4
காதலன்
என் அன்பே, நீ எவ்வளவு அழகானவள்!
ஆ, நீ எவ்வளவு அழகானவள்;
முகத்திரையின் பின்னாலுள்ள உன் கண்கள் புறாக்கண்கள்;
உனது தலைமுடி கீலேயாத் மலைச்சரிவில் இருந்து இறங்கிவரும்
வெள்ளாட்டு மந்தையைப் போன்றது.
உன் பற்கள் முடி கத்தரிக்கப்பட்டு,
குளிப்பாட்டப்பட்டுக் கரையேறுகிற செம்மறியாட்டு மந்தையைப்போல் இருக்கின்றன.
அவை ஒவ்வொன்றும் இரட்டைக்குட்டி ஈன்றவை,
அவற்றில் எதுவும் மலடாய் அல்ல.
உன் உதடுகள் செம்பட்டு நாடா போன்றவை;
உன் வாய் அழகானது.
உனது முகத்திரையின் பின்னால் உள்ள உன் கன்னங்கள்
பிளந்த மாதுளம் பழத்திற்கு ஒப்பானவை.
உன் கழுத்து தாவீதின் கோபுரம்போல் இருக்கிறது,
அடுக்கடுக்காய் ஆயிரக்கணக்கான கேடயங்கள் தொங்குகின்றன;
அவைகளெல்லாம்
போர் வீரர்களுடைய ஆயுதங்களே.
உனது மார்பகங்கள் இரண்டு மான்குட்டிகள் போன்றவை,
அவை லில்லிகள் நடுவில் மேயும்
வெளிமானின் இரட்டைக்குட்டிகள் போன்றவை.
பொழுது சாய்வதற்குள்,
நிழல் மறைவதற்குள்,
நான் வெள்ளைப்போள மலைக்கும்,
சாம்பிராணிக் குன்றுக்கும் விரைந்து செல்வேன்.
என் அன்பே, நீ முற்றிலும் அழகானவள்;
உன்னில் குறைபாடு எதுவும் இல்லை.
 
லெபனோனில் இருந்து என்னுடன் வா, என் மணமகளே,
லெபனோனில் இருந்து என்னுடன் வா.
அமனா மலைச் சிகரத்திலிருந்தும்,
சேனீர் மற்றும் எர்மோன் மலை உச்சியிலிருந்தும்,
சிங்கக் குகைகளிலிருந்தும்,
சிறுத்தைப் புலிகள் தங்கும் இடமான மலைகளிலிருந்தும் இறங்கி வா.
என் சகோதரியே, என் மணமகளே, நீ என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டாய்;
உன் கண்களின் ஒரு பார்வையினாலே,
உன் கழுத்து மாலையின் ஒரு மணியினாலே
என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டாய்.
10 என் சகோதரியே, என் மணமகளே, உன் அன்பு எவ்வளவு இனிமையானது!
உன் அன்பு திராட்சை இரசத்திலும் இன்பமானது;
உனது வாசனைத் தைலத்தின் நறுமணம்
எல்லாவகை வாசனைத் தைலத்தைப் பார்க்கிலும் சிறந்தது!
11 என் மணமகளே, உன் உதடுகள் தேன்கூட்டைப்போல் இனிமையைப் பொழிகின்றன;
உன் நாவின்கீழே பாலும் தேனும் இருக்கின்றன.
உன் உடைகளின் நறுமணம்
லெபனோனின் நறுமணம்போல் இருக்கின்றது.
12 என் சகோதரியே, என் மணமகளே, நீ சுற்றி அடைக்கப்பட்ட தோட்டம்,
நீ பூட்டப்பட்ட நீரூற்று, முத்திரையிடப்பட்ட கிணறு.
13 மாதுளைத் தோட்டத்தைப்போல தளிர்த்துள்ளாய்;
அங்கே சிறந்த கனிகளுண்டு,
மருதோன்றிச் செடிகளும் நளதச்செடிகளும் உண்டு.
14 அங்கே நளதம், குங்குமம்,
வசம்பு, இலவங்கம்,
எல்லாவித நறுமண மரங்களும்,
வெள்ளைப்போளமும் சந்தனமும்,
எல்லாச் சிறந்த நறுமணச்செடிகளும் நிறைந்துள்ளது.
15 நீ தோட்டத்திலுள்ள நீரூற்று,
ஜீவத்தண்ணீரின் கிணறு,
லெபனோனிலிருந்து ஓடிவரும் நீரோடை.
காதலி
16 வாடைக்காற்றே எழும்பு,
தென்றல் காற்றே வா!
வாசனை நிரம்பிப் பரவும்படி
என் தோட்டத்தில் வீசு.
என் காதலர் தமது தோட்டத்திற்குள் வந்து
அதின் சிறந்த பழங்களைச் சுவைக்கட்டும்.