அந்நியர்களும் மன்னிக்கப்படுவார்கள். ஏனெனில், எல்லா மக்களும் தற்செயலாக செய்யப்பட்ட குற்றத்திலேயே சம்பந்தப்பட்டார்கள்.
27 “ ‘ஆனால் ஒருவன் மட்டும் தற்செயலாகப் பாவம்செய்தால், பாவநிவாரண காணிக்கையாக அவன் ஒரு வயதுடைய பெண் வெள்ளாட்டுக்குட்டியைக் கொண்டுவர வேண்டும். 28 ஆசாரியன், தற்செயலாகப் பாவம் செய்ததினால் தவறுசெய்த ஒருவனுக்காக, யெகோவாவுக்கு முன்பாகப் பாவநிவிர்த்தி செய்யவேண்டும். அவனுக்காகப் பாவநிவிர்த்தி செய்யப்பட்டபின் அவன் மன்னிக்கப்படுவான். 29 ஊரில் பிறந்த இஸ்ரயேலனோ அல்லது அந்நியனோ தற்செயலாகப் பாவம் செய்கிற எவனுக்கும் இந்த ஒரேவிதமான சட்டத்தின்படியே செய்யப்படவேண்டும்.
30 “ ‘ஆனால் ஊரில் பிறந்தவனோ அல்லது அந்நியனோ யாராயிருந்தாலும், ஒருவன் அறிந்து துணிகரமாகப் பாவம்செய்தால் அவன் யெகோவாவை நிந்திக்கிறான். ஆகையால் அம்மனிதன் தன் மக்களிலிருந்து அகற்றப்படவேண்டும். 31 அவன் யெகோவாவின் வார்த்தையை அற்பமாய் எண்ணி, அவருடைய கட்டளைகளை மீறினபடியால், அம்மனிதன் நிச்சயமாக அகற்றப்படவேண்டும். அவன் குற்றம் அவன் மேலேயே இருக்கும் என்றார்.’ ”
ஓய்வுநாளை மீறுகிறவனுக்கு மரண தண்டனை
32 இஸ்ரயேலர் பாலைவனத்தில் இருக்கையில், ஓய்வுநாளில் ஒரு மனிதன் விறகு பொறுக்கிக்கொண்டிருந்தான். 33 அவன் விறகு பொறுக்குவதைக் கண்டவர்கள் அவனை மோசேயிடமும், ஆரோனிடமும், சபையார் அனைவரிடமும் கொண்டுவந்தார்கள். 34 அவனுக்கு என்ன செய்யப்பட வேண்டுமென்பது தெளிவாய் இல்லாதிருந்ததால், அவனைத் தடுப்புக் காவலில் வைத்தார்கள். 35 அப்பொழுது யெகோவா மோசேயிடம், “இந்த மனிதன் சாகவேண்டும். அவனை முகாமுக்கு வெளியே கொண்டுபோய் முழுசபையும் அவன்மேல் கல்லெறிய வேண்டும்” என்றார். 36 எனவே, கூடியிருந்த சபையார் அவனை முகாமுக்கு வெளியே கொண்டுவந்து யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே, அவனைக் கல்லெறிந்து கொன்றார்கள்.
உடையில் தொங்கல்கள்
37 பின்பு யெகோவா மோசேயிடம், 38 “நீ இஸ்ரயேலரிடம் பேசி, அவர்களுக்குச் சொல்லவேண்டியதாவது: ‘நீங்கள் தொங்கல்களைச் செய்து, அவை ஒவ்வொன்றையும் ஒவ்வொரு நீல நாடாவினால் கட்டி, உங்கள் உடைகளின் ஓரங்களில் தொங்கவிட வேண்டும். இதை தலைமுறைதோறும் நீங்கள் செய்யவேண்டும். 39 நீங்கள் இந்தக் தொங்கல்களைப் பார்க்கும் போதெல்லாம் யெகோவாவின் கட்டளைகளை நினைவுபடுத்திக் கொள்வீர்கள். அதனால் நீங்கள் அவற்றிற்குக் கீழ்ப்படிவீர்கள். உங்களுடைய சொந்த இருதய ஆசைகளின்படியும், கண்களின் ஆசையின்படியும் போய் இறைவனை வழிபடாமல் உங்களை வேசித்தனத்திற்கு உள்ளாக்காதிருப்பீர்கள். 40 நீங்கள் எனது எல்லா கட்டளைகளுக்கும் கீழ்ப்படிய நினைவுகூர்ந்து உங்கள் இறைவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டு இருப்பீர்கள். 41 உங்கள் இறைவனாயிருக்கும்படி, எகிப்திலிருந்து உங்களைக் கொண்டுவந்த உங்கள் இறைவனாகிய யெகோவா நானே. நானே உங்கள் இறைவனாகிய யெகோவா’ ” என்றார்.