16
கோராகு, தாதான், அபிராம் ஆகியோரின் கலகம்
லேவி கோத்திரத்தைச் சேர்ந்த கோகாத்தின் பேரனும், இத்சேயாரின் மகனுமான கோராகு என்பவனும், ரூபன் கோத்திரத்தைச் சேர்ந்தவர்களான எலியாபின் மக்களான தாத்தான், அபிராம் என்பவர்களும், பேலேத்தின் மகன் ஓன் என்பவனும், இஸ்ரயேல் மக்களில் சபைக்குத் தலைவர்களும் சங்கத்திற்கு அழைக்கப்பட்டவர்களும் பிரபலமானவர்களுமாகிய 250 பேர்களோடும் கூட மோசேக்கு முன்பாக துணிகரமாய் எழும்பினார்கள். அவர்கள் மோசேயையும் ஆரோனையும் எதிர்த்து ஒரு குழுவாகச் சேர்ந்துவந்து, அவர்களிடம், “நீங்கள் அளவுக்குமிஞ்சிப் போய்விட்டீர்கள். இந்த மக்கள் சமுதாயம் எல்லோரும், அதிலுள்ள ஒவ்வொருவரும் பரிசுத்தமாகவே இருக்கிறார்கள். யெகோவாவும் அவர்களுடன் இருக்கிறார். அப்படியிருக்க நீங்கள் யெகோவாவின் சபைக்கு மேலாக உங்களை ஏன் உயர்த்துகிறீர்கள்?” என்று கேட்டார்கள்.
மோசே அதைக் கேட்டதும் முகங்குப்புற விழுந்தான். அப்பொழுது மோசே, கோராகிடமும் அவனைப் பின்பற்றி வந்த எல்லோரிடமும் யார் அவருடையவன்? யார் பரிசுத்தமானவன்? என்பதை நாளை காலையில் யெகோவா உங்களுக்குக் காண்பிப்பார். அப்படிப்பட்டவனை அவர் தம் அருகே வரப்பண்ணுவார். தாம் தெரிந்துகொள்ளும் மனிதனைத் தம் அருகே வரச்செய்வார். கோராகே! நீயும் உன்னைப் பின்பற்றும் எல்லோரும் செய்யவேண்டியதாவது, தூபகிண்ணங்களை எடுத்து, நாளைக்கு யெகோவா முன்னிலையில் அவற்றில் நெருப்புப் போட்டு, நறுமணத்தூளைப் போடுங்கள். அப்பொழுது யெகோவா தெரிந்துகொள்கிறவனே பரிசுத்தமானவனாய் இருப்பான். லேவியரே நீங்கள்தான் அளவுக்குமிஞ்சிப் போய்விட்டீர்கள்! என்றான்.
பின்பு மோசே கோராகிடம், “லேவியரே! நீங்கள் இப்பொழுது எனக்குச் செவிகொடுங்கள். இஸ்ரயேலின் இறைவன் மற்ற இஸ்ரயேல் சமுதாயத்திலிருந்து உங்களை வேறுபிரித்து, யெகோவாவினுடைய இறைசமுக கூடாரத்தில் அவருடைய வேலையைச் செய்யவும், மக்கள் சமுதாயத்தின்முன் நிற்கவும், அவர்களுக்குப் பணிசெய்யவும், உங்களைத் தம் அருகே கொண்டுவந்தது உங்களுக்குப் போதாதோ? 10 அவர் உங்களையும் உங்கள் உடன்சகோதரர் லேவியரையும் தம் அருகே கொண்டுவந்திருக்கிறார். ஆனால் இப்பொழுது நீங்களோ ஆசாரியப்பட்டத்தையும் எடுத்துக்கொள்ள முயற்சிக்கிறீர்கள். 11 நீங்களும் உங்களைப் பின்பற்றுகிறவர்களும் யெகோவாவுக்கு எதிராகவே கூட்டம் கூடியிருக்கிறீர்கள். ஆரோனுக்கு எதிராக நீங்கள் முறுமுறுப்பதற்கு அவன் யார்?” என்று கேட்டான்.
12 அதன்பின் மோசே, எலியாபின் பிள்ளைகளான தாத்தான், அபிராம் ஆகியோரை அழைத்தான். ஆனால் அவர்களோ, “நாங்கள் வரமாட்டோம்! 13 பாலும் தேனும் ஓடுகிற ஒரு நாட்டிலிருந்து பாலைவனத்தில் சாகடிக்க நீ எங்களைக் கொண்டுவந்தது போதாதோ? இப்பொழுது நீ எங்கள்மேல் அதிகாரமும் செலுத்தப்பார்க்கிறாயோ? 14 மேலும் நீ எங்களைப் பாலும் தேனும் ஓடுகிற நாட்டிற்குக் கொண்டுவரவுமில்லை, திராட்சைத் தோட்டங்களை உரிமையாகத் தரவுமில்லை. நீ இந்த மனிதரை கண்ணில்லாத குருடராக்க நினைத்தாயோ? நாங்கள் வரவேமாட்டோம்” என்றார்கள்.
15 அப்பொழுது மோசே மிகவும் கோபமடைந்தான். அவன் யெகோவாவிடம், “நீர் அவர்களின் காணிக்கைகளை எற்றுக்கொள்ளவேண்டாம். நான் அவர்களிடமிருந்து கழுதையையேனும் எடுத்துக்கொள்ளவும் இல்லை. அவர்களில் ஒருவனுக்கும் அநியாயம் செய்ததுமில்லை” என்றான்.
16 பின்பு மோசே கோராகிடம், “நீயும் உன்னைப் பின்பற்றுகிறவர்களும் நாளை யெகோவாவுக்கு முன்பாக வரவேண்டும். நீயும், அவர்களும், ஆரோனும் வரவேண்டும். 17 ஒவ்வொருவரும் தன்தன் தூபகிண்ணத்தை எடுத்து, நறுமணத்தூளை அதற்குள்ளே போட்டு அதை யெகோவாவுக்கு முன்பாகக் கொண்டுவர வேண்டும். ஒவ்வொருவரும் ஆளுக்கு ஒவ்வொன்றாய் 250 தூபகிண்ணங்களுடன் வாருங்கள். நீயும், ஆரோனும், உங்கள் தூபகிண்ணங்களைக் கொண்டுவர வேண்டும்” என்றான். 18 எனவே அவர்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய தூபகிண்ணங்களில் நெருப்பைப்போட்டு, அதில் நறுமணத்தூளையும் போட்டுக்கொண்டு சபைக்கூடார வாசலில் மோசேயுடனும், ஆரோனுடனும் நின்றார்கள். 19 கோராகு அவர்களுக்கெதிராக சபைக்கூடார வாசலில் தன்னைப் பின்பற்றியவர்களைக் கூட்டிச் சேர்த்தபோது, யெகோவாவின் மகிமை சபையார் அனைவருக்கும் காணப்பட்டது. 20 அப்பொழுது யெகோவா மோசேயிடமும், ஆரோனிடமும், 21 “உடனடியாகவே நான் அவர்களை அழிக்கும்படி இந்தச் சபையாரிடமிருந்து உங்களை விலக்கிக்கொள்ளுங்கள்” என்றார்.
22 உடனே மோசேயும், ஆரோனும் முகங்குப்புற விழுந்து, “இறைவனே! எல்லா மனுக்குலத்தின் ஆவிகளுக்கும் இறைவனே! ஒருவன் மட்டும் பாவம்செய்கையில் நீர் சபையார் அனைவர்மேலும் கோபமாயிருப்பீரோ!” என்று கதறினார்கள்.
23 அப்பொழுது யெகோவா மோசேயிடம், 24 “நீங்கள் கோராகு, தாத்தான், ‘அபிராம் ஆகியோரின் கூடாரங்களைவிட்டு அகன்றுபோங்கள் என்று நீ சபையாருக்குச் சொல்’ ” என்றார்.
25 மோசே எழுந்து தாத்தான், அபிராம் ஆகியோரின் கூடாரத்திற்கு விரைந்து போனான். அவனைத் தொடர்ந்து இஸ்ரயேலின் சபைத்தலைவர்களும் போனார்கள். 26 அவன் சபையாரைப் பார்த்து, “கொடுமையான இந்த மனிதர்களின் கூடாரங்களைவிட்டு அகன்றுபோங்கள். அவர்களுக்குரிய எதையும் தொடவேண்டாம். மீறினால் அவர்களுடைய பாவங்களினால் அவர்களுக்கு வரும் தண்டனையில் நீங்களும் அள்ளுண்டு போவீர்கள்” என்றான். 27 எனவே அவர்கள் கோராகு, தாத்தான், அபிராம் ஆகியோரின் கூடாரங்களைவிட்டு அகன்றுபோனார்கள். அப்பொழுது தாத்தானும், அபிராமும் வெளியே வந்து தங்கள் மனைவிகளுடனும், தங்கள் பிள்ளைகளுடனும், குழந்தைகளுடனும் அவர்களுடைய கூடாரங்களின் வாசலில் நின்றார்கள்.
28 மோசே அவர்களிடம், “இவற்றைச் செய்யும்படி யெகோவாவே என்னை அனுப்பியிருக்கிறார் என்பதையும், இது என்னுடைய சொந்த எண்ணம் அல்ல என்பதையும் இப்போது நடக்கப்போவதிலிருந்து நீங்கள் அறிந்துகொள்வீர்கள். 29 இந்த மனிதர் இயற்கை மரணத்தை அடைந்து, மனிதர்களுக்கு நேரிடுகிறதுபோல மட்டும் அனுபவிப்பார்களானால், யெகோவா என்னை அனுப்பவில்லை. 30 ஆனால் யெகோவா முற்றிலும் புதுமையான ஒன்றைச் செய்து, பூமி தன் வாயைத் திறந்து, அம்மனிதர்களையும் அவர்களுடைய எல்லாவற்றையும் விழுங்கினால், அவர்கள் உயிரோடு பாதாளத்திற்குள் இறங்கினால், இந்த மனிதர் யெகோவாவை அவமதிப்பாய் நடத்தினார்கள் என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள்” என்றான்.
31 அவன் இவற்றைச் சொல்லி முடித்ததுமே அவர்களுக்குக் கீழே இருந்த நிலம் இரண்டாகப் பிளந்தது. 32 பூமி தன் வாயைத் திறந்து அவர்களையும், அவர்களுடைய குடும்பங்களையும், கோராகின் ஆட்களையும், அவர்களின் உடைமைகளையும் விழுங்கிப்போட்டது. 33 அவர்கள் தங்கள் உடைமைகள் அனைத்துடனும் உயிரோடு பாதாளத்திற்குள் போனார்கள். பூமி அவர்களின் மேலாக மூடிக்கொண்டது. அவர்கள் அழிந்து மக்கள் சமுதாயத்திலிருந்து இல்லாமற்போனார்கள். 34 அவர்கள் கூக்குரலைக் கேட்ட, சுற்றி நின்ற இஸ்ரயேலர் எல்லோரும், “பூமி எங்களையும் விழுங்கப்போகிறது” என்று சத்தமிட்டுக்கொண்டு விரைந்து ஓடினார்கள்.
35 அத்துடன் யெகோவாவிடமிருந்து நெருப்பு புறப்பட்டுவந்து, தூபங்காட்டிக்கொண்டிருந்த அந்த 250 மனிதரையும் எரித்துப்போட்டது.
36 பின்பு யெகோவா மோசேயிடம், 37 “நீ ஆரோனின் மகனான ஆசாரியன் எலெயாசாரிடம் சொல்லவேண்டியதாவது, எரிந்துகொண்டிருக்கும் நெருப்பில் இருந்து தூபகிண்ணங்களை வெளியே எடுத்து, அவற்றில் இருக்கும் தணல்களைச் சற்று தூரத்திற்கு அப்பால் சிதற எறிந்துவிடு. ஏனெனில், அத்தூபகிண்ணங்கள் பரிசுத்தமானவை. 38 அவை தங்கள் உயிர்களையே இழக்கும்படி பாவம் செய்த அந்த மனிதர்களின் தூபகிண்ணங்களாயிருந்தும் அவை பரிசுத்தமானவை. அவை யெகோவா முன்பாக வைக்கப்பட்டதனால் பரிசுத்தமாயிருக்கின்றன. எனவே அவற்றைத் தகடுகளாக அடித்துப் பலிபீடத்தை மூடவேண்டும். அவை இஸ்ரயேலருக்கு ஒரு அடையாளமாக இருக்கட்டும்” என்றார்.
39 அப்படியே எரியுண்ட மனிதர்களால் கொண்டுவரப்பட்டிருந்த வெண்கலத் தூபகிண்ணங்களை ஆசாரியன் எலெயாசார் சேர்த்தெடுத்தான். அவன் அதைப் பலிபீடத்தை மூடுவதற்கான தகடுகளாக அடித்தான். 40 மோசேயின் மூலம் யெகோவா கட்டளையிட்டபடியே அவற்றைச் செய்தான். “ஆரோனின் சந்ததியில் வந்தவனைத்தவிர, வேறு எவனும் யெகோவாவுக்கு முன்பாகத் தூபங்காட்ட வரக்கூடாது. இதை மீறினால், அவன் கோராகையும், அவனைப் பின்பற்றியவர்களையும் போலாவான்” என்பதை இஸ்ரயேலருக்கு நினைவுபடுத்தவே இது செய்யப்பட்டது.
41 மறுநாள் இஸ்ரயேலரின் முழுசமூகமும் மோசேக்கும், ஆரோனுக்கும் விரோதமாகக் கூடியது. “யெகோவாவின் மக்களை நீங்கள் கொன்று விட்டீர்கள்” என்று அவர்கள் முறுமுறுத்தார்கள்.
42 மோசேக்கும், ஆரோனுக்கும் விரோதமாகக் கூடிவந்த அந்த மக்கள்சபை, சபைக் கூடாரத்தை நோக்கித் திரும்பியபோது, திடீரென மேகம் சபைக் கூடாரத்தை மூடியது. யெகோவாவின் மகிமையும் அவர்களுக்குக் காணப்பட்டது. 43 அப்பொழுது மோசேயும், ஆரோனும் சபைக் கூடாரத்திற்குமுன் போனார்கள். 44 யெகோவா மோசேயிடம் சொன்னதாவது: 45 “நான் உடனே இவர்களை அழிக்கும்படி நீங்கள் இவர்களைவிட்டு விலகி அப்பால் போங்கள்” என்றார். ஆனால் அவர்களோ முகங்குப்புற விழுந்தார்கள்.
46 அப்பொழுது மோசே ஆரோனிடம், “நீ உன் தூபகிண்ணத்தை எடுத்து, பலிபீடத்தின் நெருப்பையும், நறுமணத்தூளையும் அதில் போட்டு, சபையாருக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படி அவர்களிடம் விரைந்து போ. யெகோவாவின் கோபம் வந்திருக்கிறது; கொள்ளைநோயும் தொடங்கிவிட்டது” என்றான். 47 மோசே சொன்னபடியே ஆரோன் செய்து, சபைக்குள் ஓடிப்போனான். அங்கே கொள்ளைநோய் மக்கள் மத்தியில் தொடங்கியிருந்தது. ஆனாலும் ஆரோன் தூபமிட்டு அவர்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்தான். 48 அவன் உயிரோடிருப்பவர்களுக்கும், இறந்தவர்களுக்கும் இடையிலே நின்றான். அப்பொழுது கொள்ளைநோய் நின்றுபோயிற்று. 49 கோராகைப் பின்பற்றிச் செத்தவர்களைவிட 14,700 பேர் வாதையினால் செத்தார்கள். 50 கொள்ளைநோய் நின்றுவிட்டபடியால், ஆரோன் சபைக்கூடார வாசலில் இருந்து மோசேயிடம் திரும்பிவந்தான்.